Saturday, November 12, 2016

03.04.015 - சிவன் - பணியாள் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-02

3.4.15 - சிவன் - பணியாள் - சிலேடை

-------------------------------------------------------------

கூப்பிட்டால் கைதருவான் முன்றிலிலும் போய்நிற்பான்

காப்பிட்டுக் கோலோச்சிக் காத்திடுவான் பூப்பிணையல்

கொண்டுவந்து நாளும் கொடுப்பான் விடமுண்ட

கண்டன் பணியாள் காண்.


கூப்பிடுதல் - அழைத்தல்;

கூப்புதல் - குவித்தல்;

கைதருதல் - உதவிபுரிதல்;

தருதல் - ஈந்தருளுதல்;

முன்றில் - வீட்டின் முன்னிடம்;

காப்பு - 1) கதவின் தாழ்; 2) திருநீறு;

கோல் ஓச்சுதல் - 1) கம்பை உயர்த்துதல்; 2) ஆளுதல்;

பூப் பிணையல் - மலர்மாலை;

கொள்ளுதல் - 1) விலைக்கு வாங்குதல்; 2) அங்கீகரித்தல்; ஏற்றுக்கொள்தல்;

கொண்டுவந்து - 1) கொண்டு வந்து; 2) கொண்டு உவந்து;

நாளும் - 1) தினமும்; 2) ஆயுளும்;

காண் - முன்னிலை அசை;


பணியாள்:

அழைத்தால் வந்து (சொன்ன வேலையைச் செய்து) உதவிசெய்பவன். வாசலிலும் போய் நிற்பவன். (வாயில் கதவைத்) தாழிட்டுக் கையில் கம்பை வைத்துக்கொண்டு காவல் செய்பவன். (நாம் சொன்னபடி) தினமும் பூமாலைகளைக் (கடையிலிருந்து) வாங்கிவந்து கொடுப்பவன். வேலைக்காரன்.


சிவன்:

(பக்தர்கள்) அழைத்தால் வந்து உதவிசெய்வான்; ("கை கூப்பினால் அருள்செய்வான்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்). (பிச்சைக்காகப் பல இல்லங்களின்) வாசலில் போய் நிற்பவன்; திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசி, அண்டங்களை ஆண்டு காத்தருள்பவன். (பக்தர்கள் இடுகின்ற) பூமாலைகளை ஏற்று மகிழ்ந்து அவர்களுக்கு (விரும்பிய வரங்களையும், நீண்ட) ஆயுளையும் அளிப்பவன். விஷத்தை உண்ட நீலகண்டன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment