Tuesday, April 26, 2022

S.126 - சிவன் - புகை - சிலேடை

2010-10-09

S.126 - சிவன் - புகை - சிலேடை

------------------

கானகத்துத் தீயினைக் காட்டுமே ஓடுமஞ்சு

வானடையும் காருமணி வண்ணமாம் - ஏனம்

அடையாத வாறிருக்கும் அண்டுவார் கண்ணீர்

மடையாம் அரன்புகை மாண்பு.


சொற்பொருள்:

கானகத்துத் தீ - 1. காட்டுத்தீ; / 2. சுடுகாட்டில் தீ;

ஓடுமஞ்சு - 1. ஓடு மஞ்சு / 2. ஓடும் அஞ்சு;

காருமணி - 1. காரும் அணி; / 2. காரும் மணி;

வான் - 1. வானம்; / 2. தேவர்கள்;

ஏனம் - 1. பாத்திரம்; / 2. பன்றி;

அண்டுதல் - 1. நெருங்குதல்; / 2. சரண் அடைதல்;

மடை - மதகு; ஓடை;

மாண்பு - பெருமை;


புகை:

கானகத்துத் தீயினைக் காட்டுமே - காட்டில் இருக்கும் தீயை உணர்த்தும்;

ஓடு மஞ்சு வான் அடையும் - ஓடுகின்ற மேகம் திகழும் வானைச் சென்று அடையும்;

காரும் அணி வண்ணம் ஆம் - கரிய நிறம் பூண்டிருக்கும்;

ஏனம் அடையாதவாறு இருக்கும் - பாத்திரத்தில் அடைக்க இயலாதபடி இருக்கும்;

அண்டுவார் கண் நீர்-மடை ஆம் - நெருங்குபவர்களது கண் நீர் பாயும் மடை ஆகும்;

புகை மாண்பு - புகையின் பெருமை (தன்மை);


சிவன்:

கானகத்துத் தீயினைக் காட்டுமே - சுடுகாட்டில் தீயைக் காட்டுவான்; (தீயினிடை ஆடுபவன்; தீயை ஏந்தி ஆடுபவன்);

ஓடும் அஞ்சு-வான் அடையும் - (ஆலகாலத்தைக் கண்டு) ஓடுகின்ற பயந்த தேவர்கள் சென்று சரணடைவார்கள்;

காரும் மணி வண்ணம் ஆம் - (அவ்விஷத்தை உண்டதால்) கருமையும் (கழுத்தில்) மணி போல் ஆகும்;

ஏனம் அடையாதவாறு இருக்கும் - (திருமால் பிரமன் இவர்கள் பன்றியும் அன்னமும் ஆகி அடிமுடி தேடியபொழுது பிரமனும்) பன்றியான திருமாலும் அடையாதபடி இருக்கும்;

அண்டுவார் கண் நீர் மடை ஆம் - சரண்புகுந்த பக்தர்களின் கண் நீர் பாயும் மடை ஆகும்;

அரன் மாண்பு - சிவபெருமான் மாட்சிமை;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment