2010-09-18
T.127 - தஞ்சாவூர் இராசராசேச்சரம் - மந்திரம் ஒன்றையும்
-----------------
(வண்ணவிருத்தம்;
தந்தன தந்தன .. தனதான)
மந்திரம் ஒன்றையும் .. அறியாமல்
.. .. வந்தடை பண்டைய .. வினைமூடி
.. வஞ்சக ஐம்புலன் .. நசையாலே
.. .. வன்பிணி மண்டிட .. அழிவேனோ
சந்திரன் மென்சடை .. அணிவோனே
.. .. சங்கர தஞ்சையில் .. அடியார்கள்
.. சந்தம ணங்கமழ் .. தமிழ்பாடத்
.. .. தந்தரு ளும்பெரு .. வுடையானே
கந்தனை அன்றருள் .. எரியாரும்
.. .. கண்டிக ழுந்திரு .. நுதலானே
.. கஞ்சனும் விண்டுவு(ம்) .. மிகநேடிக்
.. .. கம்பமு றும்படி .. எழுசோதீ
சந்தத(ம்) நின்பெயர் .. நினைமாணி
.. .. தன்புடை வந்தடை .. நமன்மாளத்
.. தண்டனை தந்திடு .. கழலானே
.. .. சங்கரி ஒன்றிய .. பெருமானே.
பதம் பிரித்து:
மந்திரம் ஒன்றையும் அறியாமல்,
.. .. வந்து அடை பண்டைய வினை மூடி,
.. வஞ்சக ஐம்புலன் நசையாலே,
.. .. வன்-பிணி மண்டிட அழிவேனோ?
சந்திரன் மென்சடை அணிவோனே;
.. .. சங்கர; தஞ்சையில் அடியார்கள்
.. சந்த-மணம் கமழ் தமிழ் பாடத்
.. .. தந்தருளும் பெருவுடையானே;
கந்தனை அன்று அருள் எரி ஆரும்
.. .. கண் திகழும் திருநுதலானே;
.. கஞ்சனும் விண்டுவு(ம்) மிக நேடிக்
.. .. கம்பம் உறும்படி எழு சோதீ;
சந்தத(ம்) நின் பெயர் நினை மாணி
.. .. தன் புடை வந்து அடை நமன் மாளத்
.. தண்டனை தந்திடு கழலானே;
.. .. சங்கரி ஒன்றிய பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
மந்திரம் ஒன்றையும் அறியாமல் - வேதமந்திரங்கள் எவற்றையும் அறியாமல்; (சுந்தரர் தேவாரம் - 7.100.3 - "மந்திரம் ஒன்றறியேன்");
வந்து அடை பண்டைய வினை மூடி - என்னை வந்து அடைகின்ற பழவினைகள் சூழ்ந்து மூடி;
வஞ்சக ஐம்புலன் நசையாலே, வன்-பிணி மண்டிட அழிவேனோ - வஞ்சம் செய்யும் ஐம்புலன் ஆசைகளால் கொடிய பிணி மிகுந்து, நான் அழிந்துவிவிடாதபடி என்னைக் காத்தருள்வாயாக; (நசை - ஆசை);
சந்திரன் மென்சடை அணிவோனே - சந்திரனை மென்மையான சடையில் அணிந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.13.3 - "செம்மென்சடை யவைதாழ்வுற");
சங்கர - சங்கரனே; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன் - சிவன் திருநாமம்);
தஞ்சையில் அடியார்கள் சந்த-மணம் கமழ் தமிழ் பாடத் தந்தருளும் பெருவுடையானே - தஞ்சாவூரில் அடியவர்கள் அழகும் ஓசைநயமும் மிக்க தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்க, அவர்களுக்கு அருள்புரியும் பெருவுடையானே; (சந்தம் - செய்யுளின் வண்ணம்; சந்தனம்; அழகு); (சந்தமணம் கமழ் தமிழ் - "சந்தத் தமிழ், மணம் கமழ் தமிழ்" என்று இயைக்க); (தந்தருளுதல் - ஈதல்; கொடுத்தல்); (* பெருவுடையான் - பிரகதீஸ்வரன் - தஞ்சைப் பெரியகோயில் ஈசன் திருநாமம்);
கந்தனை அன்று அருள் எரி ஆரும் கண் திகழும் திருநுதலானே - முன்பு முருகனை அருளிய தீப் பொருந்திய கண் திகழும் நெற்றியை உடையவனே; (எரி - நெருப்பு); (நுதல் - நெற்றி);
கஞ்சனும் விண்டுவும் மிக நேடிக் கம்பம் உறும்படி எழு சோதீ - பிரமனும் திருமாலும் மிகவும் தேடி நடுங்கும்படி ஓங்கிய ஜோதிவடிவினனே; (கஞ்சன் - பிரமன்); (விண்டு - விஷ்ணு); (நேடுதல் - தேடுதல்); (கம்பம் - நடுக்கம்; அச்சம்);
சந்ததம் நின் பெயர் நினை மாணி-தன் புடை வந்து அடை நமன் மாளத் தண்டனை தந்திடு கழலானே - எப்பொழுதும் உன் திருநாமத்தைத் தியானித்த மார்க்கண்டேயரிடம் வந்தடைந்த காலனே இறக்கும்படி காலனைத் தண்டித்த திருப்பாதனே; (சந்ததம் - எப்பொழுதும்); (மாணி - மார்க்கண்டேயர்); (புடை - பக்கம்; ஏழாம் வேற்றுமையுருபு); (கழலான் - கழல் அணிந்த திருவடி உடையவன்);
சங்கரி ஒன்றிய பெருமானே - உமை ஒரு பாகமாக இணைந்த பெருமானே;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment