Saturday, November 12, 2016

03.04.006 - சிவன் - கண் - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-21
6) சிவன் - கண் - சிலேடை - 2
-----------------------------------------------------------------------
இமையோர் கணம்சூழ்ந் திருப்பதால் நீர்மை
அமைவதால் ஓயாமல் ஆடி நமைநாளும்
காப்பதால் உள்ளே கருமணி காட்டும்கண்
தீப்புரை மேனிச் சிவன்.



இமையோர் கணம் = தேவர்கள், பூத கணங்கள்;
இமை ஓர் கணம் = இமை ஒரு க்ஷணம்;
நீர்மை = 1) நீர், மை; / 2) சிறந்த குணம்; அழகு;
அமைதல் = பொருந்துதல்; தங்குதல்;
கருமணி = 1) கண்ணில் உள்ள கண்மணி; / 2) கரிய மணி;
புரை - போன்ற; ஒத்த;



கண்:
(இமைக்கும் பொழுது) இமை ஒரு க்ஷண நேரம் கண்ணைச் சுற்றி இருக்கும். நீரும் மையும் இருக்கும். நிலைகொள்ளாமல் பல பக்கங்களில் பார்த்து, எப்பொழுதும் நம்மைக் காக்கும். அதனுள் கண்மணியும் இருக்கும்.



சிவன்:
தேவர்கள், பூத கணங்கள் சுற்றி இருப்பர். சிறந்த குணங்கள் (அல்லது அழகு) உடையவர். சதா ஆனந்த நடம் புரிபவர். உயிர்களை என்றும் காப்பவர். (அவரது கழுத்தின்) உள்ளே விடம் கரிய மணி போலத் தோன்றும்.
தீப் போன்ற செம்மேனி உடைய சிவன்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment