Saturday, August 1, 2026

P.508 - மயிலாடுதுறை - முதிரா மதிசேர்

2020-06-19

P.508 - மயிலாடுதுறை

--------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா)

(இச்சந்தத்தை வடமொழியில் "தோடகம்" என்பர்)

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையா யெனுமால்")


1)

முதிரா மதிசேர் முடியிற் புனலார்

நதியாய் நரைவெள் விடையூர் தியினாய்

மதில்சூழ்ந் தழகார் மயிலா டுதுறைப்

பதியே பழவல் வினைதீர்த் தருளே.


முதிரா மதி சேர் முடியில் புனல் ஆர் நதியாய் - இளந்திங்களை அணிந்த திருமுடியில் நீர் மிகுந்த கங்கையையும் தரித்தவனே;

நரை-வெள்-விடை ஊர்தியினாய் - மிகவெண்மையான இடபத்தை ஊர்தியாக உடையவனே; (நரை - வெண்மை; நரைவெள் - ஒருபொருட்பன்மொழி); (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நரைவெள்ளேறு ஒன்றுடையானை");

மதில் சூழ்ந்து அழகு ஆர் மயிலாடுதுறைப் பதியே - மதிலால் சூழப்பெற்ற அழகிய மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே;

பழ வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக;


2)

அணியா அரவம் புனைவாய் அடியைப்

பணிவா னவருக் கருளும் பரமா

மணிகோ புரமார் மயிலா டுதுறைத்

துணிமா மதியாய் துயர்தீர்த் தருளே.


அணியா அரவம் புனைவாய் - ஆபரணமாகப் பாம்பை அணிந்தவனே; யாரும் அணியாத பாம்பை அணிந்தவனே; (அணியா - 1. அணியாக; 2. அணியாத);

அடியைப் பணி வானவருக்கு அருளும் பரமா - திருவடியை வணங்கிய தேவர்களுக்கு அருளிய பரமனே;

மணி-கோபுரம் ஆர் மயிலாடுதுறைத் - அழகிய கோபுரம் பொருந்திய மயிலாடுதுறையில் உறைகின்ற; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 6.16.5 - "மணிபொழில்சூழ் ஆரூர் உறைகின்றாரும்");

துணி-மா மதியாய் - அழகிய பிறையைச் சூடியவனே; (துணி - துண்டம்);

துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;


3)

வளைமே ருவிலால் மதிலெய் தவனே

தளரா முலையாள் தழுவும் தலைவா

வளமார் பொழில்சூழ் மயிலா டுதுறை

இளமால் விடையாய் இடர்தீர்த் தருளே.


வளை-மேரு-விலால் மதில் எய்தவனே - வளைத்த மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (விலால் - வில்லால்);

தளரா-முலையாள் தழுவும் தலைவா - தளராத முலைகளையுடைய உமாதேவி தழுவும் கணவனே;

வளம் ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை - வளம் மிக்க சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற;

இள-மால்-விடையாய் - இளைய பெரிய இடபத்தை வாகனமாக உடையவனே; (மால் - பெரிய);

இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


4)

அழலார் சடையாய் அதளா டையினாய்

குழையார் செவியாய் கொடிமேல் விடையாய்

மழைசேர் பொழில்சூழ் மயிலா டுதுறைக்

குழகா தொழுதேன் குறைதீர்த் தருளே.


அழல் ஆர் சடையாய் - தீப் போலும் செஞ்சடையை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

அதள்-ஆடையினாய் - தோலை ஆடையாக உடையவனே; (அதள் - தோல்);

குழை ஆர் செவியாய் - காதில் குழையை அணிந்தவனே;

கொடிமேல் விடையாய் - இடபக்கொடியை உடையவனே;

மழை சேர் பொழில் சூழ் மயிலாடுதுறைக் குழகா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற குழகனே; (மழை - மேகம்); (குழகன் - இளையோன்; அழகன்);

தொழுதேன் குறை தீர்த்து அருளே - உன்னை வணங்கும் என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக;


5)

பெண்டங் கியமே னியுடைப் பெருமான்

அண்டம் பலவாக் கியொடுக் கிடுவாய்

வண்டின் னிசைசெய்ம் மயிலா டுதுறைக்

கண்டங் கரியாய் கலிதீர்த் தருளே.


பெண் தங்கிய மேனியுடைப் பெருமான் - உமை ஒருபக்கத்தில் தங்கிய திருமேனியை உடைய பெருமானே; (பெண்டங்கிய - பெண் தங்கிய);

அண்டம் பல ஆக்கி ஒடுக்கிடுவாய் - பல அண்டங்களையும் படைத்து ஒடுக்குபவனே;

வண்டு இன்னிசைசெய்ம் மயிலாடுதுறைக் - வண்டுகள் இன்னிசை பாடுகின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற;

கண்டம் கரியாய் - நீலகண்டனே;

கலி தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்);


6)

திரியும் புரமூன் றெரிசெய் தவனே

எரிவன் கருநஞ் சமுதுண் டவனே

வரிவண் டறையும் மயிலா டுதுறைப்

புரிசெஞ் சடையாய் புகல்தந் தருளே.


திரியும் புரம் மூன்று எரிசெய்தவனே - திரிந்த முப்புரங்களை எரித்தவனே;

எரி-வன்-கருநஞ்சு அமுது உண்டவனே - கொதிக்கின்ற (/ சுட்டெரிக்கும்) கொடிய கரிய ஆலகாலத்தை அமுதாக உண்டவனே;

வரிவண்டு அறையும் மயிலாடுதுறைப் - வரியுடைய வண்டுகள் ஒலிக்கின்ற மயிலாடுதுறையில் உறைகின்ற; (அறைதல் - ஒலித்தல்);

புரி-செஞ்சடையாய் - முறுக்கிய சிவந்த சடையை உடையவனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);

புகல் தந்து அருளே - எனக்கு அடைக்கலம் தந்து அருள்வாயாக;


7)

நறையார் மலர்தூ வியமா ணிநலம்

உறவே நமன்மார் பிலுதைத் தவனே

மறைநா வினனே மயிலா டுதுறை

இறைவா அடியேன் இடர்தீர்த் தருளே.


நறை ஆர் மலர் தூவிய மாணி நலம் உறவே நமன் மார்பில் உதைத்தவனே - வாசமலர்களைத் தூவி வழிபடு செய்த மார்க்கண்டேயர் எமபயம் நீங்கி இன்புறும்படி காலனை மார்பில் உதைத்தவனே; (நறை - வாசனை; தேன்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

மறை-நாவினனே - வேதங்களைப் பாடியருளியவனே; (வேதநாவா);

மயிலாடுதுறை இறைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற இறைவனே;

அடியேன் இடர் தீர்த்து அருளே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக;


8)

மலைபேர் தசமா முகனார்த் தழவே

மலரார் கழலோர் விரலூன் றியருள்

மலையான் மருகா மயிலா டுதுறைத்

தலைவா துணைவா தமியேற் கருளே.


மலை பேர் தசமாமுகன் ஆர்த்து அழவே - கயிலைமலையைப் பெயர்த்த பத்துத்தலை இராவணன் அலறி அழும்படி; (ஆர்த்தல் - ஒலித்தல்);

மலர் ஆர் கழல் ஓர் விரல் ஊன்றியருள் - மலர் போன்ற திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியருளிய; (ஆர்தல் - ஒத்தல்);

மலையான் மருகா - இமவானுக்கு மருகனே;

மயிலாடுதுறைத் தலைவா துணைவா - மயிலாடுதுறையில் உறைகின்ற தலைவனே, துணைவனே;

தமியேற்கு அருளே - கதியற்ற எனக்கு அருள்வாயாக;


9)

செழுமா மலரான் திருமாற் கரிதாய்

எழுசோ தியனே இடுமூண் மகிழ்வாய்

மழுவாட் படையாய் மயிலா டுதுறைத்

தொழுவார்க் கினியாய் துயர்தீர்த் தருளே.


செழு-மா-மலரான் திருமாற்கு அரிது-ஆய் எழு சோதியனே - செழுமையான தாமரைமலரில் இருக்கு பிரமனுக்கும் திருமாலுக்குக் காண அரியதான ஜோதிவடிவில் உயர்ந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.120.9 - "கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்");

இடும் ஊண் மகிழ்வாய் - (பிச்சையாக) இடும் உணவை விரும்பியவனே;

மழுவாட் படையாய் - மழுவாளை ஏந்தியவனே; (படை - ஆயுதம்);

மயிலாடுதுறைத் தொழுவார்க்கு இனியாய் - மயிலாடுதுறையில் உறைகின்றவனும் அன்பர்க்கு அன்பனும் ஆனவனே;

துயர் தீர்த்து அருளே - என் துயரைத் தீர்த்து அருள்வாயாக;


10)

இதமற் றதைநன் றெனவந் துரைசெய்

அதமர்க் கருளா தவனே அரனே

மதமா உரியாய் மயிலா டுதுறை

முதல்வா முனைவல் வினைதீர்த் தருளே.


இதம் அற்றதை நன்று என வந்து உரைசெய் அதமர்க்கு அருளாதவனே - நன்மையற்றதை நல்ல நெறி என்று வீடுவீடாகச் சென்று உரைக்கின்ற கீழோர்க்கு அருள் இல்லாதவனே;

அரனே - ஹரனே;

மதமா உரியாய் - யானைத்தோலைப் போர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "கரியுரியாய் காலகாலா");

மயிலாடுதுறை முதல்வா - மயிலாடுதுறையில் உறைகின்ற முதல்வனே;

முனை வல்வினை தீர்த்து அருளே - என் பழைய வலிய வினையைத் தீர்த்து அருள்வாயாக; (முனை - முன்னை);


11)

நஞ்சார் மிடறா நசியா முதலே

பஞ்சேர் அடியாள் பிரியாப் பரமா

மஞ்சார் பொழில்சூழ் மயிலா டுதுறை

மஞ்சா பழவல் வினைமாய்த் தருளே.


நஞ்சு ஆர் மிடறா - ஆலகாலத்தை உண்டு அணிந்த கண்டனே; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

சியா முதலே - அழிவு இல்லாத முதற்பொருளே; (நசித்தல் - அழிதல்; சாதல்);

பஞ்சு ஏர் அடியாள் பிரியாப் பரமா - பஞ்சு போன்ற மென்மையான பாதம் உடைய உமை பிரியாத பரமனே; (ஏர்தல் - ஒத்தல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.10 - "பஞ்சேர் அடியாள் பாகத் தொருவா"); (திருவாசகம் - வாழாப்பத்து - 8.28.6 - "பஞ்சின் மெல்லடியாள் பங்க");

மஞ்சு ஆர் பொழில் சூழ் மயிலாடுதுறை மஞ்சா - மேகம் பொருந்தும் சோலை சூழ்ந்த மயிலாடுதுறையில் உறைகின்ற வீரனே; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (திருவாசகம்-போற்றித் திருவகவல் - 8.4 - அடி-183- "மஞ்சா போற்றி மணாளா போற்றி");

பழ-வல்வினை மாய்த்து அருளே - என் பழைய வலிய வினையை அழித்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment