Saturday, November 12, 2016

03.04.013 - சிவன் - பூமி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-03-30

3.4.13 - சிவன் - பூமி - சிலேடை

-------------------------------------------------------------

சுற்றிடும் எப்போதும் தொல்பொருள் தோன்றுமுயிர்

முற்றுமொடுங் கும்படியாம் முன்னிடில் பெற்றிருக்கும்

மாதரையாம் பண்பிருக்கும் வான்மதிசேர் மாண்பிருக்கும்

ஓதவிடம் உண்ணி உலகு.


சுற்றுதல் - 1) சுழல்தல்; சுற்றிவருதல்; 2) சூழ்ந்திருத்தல்;

முற்றும் - 1) வளர்ச்சி அடையும்; முதுமை அடையும்; 2) எல்லாம்;

படி - 1) பூமி; 2) விதம்; 2) விதம்;

முன்னுதல் - கருதுதல்; எண்ணுதல்;

பெற்று - 1) பெருமை; 2) எருது;

பெற்றிருக்கும் - 1) உடையது; பெருமை இருக்கும் 2) எருது உடையவன்;

மாதரையாம் - 1) மா தரை ஆம்; 2) மாது அரை ஆம்;

மா - பெருமை; அழகு;

வான் - வானம்; அழகு; பெருமை;

வால் - வெண்மை; தூய்மை;

வான்மதி - 1) வான் மதி (அழகிய நிலா; வானில் உள்ள நிலா); 2) வால் மதி (தூய அறிவு; பேரறிவு);

மாண்பு - மாட்சிமை; பெருமை; அழகு;

உண்ணி - உண்டவன்;


பூமி:

எப்பொழுதும் (தன்னைத் தானே சுற்றுவதோடு சூரியனையும்) சுற்றும். மிகவும் தொன்மையானது. உயிர்கள் பிறக்கும், வளரும் (அல்லது - முதுமை அடையும்), அடங்குமாறு ஆகும் (/ பூமி ஆகும்); சிந்தித்தால், அழகு உடைய பெரிய தரை ஆகும். அழகிய சந்திரன் பொருந்தியிருக்கும். உலகம் (பூமி).


சிவன்:

எப்பொழுதும் எங்கும் வியாபித்து இருப்பவன். பழம்பொருள். எல்லா உயிர்களும் தோன்றி ஒடுங்குமாறு ஆனவன். சிந்தித்தால், எருதினை (வாகனமாக) உடையவன்; எருதின்மேல் வீற்றிருப்பவன். திருமேனியில் உமை ஒரு பாதி ஆகும் பண்பு உடையவன்; பேரறிவாளன்; வெண்திங்களைச் சூடியவன். கடல்விடத்தை உண்ட சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment