Saturday, November 12, 2016

03.04.014 - சிவன் - தெருவிளக்கு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-02

3.4.14 - சிவன் - தெருவிளக்கு - சிலேடை

-------------------------------------------------------------

விளக்கினை ஏந்தியூர் வாழ்த்திட நிற்கும்

உளவிருள் நீங்கி ஒளியும் விளங்கும்

வழிகாட்டும் தீமைகள் வாராமற் காக்கும்

விழிநுதலன் வீதி விளக்கு.


உள்ளுதல் - எண்ணுதல்; நினைதல்; தியானித்தல்;

உள - 1) உள்ள (இருக்கின்ற); 2) உள்ள (உள்ளத்து); 3) தியானிக்க; நினைக்க;

விளங்குதல் - 1) பிரகாசித்தல்; 2) தெளிவாதல்; பிரசித்தமாதல்;

விழிநுதலன் - நெற்றியில் கண் உடையவன்; (நுதல் - நெற்றி);


தெருவிளக்கு:

ஊர்மக்கள் வாழ்த்தும்படி விளக்கைத் தாங்கி நிற்கும். (இரவில்) இருக்கும் இருள் விலகி வெளிச்சம் பிரகாசிக்கும். (மக்களுக்குச் செல்லும்) வழியைக் காட்டும். தன் வெளிச்சத்தினால் மக்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும். தெருவிளக்கு.


சிவன்:

ஊரில் உள்ள பக்தர்கள் கையில் விளக்கை ஏந்தி நின்று தொழுவார்கள். ("விளக்கை ஏந்திப் பக்தர்கள் வாழ்த்துமாறு நிற்பவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); தியானித்தால், (நமது) உள்ளத்து இருள் நீங்கி, அகவொளி விளங்கும். மேன்மை அடையும் வழியைக் காட்டுவான். தீயவை அணுகாமல் நம்மைக் காப்பான்; நெற்றிக்கண்ணன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment