2020-06-17
P.506 - வழுவூர்
--------------
(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")
1)
இலைமூன் றுடைவேல் தனையேந்தி
மலைபோல் மதமா உரிமூடி
அலையார் சடையான் இடமென்பர்
மலரார் பொழில்சூழ் வழுவூரே.
இலை-மூன்றுடை வேல்தனை ஏந்தி - திரிசூலத்தை ஏந்தியவன்;
மலை போல் மதமா உரிமூடி - மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்; (மதமா - மதமுடைய யானை); (உரி - தோல்);
அலை ஆர் சடையான் இடம் என்பர் - அலை நிறைந்த (= கங்கையை அணிந்த) சடையை உடையவன் உறையும் தலம்;
மலர் ஆர் பொழில் சூழ் வழுவூரே - மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த வழுவூர்;
2)
மதவேள் உடலைப் பொடிசெய்தான்
மதியோ டரவைச் சடைவைத்தான்
முதலாய்க் கடையாம் பெருமானூர்
மதுவீப் பொழில்சூழ் வழுவூரே.
மதவேள் உடலைப் பொடிசெய்தான் - மன்மதனைச் சாம்பலாக்கியவன்;
மதியோடு அரவைச் சடை வைத்தான் - சந்திரனையும் பாம்பையும் சடையில் ஒன்றாகச் சேர்த்தவன்;
முதலாய்க் கடை-ஆம் பெருமான் ஊர் - ஆதியும் அந்தமும் ஆன பெருமான் உறையும் தலம்;
மது-வீப்-பொழில் சூழ் வழுவூரே - தேன்மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த வழுவூர்; (வீ - பூ);
3)
அணையார் புர(ம்)மூன் றெரிசெய்தாய்
துணைநீ எனவே தொழுவார்க்குப்
புணையாய் வருவான் இடமென்பர்
மணமார் பொழில்சூழ் வழுவூரே.
"அணையார் புரம் மூன்று எரிசெய்தாய் - "பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே; (அணையார் - பகைவர்);
துணை நீ" எனவே தொழுவார்க்குப் - நீயே துணை" என்று தொழும் அன்பர்களுக்கு;
புணையாய் வருவான் இடம் என்பர் - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாக வருபவன் உறையும் தலம்; (புணை - தெப்பம்);
மணம் ஆர் பொழில் சூழ் வழுவூரே - மணம் மிக்க சோலை சூழ்ந்த வழுவூர்;
4)
குளமாய் இருகண் கசியன்பர்
உளமே தளியா மகிழண்ணல்
இளமா விடையான் இடமென்பர்
வளமார் வயல்சூழ் வழுவூரே.
குளமாய் இருகண் கசி அன்பர் உளமே தளியா மகிழ் அண்ணல் - இருகண்களும் குளமாகிக் கசிகின்ற பக்தர்களது உள்ளமே கோயிலாக மகிழ்கின்ற பெருமான்;
இள-மா-விடையான் இடம் என்பர் - இளைய பெரிய எருதினை ஊர்தியாக உடையவன் உறையும் தலம்;
வளம் ஆர் வயல் சூழ் வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்;
5)
அருமா விடமுண் டமுதீந்த
பெருமான் சடைமேற் பிறைசூடி
அருவாய் உருவாம் அரனூராம்
வருவார் மகிழும் வழுவூரே.
அரு-மா-விடம் உண்டு அமுது ஈந்த பெருமான் - கொடிய பெரிய ஆலகாலத்தை உண்டு தேவர்களுக்கு அமுதத்தை அளித்த பெருமான்;
சடைமேல் பிறைசூடி - சடையில் சந்திரனைச் சூடியவன்;
அருவாய் உருவாம் அரன் ஊர் ஆம் - அருவும் உருவும் ஆகும் அரன் உறையும் தலம்; (அரு - உருவமின்மை);
வருவார் மகிழும் வழுவூரே - வந்து தொழும் பக்தர்கள் வரம் பெற்று மகிழ்கின்ற வழுவூர்;
6)
பண்டங் கழலைத் தொழுதேத்தும்
வெண்டிங் களைவே ணியில்வைத்தான்
கண்டங் கரியான் இடமென்பர்
வண்டின் னிசைசெய் வழுவூரே.
பண்டு அங்-கழலைத் தொழுதேத்தும் வெண்-திங்களை வேணியில் வைத்தான் - முன்பு அழகிய திருவடியை வழிபட்ட வெண்பிறையைச் சடையில் தரித்தவன்; (பண்டு - முன்பு); (அம் - அழகு); (வேணி - சடை);
கண்டம் கரியான் இடம் என்பர் - நீலகண்டன் உறையும் தலம்;
வண்டு இன்னிசை செய் வழுவூரே - வண்டுகள் இனிய இசை பாடுகின்ற (சோலை சூழ்ந்த) வழுவூர்;
7)
பறிமா மலரால் பணிவார்தம்
செறிதீ வினைதீர்த் தருள்தேவன்
பொறியார் அரவம் திகழ்மார்பன்
மறியார் கரனூர் வழுவூரே.
பறி-மா-மலரால் பணிவார்தம் செறி-தீவினை தீர்த்தருள் தேவன் - பறித்த அழகிய பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்களது செறிந்த தீவினையையெல்லாம் தீர்த்து அருளும் தேவன்;
பொறி ஆர் அரவம் திகழ் மார்பன் - புள்ளிகள் திகழும் பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன்; (பொறி - புள்ளி);
மறி ஆர் கரன் ஊர் வழுவூரே - கையில் மான்கன்றை ஏந்தியவன் உறையும் தலம் வழுவூர்; (மறி - மான்கன்று);
8)
செழுமா மலைபேர்த் தவன்வாடி
அழுமா றுநெரித் திசைகேட்டான்
தொழுவார்க் கருளும் தொழிலேந்தல்
மழுவாட் பரனூர் வழுவூரே.
செழு-மா-மலை பேர்த்தவன் வாடி அழுமாறு நெரித்து இசை கேட்டான் - செழுமையான கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடி அழும்படி அவனை நசுக்கிப் பின் அவன் பாடிய இசையைக் கேட்டவன்;
தொழுவார்க்கு அருளும் தொழில்-ஏந்தல் - தொழுவார்க்கு அருள்கின்ற தொழிலை உடைய அரசன்; (ஏந்தல் - அரசன்; பெருமையிற் சிறந்தோன்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே" - உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில்);
மழுவாட் பரன் ஊர் வழுவூரே - மழுவாளை ஏந்திய பரமன் உறையும் தலம் வழுவூர்;
9)
நறைமா மலரான் அரிகாணா
இறையான் எழிலார் உமைபங்கன்
கறையார் மிடறன் கயிலாயன்
மறைநா வினனூர் வழுவூரே.
நறை-மா-மலரான் அரி காணா இறையான் - வாசனையுடைய தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் காண ஒண்ணாத இறைவன்; (இறையான் - இறைவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.46.5 - "நாலூர் மயானத்தெம் இறையான்");
எழில் ஆர் உமைபங்கன் - அழகிய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;
கறை ஆர் மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
கயிலாயன் - கயிலைமலையில் இருப்பவன்;
மறை-நாவினன் ஊர் வழுவூரே - வேதங்களைப் பாடியருளிய பெருமான் உறையும் தலம் வழுவூர்;
10)
மதியீ னர்கள்சொல் புறனெல்லாம்
மதியா தடைமின் மகிழ்வெய்த
கொதியா வருகூற் றுதைசெய்தான்
மதிசூ டியிடம் வழுவூரே.
மதியீனர்கள் சொல் புறன்-எல்லாம் மதியாது, அடைமின் மகிழ்வு எய்த - அறிவீனர்கள் சொல்லும் பழிச்சொற்களையெல்லாம் மதிக்கவேண்டா; இன்பம் எய்த அடையுங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);
கொதியா வரு கூற்று உதைசெய்தான் - மார்கண்டேயரைக் கொல்லக் கோபத்தோடு வந்த காலனை உதைத்தவன்; (கொதியா வரு - கொதித்து வந்த - சினந்து வந்த); (சம்பந்தர் தேவாரம் - 1.30.1 - "கொதியா வருகூற்றை யுதைத்தவர்");
மதிசூடி இடம் வழுவூரே - சந்திரசேகரன் உறையும் தலமான வழுவூரை;
11)
பணிகின் றவர்தம் பய(ம்)நீக்கிப்
பிணிவல் வினைதீர்த் தருள்பெம்மான்
துணிவெண் பிறையன் சுடுநீற்றன்
மணிகண் டனிடம் வழுவூரே.
பணிகின்றவர்தம் பய(ம்) நீக்கிப் - வணங்கும் அடியார்களது அச்சத்தைப் போக்கி;
பிணி வல்வினை தீர்த்தருள் பெம்மான் - அவர்களது உடல்நோய்களையும் அவர்களைப் பிணித்துள்ள வலிய வினையையும் தீர்த்தருளும் பெருமான்; (பிணிவல்வினை - 1. உடற்பிணியும் வலிய வினையும்; 2. பிணித்துள்ள வலிய வினை);
துணி-வெண்-பிறையன் - ஒளிவீசும் நிலாத்துண்டத்தைச் சூடியவன்;
சுடுநீற்றன் - சுட்ட திருநீற்றைப் பூசியவன்;
மணிகண்டன் இடம் வழுவூரே - நீலகண்டன் உறையும் தலம் வழுவூர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment