2010-05-08
N.011 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2010
----------------
1) --- (வஞ்சி விருத்தம் - காய் மா மா - வாய்பாடு) ---
இருள்நீங்க, இருளால் விளையும்
மருள்நீங்க, மதியார் சடையன்
அருள்ஓங்க, மறவேல் மனமே
திருநாவுக் கரசர் கழலே.
இருள் நீங்க - அறியாமை நீங்க; (இருள் - அறியாமை; ஆணவம்)
இருளால் விளையும் மருள் நீங்க - அறியாமையால் விளையும் மயக்கம் நீங்க; (மருள் - மயக்கம்);
மதி ஆர் சடையன் அருள் ஓங்க - சந்திரனைச் சடைமேல் அணிந்த பெருமானது அருள் பெருக;
மறவேல் மனமே, திருநாவுக்கரசர் கழலே - மனமே, திருநாவுக்கரசரது திருவடியை மறவாதே;
2) --- (நேரிசை வெண்பா) ---
வினைக்கடலில் மூழ்க விரையும்கல் நெஞ்சே,
தினைத்தனையும் தேவாரம் செப்பு; - கனக்கின்ற
கல்லும் மிதக்கக் கரையடைந்த நாவரசர்
சொல்லும் அடியும் துணை.
வினைக்கடலில் மூழ்க விரையும் கல்நெஞ்சே - வினைக்கடலில் முழுகுவதற்கு ஓடுகின்ற கல்மனமே;
தினைத்தனையும் தேவாரம் செப்பு - தினை அளவாவது (சிறிது அளவேனும்) தேவாரத்தை ஓது;
கனக்கின்ற கல்லும் மிதக்கக் கரை அடைந்த நாவரசர் சொல்லும் அடியும் துணை - (கடலில் ஆழ்த்தக் கட்டிய) கனம் மிகுந்த கல்லும் மிதக்க, அதன்மீது கரை வந்தடைந்த திருநாவுக்கரசரது பாடல்களும் திருவடியும் நம் துணை;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment