Monday, August 22, 2022

T.165 - வேதிகுடி - அறியாமை மிகவாகி

2012-04-12

T.165 - வேதிகுடி - அறியாமை மிகவாகி

(திருவையாறு அருகே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தனதான தனதான தனதான தனதான

தனதான தனதான .. தனதான)


அறியாமை மிகவாகி இருதாளை நினையாமல்

.. .. அலைபோல வருமாசை .. அதனாலே

.. அழியாத மலைபோல வளர்தீய வினைகூடி

.. .. அடுகாலன் எறிபாசம் .. விழுவேனோ

வெறியாரு(ம்) மலரோடு புனலோடு புகையோடு

.. .. விரைநாறு தமிழ்மாலை .. அவையோடு

.. விலகாத வினைதீர எளிதான வழியான

.. .. விடையேறும் உனையோத .. அருளாயே

மறிமானும் இலையாரு(ம்) நுனைவேலும் ஒளியோடு

.. .. வடியாரு(ம்) மழுவாளும் .. உடையானே

.. வளையாரும் இறையாளை ஒருபாகம் அமரீச

.. .. வளராத பிறைசூடு .. சடையானே

செறிசோலை தனில்நாளு(ம்) மலர்பூவி னிடையூறு

.. .. தெளிதேறல் அளிநாடி .. இசைபாடச்

.. சினைமீது துணையோடு கரிதான குயில்கூவு

.. .. திருவேதி குடிமேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

அறியாமை மிக ஆகி, இருதாளை நினையாமல்,

.. .. அலை போல வரும் ஆசை .. அதனாலே

.. அழியாத மலை போல வளர்-தீயவினை கூடி,

.. .. அடு-காலன் எறி-பாசம் .. விழுவேனோ?

வெறி ஆரு(ம்) மலரோடு புனலோடு புகையோடு

.. .. விரை நாறு தமிழ்மாலை .. அவையோடு,

.. விலகாத வினை தீர எளிதான வழியான

.. .. விடை ஏறும் உனை ஓத .. அருளாயே;

மறிமானும், இலை ஆரு(ம்) நுனை வேலும், ஒளியோடு

.. .. வடி ஆரு(ம்) மழுவாளும் .. உடையானே;

.. வளை ஆரும் இறையாளை ஒரு பாகம் அமர்-ஈச;

.. .. வளராத பிறை சூடு .. சடையானே;

செறி-சோலைதனில் நாளு(ம்) மலர்-பூவினிடை ஊறு

.. .. தெளி-தேறல் அளி நாடி .. இசைபாடச்,

.. சினைமீது துணையோடு கரிதான குயில் கூவு

.. .. திருவேதிகுடி மேவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அறியாமை மிக ஆகி, இருதாளை நினையாமல், அலை போல வரும் ஆசை அதனாலே அழியாத மலை போல வளர் தீயவினை கூடி, அடு காலன் எறி பாசம் விழுவேனோ - அறியாமையே மிகுந்து, உன் இருதிருவடிகளை எண்ணாமல், அலைபோல வந்துகொண்டேயிருக்கும் ஆசைகளால், அழியாத மலையைப்போல் வளர்கிற தீவினைகள் பெருகிக், கொல்லும் எமன் வீசும் பாசத்தில் விழுவேனோ? (அடுதல் - கொல்லுதல்); (எறிதல் - வீசியெறிதல்);

வெறி ஆரு(ம்) மலரோடு, புனலோடு, புகையோடு, விரை நாறு தமிழ்மாலை அவையோடு, விலகாத வினை தீர எளிதான வழியான, விடை ஏறும் உனை ஓத அருளாயே - விட்டு நீங்காத பாவங்கள் எல்லாம் தீர்வதற்கு எளிய வழியாக உள்ளவனும் இடபவாகனத்தை உடையவனும் ஆன உன்னை, வாசம் மிகுந்த பூக்களாலும், நீராலும், தூபத்தாலும், மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளாலும் அடியேன் போற்ற (விரைவில்) அருள்புரிவாயாக; (வெறி - வாசனை); (விரை - வாசனை); (நாறுதல் - மணத்தல்); (புனல் - ஜலம்); (புகை - தூபம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.1.6 - "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்");

மறிமானும், இலை ஆரு(ம்) நுனை வேலும், ஒளியோடு வடி ஆரு(ம்) மழுவாளும் உடையானே - மான்கன்றும், இலைபோன்ற நுனியை உடைய சூலமும், பிரகாசமான கூர்மையான மழுவும் ஏந்தியவனே; (மறிமான் - மான்கன்று); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்); (நுனை - முனை); (வடி - கூர்மை);

வளை ஆரும் இறையாளை ஒரு பாகம் அமர் ஈச - வளையல் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் ஈசனே; (இறை - முன்கை); (அமர்தல் - விரும்புதல்);

வளராத பிறை சூடு சடையானே - இளம்பிறையைச் சூடும் சடையை உடையவனே; (வளராத - என்றும் இளைய என்னும் பொருளில்); (சுந்தரர் தேவாரம் - 7.38.3 - "வளராத பிறையும் வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை");

செறி-சோலைதனில் நாளு(ம்) மலர்-பூவினிடை ஊறு-தெளி-தேறல் அளி நாடி இசை பாடச், சினைமீது துணையோடு கரிதான குயில் கூவு திருவேதிகுடி மேவு பெருமானே - அடர்ந்த சோலைகளில் தினமும் மலர்கின்ற பூக்களில் ஊறுகின்ற தெளிந்த தேனை நாடி வண்டுகள் ரீங்காரம் செய்ய, மரக்கிளைகளில் தன் துணையோடு கருங்குயில் கூவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளிய பெருமானே; (தேறல் - தேன்); (அளி - வண்டு); (சினை - மரக்கிளை);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment