Tuesday, April 26, 2022

06.01.125 - சிவன் - காது - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-10-02

06.01.125 - சிவன் - காது - சிலேடை

-----------------------------------------------

ஆடி அமரும் அரவத்தை ஏற்றிருக்கும்

தோடியையும் கேள்வழியாம் சுந்தரமாய் - மாடிருக்கும்

நாந்துஞ்சும் போதழைக்கில் கேட்டுதவும் நம்காது

சேந்தனைத் தந்த சிவன்.


சொற்பொருள்:

ஆடி - 1. கண்ணாடி; (இங்கே பார்வையைச் சரிசெய்ய உதவும் கண்ணாடி); / 2. கூத்தாடுபவன்; அசைந்து;

அமர்தல் - 1. இருத்தல்; / 2. விரும்புதல்;

அரவம் - 1. ஒலி; / 2. பாம்பு;

இயைதல் - பொருந்துதல்;

தோடியையும் - 1. தோடியையும் (ராகம்); / 2. தோடு இயையும் (பொருந்தும்);

கேள் - 1. கேட்டல்; / 2. துணைவன்; உறவு;

மாடு - 1. பக்கம்; பொன்; செல்வம்; 2. எருது (இக்கால வழக்கில்);

துஞ்சுதல் - 1. துயிலுதல்; / 2. இறத்தல்;

சேந்தன் - முருகன்;

தருதல் - மகப்பெறுதல் (To beget);


காது:

ஆடி அமரும் - பார்வையைச் சரிசெய்ய உதவும் 'மூக்குக்' கண்ணாடியைத் தாங்கும்;

அரவத்தை ஏற்றிருக்கும் - ஒலியைக் கேட்கும்;

தோடியையும் கேள் வழி ஆம் - தோடி இராகத்தையும் கேட்கும் புலன் ஆகும்;

சுந்தரமாய் மாடு இருக்கும் - அழகுறத் தலையின் பக்கத்தில் இருக்கும்; (பொன், மணி, போன்றன அழகுசெய்யும்);

நாம் துஞ்சும் போது அழைக்கில் கேட்டு உதவும் - நாம் துயிலும்போது எவரேனும் அழைத்தால் அவ்வொலியைக் கேட்டு நாம் துயிலெழ உதவும்;

நம் காது - நம் செவி;


சிவன்:

ஆடி அமரும் அரவத்தை ஏற்றிருக்கும் - அசைந்து தங்குகின்ற பாம்பை முடிமேல் ஏற்றிருப்பான்; ("ஆடி - கூத்தாடுபவன்" என்றும், "அமரும் அரவத்தை ஏற்றிருக்கும் - பாம்பை விரும்பி முடிமேல், மேனிமேல் ஏற்பவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

தோடு இயையும் - பெண்கள் அணியும் தோடும் பொருந்தும் - அர்த்தநாரி; (தோடு - தோடும் - உம்மைத்தொகை);

கேள் வழி ஆம் - (உம்மைத்தொகை - கேளும் வழியும்) - அடியவர்களுக்கு உறவும் ஆகி, அவர்கள் செல்லும் நெறியும் ஆவான்;

சுந்தரமாய் மாடு இருக்கும் - அழகுற எருது இருக்கும்;

நாம் துஞ்சும் போது அழைக்கில் கேட்டு உதவும் - நாம் இறக்கும் சமயத்தில் திருநாமத்தைச் சொல்லி அழைத்தால், அது கேட்டு அருள்வான்;

சேந்தனைத் தந்த சிவன். - முருகனை அருளிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment