Saturday, August 1, 2026

P.506 - வழுவூர் - இலைமூன்று

2020-06-17

P.506 - வழுவூர்

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

இலைமூன் றுடைவேல் தனையேந்தி

மலைபோல் மதமா உரிமூடி

அலையார் சடையான் இடமென்பர்

மலரார் பொழில்சூழ் வழுவூரே.


இலை-மூன்றுடை வேல்தனைந்தி - திரிசூலத்தை ஏந்தியவன்;

மலை போல் மதமா உரிமூடி - மலை போன்ற பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்; (மதமா - மதமுடைய யானை); (உரி - தோல்);

அலை ஆர் சடையான் இடம் என்பர் - அலை நிறைந்த (= கங்கையை அணிந்த) சடையை உடையவன் உறையும் தலம்;

மலர் ஆர் பொழில் சூழ் வழுவூரே - மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த வழுவூர்;


2)

மதவேள் உடலைப் பொடிசெய்தான்

மதியோ டரவைச் சடைவைத்தான்

முதலாய்க் கடையாம் பெருமானூர்

மதுவீப் பொழில்சூழ் வழுவூரே.


மதவேள் உடலைப் பொடிசெய்தான் - மன்மதனைச் சாம்பலாக்கியவன்;

மதியோடு அரவைச் சடை வைத்தான் - சந்திரனையும் பாம்பையும் சடையில் ஒன்றாகச் சேர்த்தவன்;

முதலாய்க் கடை-ம் பெருமான் ஊர் - ஆதியும் அந்தமும் ஆன பெருமான் உறையும் தலம்;

மது-வீப்-பொழில் சூழ் வழுவூரே - தேன்மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த வழுவூர்; (வீ - பூ);


3)

அணையார் புர(ம்)மூன் றெரிசெய்தாய்

துணைநீ எனவே தொழுவார்க்குப்

புணையாய் வருவான் இடமென்பர்

மணமார் பொழில்சூழ் வழுவூரே.


"அணையார் புரம் மூன்று எரிசெய்தாய் - "பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே; (அணையார் - பகைவர்);

துணை நீ" எனவே தொழுவார்க்குப் - நீயே துணை" என்று தொழும் அன்பர்களுக்கு;

புணையாய் வருவான் இடம் என்பர் - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாக வருபவன் உறையும் தலம்; (புணை - தெப்பம்);

மணம் ஆர் பொழில் சூழ் வழுவூரே - மணம் மிக்க சோலை சூழ்ந்த வழுவூர்;


4)

குளமாய் இருகண் கசியன்பர்

உளமே தளியா மகிழண்ணல்

இளமா விடையான் இடமென்பர்

வளமார் வயல்சூழ் வழுவூரே.


குளமாய் இருகண் கசி அன்பர் உளமே தளியா மகிழ் அண்ணல் - இருகண்களும் குளமாகிக் கசிகின்ற பக்தர்களது உள்ளமே கோயிலாக மகிழ்கின்ற பெருமான்;

இள-மா-விடையான் இடம் என்பர் - இளைய பெரிய எருதினை ஊர்தியாக உடையவன் உறையும் தலம்;

வளம் ஆர் வயல் சூழ் வழுவூரே - வளம் மிக்க வயல் சூழ்ந்த வழுவூர்;


5)

அருமா விடமுண் டமுதீந்த

பெருமான் சடைமேற் பிறைசூடி

அருவாய் உருவாம் அரனூராம்

வருவார் மகிழும் வழுவூரே.


அரு-மா-விடம் உண்டு அமுது ஈந்த பெருமான் - கொடிய பெரிய ஆலகாலத்தை உண்டு தேவர்களுக்கு அமுதத்தை அளித்த பெருமான்;

சடைமேல் பிறைசூடி - சடையில் சந்திரனைச் சூடியவன்;

அருவாய் உருவாம் அரன் ஊர் ஆம் - அருவும் உருவும் ஆகும் அரன் உறையும் தலம்; (அரு - உருவமின்மை);

வருவார் மகிழும் வழுவூரே - வந்து தொழும் பக்தர்கள் வரம் பெற்று மகிழ்கின்ற வழுவூர்;


6)

பண்டங் கழலைத் தொழுதேத்தும்

வெண்டிங் களைவே ணியில்வைத்தான்

கண்டங் கரியான் இடமென்பர்

வண்டின் னிசைசெய் வழுவூரே.


பண்டு அங்-கழலைத் தொழுதேத்தும் வெண்-திங்களை வேணியில் வைத்தான் - முன்பு அழகிய திருவடியை வழிபட்ட வெண்பிறையைச் சடையில் தரித்தவன்; (பண்டு - முன்பு); (அம் - அழகு); (வேணி - சடை);

கண்டம் கரியான் இடம் என்பர் - நீலகண்டன் உறையும் தலம்;

வண்டு இன்னிசை செய் வழுவூரே - வண்டுகள் இனிய இசை பாடுகின்ற (சோலை சூழ்ந்த) வழுவூர்;


7)

பறிமா மலரால் பணிவார்தம்

செறிதீ வினைதீர்த் தருள்தேவன்

பொறியார் அரவம் திகழ்மார்பன்

மறியார் கரனூர் வழுவூரே.


பறி-மா-மலரால் பணிவார்தம் செறி-தீவினை தீர்த்தருள் தேவன் - பறித்த அழகிய பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்களது செறிந்த தீவினையையெல்லாம் தீர்த்து அருளும் தேவன்;

பொறி ஆர் அரவம் திகழ் மார்பன் - புள்ளிகள் திகழும் பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன்; (பொறி - புள்ளி);

மறி ஆர் கரன் ஊர் வழுவூரே - கையில் மான்கன்றை ஏந்தியவன் உறையும் தலம் வழுவூர்; (மறி - மான்கன்று);


8)

செழுமா மலைபேர்த் தவன்வாடி

அழுமா றுநெரித் திசைகேட்டான்

தொழுவார்க் கருளும் தொழிலேந்தல்

மழுவாட் பரனூர் வழுவூரே.


செழு-மா-மலை பேர்த்தவன் வாடி அழுமாறு நெரித்து இசை கேட்டான் - செழுமையான கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடி அழும்படி அவனை நசுக்கிப் பின் அவன் பாடிய இசையைக் கேட்டவன்;

தொழுவார்க்கு அருளும் தொழில்-ஏந்தல் - தொழுவார்க்கு அருள்கின்ற தொழிலை உடைய அரசன்; (ஏந்தல் - அரசன்; பெருமையிற் சிறந்தோன்); (சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே" - உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில்);

மழுவாட் பரன் ஊர் வழுவூரே - மழுவாளை ஏந்திய பரமன் உறையும் தலம் வழுவூர்;


9)

நறைமா மலரான் அரிகாணா

இறையான் எழிலார் உமைபங்கன்

கறையார் மிடறன் கயிலாயன்

மறைநா வினனூர் வழுவூரே.


நறை-மா-மலரான் அரி காணா இறையான் - வாசனையுடைய தாமரைமலர்மேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் காண ஒண்ணாத இறைவன்; (இறையான் - இறைவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.46.5 - "நாலூர் மயானத்தெம் இறையான்");

எழில் ஆர் உமைபங்கன் - அழகிய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்;

கறை ஆர் மிடறன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

கயிலாயன் - கயிலைமலையில் இருப்பவன்;

மறை-நாவினன் ஊர் வழுவூரே - வேதங்களைப் பாடியருளிய பெருமான் உறையும் தலம் வழுவூர்;


10)

மதியீ னர்கள்சொல் புறனெல்லாம்

மதியா தடைமின் மகிழ்வெய்த

கொதியா வருகூற் றுதைசெய்தான்

மதிசூ டியிடம் வழுவூரே.


மதியீனர்கள் சொல் புறன்-எல்லாம் மதியாது, அடைமின் மகிழ்வு எய்த - அறிவீனர்கள் சொல்லும் பழிச்சொற்களையெல்லாம் மதிக்கவேண்டா; இன்பம் எய்த அடையுங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

கொதியா வரு கூற்று உதைசெய்தான் - மார்கண்டேயரைக் கொல்லக் கோபத்தோடு வந்த காலனை உதைத்தவன்; (கொதியா வரு - கொதித்து வந்த - சினந்து வந்த); (சம்பந்தர் தேவாரம் - 1.30.1 - "கொதியா வருகூற்றை யுதைத்தவர்");

மதிசூடி இடம் வழுவூரே - சந்திரசேகரன் உறையும் தலமான வழுவூரை;


11)

பணிகின் றவர்தம் பய(ம்)நீக்கிப்

பிணிவல் வினைதீர்த் தருள்பெம்மான்

துணிவெண் பிறையன் சுடுநீற்றன்

மணிகண் டனிடம் வழுவூரே.


பணிகின்றவர்தம் பய(ம்) நீக்கிப் - வணங்கும் அடியார்களது அச்சத்தைப் போக்கி;

பிணி வல்வினை தீர்த்தருள் பெம்மான் - அவர்களது உடல்நோய்களையும் அவர்களைப் பிணித்துள்ள வலிய வினையையும் தீர்த்தருளும் பெருமான்; (பிணிவல்வினை - 1. உடற்பிணியும் வலிய வினையும்; 2. பிணித்துள்ள வலிய வினை);

துணி-வெண்-பிறையன் - ஒளிவீசும் நிலாத்துண்டத்தைச் சூடியவன்;

சுடுநீற்றன் - சுட்ட திருநீற்றைப் பூசியவன்;

மணிகண்டன் இடம் வழுவூரே - நீலகண்டன் உறையும் தலம் வழுவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment