Saturday, November 12, 2016

03.04.004 - சிவன் - மன்மதன் - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-17
4) சிவன் - மன்மதன் - சிலேடை - 2
-----------------------------------------------------------------------
வில்லேந்தி மென்மலர் அம்பை உடையவன்
கொல்லாக் கணையால் கொளுத்துவான் இல்லான்
வடிவம் பெரிய வரையும் வளைக்கும்
அடிகள் மதனவேள் ஆங்கு.



அம்பை = 1) அம்பு+; / 2) பார்வதி;
உடையவன் - உடையான் - சுவாமி;
வரை = மலை;
வளைத்தல் = 1) நேர்மையினின்று விலகச் செய்தல்; / 2) வளையச் செய்தல்;
அடிகள் = சிவன்;
மதனவேள் = மன்மதன்;



மன்மதன்:
கையில் கரும்பை வில்லாக ஏந்தி இருப்பவன். மென்மலர்களால் ஆன அம்புகளை உடையவன். யாரையும் கொல்லாத அம்மலர்க்கணைகளால் தாக்கி, மக்களது உள்ளத்தில் காமத்தீயை மூட்டுவான். (சிவனது தவத்தைக் குலைக்க முயன்றபொழுது, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு உடல் சாம்பல் ஆனவன்). உருவமற்றவன்; பெரியவர்களையும் (முனிவர்கள் போன்றவர்களையும்) மனம் பிறழச் செய்வான்.



சிவன்:
வில்லை ஏந்தியவன் (முப்புர தஹனம் (அல்லது) விஜயனோடு காட்டில் வேடனாய்ச் சென்று பொருதது). மென்மையான மலர் போன்ற பார்வதிக்குத் தலைவன். (தன் கையிலிருந்து கணையை ஏவாததால் அது 'கொல்லாத கணை'); முப்புரங்களைச் சிரிப்பினாலேயே கொளுத்தியவன். அருவமும் ஆனவன். (முப்புரம் எரித்த பொழுது) பெரிய மலையையும் வில்லாக வளைத்தவன்.



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment