Thursday, November 24, 2016

03.04.018 - சிவன் - நீர் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-07

3.4.18 - சிவன் - நீர் - சிலேடை

-------------------------------------------------------------

மாமலை மேலே உறைவதால் வண்ணமில்

லாமல் இருப்பதால் ஆறாகிச் சேமநல்கு

தீர்த்தமாய் ஆவியிற் சேர்வதால் ஆனையுரி

போர்த்த பெருமான் புனல்.


மாமலை = 1) உயரமான மலை; / 2) கயிலைமலை;

வண்ணம் = 1) நிறம்; வடிவம்; / 2) குணம்; வடிவம்; (**1)

ஆறு = 1) நதி; / 2) வழி; நெறி;

சேமநல்கு தீர்த்தம் - க்ஷேமம் நல்கும் தீர்த்தம்;

சேமம் = 1) நல்வாழ்வு; / 2) இன்பம்; காவல்;

தீர்த்தம் = 1) நீர்; / 2) பரிசுத்தம்;

ஆவி = 2) நீர்நிலை; நீராவி; / 2) ஆன்மா; உயிர்;

உரி - தோல்;

புனல் - நீர்;


நீர்:

மிகவும் உயரமான மலையின்மேல் பனியாக உறையும். நிறம் அற்றது. ("வடிவம் இல்லாதது" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). நதி ஆகி, (உயிர்களுக்கு) நன்மை தரும் நீர் ஆகும். ("பாவத்தைத் தீர்க்கும் கங்கை காவிரி முதலிய புண்ணிய நதிகள் ஆகும்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). நீர்நிலைகளில் இருக்கும். ("காற்றில் நீராவியாகச் சேரும்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்).


சிவன்:

கயிலை மலையில் உறைவான். நிர்க்குணப் பிரும்மம். ("வடிவம் இல்லாதவன்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). (**1). (பக்தர்கள் உய்யும்) நல்வழி ஆவான். அவர்களுக்கு இன்பம் அளிப்பான். ("அவர்களைக் காப்பான்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்). பரிசுத்தமானவன். உயிரில் கலந்து இருப்பான். யானைத்தோலைப் போர்த்த சிவபெருமான்.


பிற்குறிப்பு:

**1 – அப்பர் தேவரம் - 5.47.8

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை

பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்

வண்ண மில்லி வடிவுவே றாயவன்

கண்ணில் உள்மணி கச்சியே கம்பனே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment