Thursday, April 21, 2022

V.013 - இம்பரவை - மடக்கு

2010-04-17

V.013 - இம்பரவை - மடக்கு

----------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


இம்பரவை கிட்டும் எனவெண்ணி உழலாதே

உம்பரவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்

நம்பரவை அரைதனிலோர் நாணாகப் பூணுமிறை

நம்பரவை கணவர்க்கு நற்றோழர் தாள்தொழுதே.


பதம் பிரித்து:

இம்பர் அவை கிட்டும் என எண்ணி உழலாதே;

உம்பர்-அவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம்,

நம்பு; அரவை அரைதனில் ஓர் நாணாகப் பூணும் இறை,

நம் பரவை-கணவர்க்கு நல்-தோழர் தாள்-தொழுதே.


இம்பர் அவை கிட்டும் என எண்ணி உழலாதே - மனமே! இம்மையில் (நீ ஆசைப்படும்) அப்பொருள்களெல்லாம் கிட்டும் என்று எண்ணி மிகவும் முயற்சி செய்தும் அவை கிட்டாமையால் வருந்தி உழலாதே; (இம்பர் - இவ்வுலகு; இவ்விடத்தே); (அவை - அப்பொருள்கள் - உலகவிஷயங்கள்);

உம்பர்-அவை வீற்றிருக்கும் உயர்நிலையும் பெற்றிடலாம், நம்பு - தேவர்சபையில் வீற்றிருக்கும் உயர்ந்த நிலையையும் நீ அடையலாம்; சந்தேகப்படாதே; அது நிச்சயம்; (உம்பர் - வானுலகு; தேவர்கள்); (அவை - சபை);

அரவை அரைதனில் ஓர் நாணாகப் பூணும் இறை - பாம்பை அரையில் அரைநாணாகக் கட்டிய இறைவர்; (அரவு - பாம்பு); (இறை - இறைவன்);

நம் பரவை-கணவர்க்கு நல்-தோழர் தாள்-தொழுதே - பரவையார்-கணவரான சுந்தரருக்கு நல்ல தோழரான நம் சிவபெருமானார் திருவடியைத் தொழுது;


பிற்குறிப்புகள் :

1. இப்பாடலில் - அவை & நம்பரவை - என்ற சொற்களில், சொற்றொடர்களில் மடக்கு என்ற சொல்லணி.

2. பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 294 -

பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல்

ஆர்பரவை யணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை

சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல்

ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை யெழுபரவை.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment