Saturday, November 12, 2016

03.04.005 - சிவன் - கண் - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-21
5) சிவன் - கண் - சிலேடை - 1
-----------------------------------------------------------------------
நல்ல வழிகாட்டி நம்முடன் எவ்விடமும்
செல்வதால் மையுமணி செய்வதால் அல்லும்
பகலும் சுழன்றெல்லாம் பார்ப்பதால் அந்திக்
ககன நிறத்தரன் கண்.



மையுமணி = 1) மையும் அணி; / 2) மையும் மணி;
அணி - அழகு;
மை - 1) கண்ணுக்கு இடும் மை; / 2) கரிய நிறம்; விஷம்;
சுழல்தல் - சுழன்று ஆடுதல்; அங்குமிங்கும் திரிதல்;
ககனம் - வானம்;



கண்:
நாம் செல்ல நல்ல வழியைக் காட்டி, நம்மோடு எல்லா இடத்திற்கும் வரும். கண்ணுக்கு இடும் மையும் அதற்கு அழகு செய்யும். இரவும் பகலும் நிலையாக இராமல் சுழன்றுகொண்டே இருக்கும். (உறக்கத்திலும் கண் அசையும் - 'Rapid Eye Movement'). எல்லாவற்றையும் பார்க்கும்.



சிவன்:
(பக்தர்களுக்கு) நல்ல வழிகாட்டியாக இருப்பான். எங்கும் நமக்குத் துணையாக வருவான். அவனது (கழுத்தில் ஆலகால விஷத்தால் உண்டான) கருநிறமும் மணி போன்று இருக்கும். எப்போதும் (திருநடம் செய்து) சுழன்று ஆடி (அல்லது - பிச்சைக்காகத் திரிந்து), பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றையும் பார்ப்பவன்.
அந்தி வானம் போன்ற செந்நிறம் உடைய ஹரன்.



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment