Thursday, April 21, 2022

S.116 - சிவன் - ஒலிபெருக்கி (loudspeaker) - சிலேடை

2010-04-10

S.116 - சிவன் - ஒலிபெருக்கி (loudspeaker) - சிலேடை

------------------

ஒலியுரு வாகுமுயர் கம்பத் துறையும்

வலிமலியு மாறு மலைக்கும் - கலிமிகக்

கண்டவர் கைகுவிப்பர் உய்ய ஒலிபெருக்கி

அண்டர்கள் ஏத்தும் அரன்.


சொற்பொருள்:

கம்பம் - 1. தூண்; / 2. கச்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில்;

வலி - 1. நோவு; / 2. வலிமை;

மலைத்தல் - வருத்துதல்;

அலைத்தல் - அலைமோதுதல்;

கலி - 1. ஆரவாரம்; பேரொலி; / 2. துன்பம்;

மலிதல் - மிகுதல்;


ஒலிபெருக்கி (loudspeaker):

ஒலி உருவாகும் - அதனில் ஒலி தோன்றும்;

உயர்-கம்பத்து உறையும் - உயரமான கம்பத்தில் இருக்கும்;

வலி மலியுமாறு மலைக்கும் - (அதிக ஓசையால் காது) வலி மிகுமாறு வருத்தும்; (மலிதல் - மிகுதல்);

கலி மிகக் கண்டவர் கைகுவிப்பர் உய்ய - ஓசை அதிகமாக இருக்கக் கண்டவர், அவ்வோசை எப்போது தீருமோ என்று பிரார்த்தித்திருப்பர்;

ஒலிபெருக்கி - ஒலிபெருக்கி (loudspeaker) என்ற கருவி.


சிவன்:

ஒலி உரு ஆகும் - நாதரூபி; (உரு - வடிவம்);

உயர்-கம்பத்து உறையும் - மேன்மையான கச்சித் திருவேகம்பத்தில் உறைபவன்;

வலி மலியும் ஆறும் அலைக்கும் - வலிமை மிகுந்தவன்; வலிமை மிக்க (வலிய அலைகள் மிக்க) கங்கையும் (சடையில்) அலைமோதும்;

கலி மிகக் கண்டவர் கைகுவிப்பர் உய்ய ஒலி பெருக்கி - மிகுந்த துன்பத்தில் உள்ளோர் தம் துயர் தீரவேண்டி உரக்க முறையிட்டுக் கைதொழுவர்;

(ஒலி பெருக்கி) அண்டர்கள் ஏத்தும் அரன் - (பெருங்குரலில்) தேவரெல்லாம் துதிக்கும் ஹரன்; ("ஒலிபெருக்கி" என்பதை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment