2010-02-27
M.052 - அகலா - மகத்தொளியாய் - மடக்கு
--------------
அகலா மதியேனும் அல்லலற என்றும்
அகலா அளியெனு(ம்)நெய் ஆரும் - அகலா
மகத்தொளியாய் நிற்பாய் அயன்மால் அறியா
மகத்தொளியாய் தாராய் வரம்.
பதம் பிரித்து:
அகலா மதியேனும் அல்லல் அற, என்றும்
அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம்
அகத்து ஒளியாய் நிற்பாய், அயன் மால் அறியா
மகத்து ஒளியாய், தாராய் வரம்.
சொற்பொருள்:
அகல்தல் - 1. விருத்தியடைதல்; விரிதல்; 2. நீங்குதல்;
அளி - அன்பு;
அகல் - விளக்குத் தகழி;
மகத்து - பெரியது; பெருமையானது;
ஒளி - 1. வெளிச்சம்; 2. மறைத்தல் (ஒளித்தல்);
ஒளியாய் - 1. ஒளித்துக்கொள்ளாதவனே; ஒளி ஆகி; 2. ஒளி உடையவனே;
அகலா மதியேனும் அல்லல் அற - சிறுமதி உடைய அடியேனும் துன்பம் எல்லாம் தீரும்படி;
அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம் அகத்து ஒளியாய் நிற்பாய் - நீங்காத அன்பு என்ற நெய் நிறைந்த அகல் ஆன நெஞ்சில் உன்னை மறைத்துக்கொள்ளாமல் ஒளி ஆகி நிற்பவனே; (= பக்தர்களது உள்ளம் என்ற அகலில் திகழ்கின்ற ஜோதியே); (* அப்பர் தேவாரம் - 4.75.4 - "உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் அட்டி");
அயன் மால் அறியா மகத்து-ஒளியாய் - பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத பெருஞ்சோதியே;
தாராய் வரம் - வரம் தருவாயாக;
பிற்குறிப்பு: * அப்பர் தேவாரம் - 4.75.4 -
உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே.
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment