Saturday, November 12, 2016

03.04.010 - சிவன் - தென்னைமரம் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-03-25

3.4.10 - சிவன் - தென்னைமரம் - சிலேடை

-------------------------------------------------------------

இலையென்றும் உண்டென்றும் சொல்வதால் என்றும்

நிலையாகி நிற்பதால் நீரைத் தலையினில்

தாங்குவதால் பிள்ளையுருத் தான்கொண்டு கோடில்லாப்

பாங்குளதெங்(கு) ஈசன் பகர்.


இலை = 1) இலை; 2) இல்லை;

நிலை = 1) கதவு நிலை; தூண்; 2) மாறாத, அழியாத தன்மை;

பிள்ளை - 1) தென்னம்பிள்ளை; 2) மகன்;

கோடு - 1) மரக்கிளை; 2) நடுநிலை நீங்குதல்; பாரபட்சம் / பட்சபாதம்;

பாங்கு - இயல்பு;

தெங்கு - தென்னை;   

பகர்தல் - சொல்தல்;


தென்னைமரம்:

(இலையுதிர்காலத்தில் பல மரங்கள் இலைகளே இன்றி இருக்கும். அவ்வாறன்றித் தென்னையின் இயல்புகளைக் கூறும்பொழுது இம்மரத்தில்) எப்பொழுதும் இலை உண்டு என்றும் சொல்வார்கள். வீடுகளில் கதவுக்கு இருக்கும் நிலையாக இருக்கும். (அல்லது - 1. தூணாக இருக்கும் - அல்லது - 2. நகராமல் ஒரே இடத்தில் இருக்கும்). உச்சியில் இளநீரைத் தாங்கியிருக்கும். தென்னம்பிள்ளை உருவும் ஆகும். கிளைகளின்றி இருக்கும்.


சிவன்:

(கடவுள்) இல்லை என்றும் உண்டு என்றும் (முறையே, நாத்திகர், ஆத்திகர்) சொல்வார்கள். என்றும் அழியாமல் நிலைத்து இருப்பவன். தனது தலையில் கங்கையைத் தாங்கியவன். முருகனாகப் பிள்ளை உரு ஆனவன். என்றும் நடுநிலை நீங்காத குணம் உடையவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment