2010-05-08
M.054 - வானிறந்தான் - கண்ணிலவு - மடக்கு
--------------
வானிறந்தான் ஏறு மணிமிடற்றன் ஊரேறும்
வானிறந்தான் அன்றயன் மால்தேட - வானிறந்தான்
கண்ணிலவு பூமாலை கட்டியன்பாய்க் கைதொழுவோம்
கண்ணிலவு நெற்றியன்நம் காப்பு.
பதம் பிரித்து:
வான் நிறந்தான் ஏறு மணிமிடற்றன் ஊர் ஏறும்
வால் நிறம்; தான் அன்று அயன் மால் தேட - வான் இறந்தான்;
கள் நிலவு பூமாலை கட்டி அன்பாய்க் கைதொழுவோம்;
கண் நிலவு நெற்றியன் நம் காப்பு.
வானிறந்தான் - 1. வான் நிறம்தான்; 2. வால் நிறம்தான்; 3. வான் இறந்தான்;
வான் - 1. மேகம்; 2. விண்;
ஊர்தல் - ஏறுதல் (To mount); ஏறி நடத்துதல் (To ride, as a horse);
வால் - வெண்மை;
தான் - 1. தேற்றச்சொல் / அசைச்சொல்; 2. படர்க்கை ஒருமைப்பெயர் (He, she or it) - அவன்;
இறத்தல் - கடத்தல் (To go beyond, transcend, pass over);
கண்ணிலவு - 1. கள் நிலவு; 2. கண் நிலவு;
கள் - தேன்;
காப்பு - காவல்;
மேகத்தின் நிறம் உடைய மணி திகழும் கண்டத்தை உடையவன் (நீலகண்டன்) வாகனமான எருதும் வெண்ணிறம். அவன் முன்னொரு சமயத்தில் பிரமனும் திருமாலும் தேடுமாறு விண்ணையும் கடந்தவன் (/கடந்தான்). அவனைத் தேன் இருக்கும் மலர்களால் மாலை கட்டி அன்போடு வணங்குவோம். (அந்த) நெற்றிக்கண்ணனே நம் காவல்.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment