Saturday, November 12, 2016

03.04.002 - செல்பேசி (cell phone) - சிவன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-13
2) செல்பேசி (cell phone) - சிவன் - சிலேடை
-----------------------------------------------------------------------
ஏழிசை பாடி எழுப்புவதும் உண்டுபல
ஊழியர்கை யேந்திநட மாடுவர்நீர் சூழிவ்
வுலகில் மறைவாய் ஒலிக்கும்செல் பேசி
அலகில் அரற்கிணை ஆம்.



ஊழி - பிரளயம்;
ஊழியர் - 1) அலுவலர்; 2) ஊழியார் = ஊழிக்காலத்தும் அழியாதிருப்பவர்;
கையேந்தி - 1) கையில் ஏந்தி; 2) யாசிப்பவன்;
நடமாடுதல் - 1) அங்கும் இங்கும் சஞ்சரித்தல்; 2) நாட்டியம் ஆடுதல்;
மறைவாய் - 1) பிறர் அறியாதபடி; 2) வேதத்தை வாய்;
அலகில் = அலகு இல் - அளவு இல்லாத;
அரற்கு - அரன்+கு - அரனுக்கு;
இணை - சமம்;



செல்பேசி (cell phone) :
பலவித ஸ்வரங்களில் ஒலி செய்து நம்மை உறக்கத்திலிருந்து எழுப்புவதும் உண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகில் பல அலுவலர்கள் கையில் தூக்கிக்கொண்டு நடமாடுவார்கள். பிறர் அறியா வண்ணம் ஒலிசெய்யாமல் அதிர்வதும் உண்டு.



சிவன் :
பக்தர்கள் காலையில் இன்னிசைகொண்டு திருப்பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புவதும் உண்டு. பல பிரளய காலங்களைக் கண்டவர். பிரமனது மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர்; பல தலங்களிலும் திருநடம் செய்பவர். அவரது திருவாய் வேதம் ஓதும்.
அளவற்ற (புகழ், வடிவம் உடைய) ஹரன்.



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment