Thursday, November 24, 2016

03.04.020 - சிவன் - காற்று - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-09

3.4.20 - சிவன் - காற்று - சிலேடை

-------------------------------------------------------------

உண்ணின் றுயிர்களை ஓம்புவதால் மெய்யுணர்வாய்க்

கண்ணினாற் காணற் கருமையினால் பண்ணிய

வானூர்தி ஏறுதலால் வையம்சூழ் மாண்பினால்

ஆனூர் அரன்காற் றறி.


சொற்பொருள்:

உண்ணின்று - உள் நின்று;

ஓம்புதல் - பாதுகாத்தல்;

மெய் - 1. உடல்; / 2. உண்மை;

அருமை - 1. இன்மை; / 2. எளிதிற் பெறக்கூடாமை;

பண்ணிய வானூர்தி - 1. செய்த விமானம்; / 2. வான் பண்ணிய ஊர்தி - தேவர்கள் செய்த தேர்;

வையம் - 1. பூமி; / 2. உலகமக்கள்;

சூழ்தல் - 1. சுற்றியிருத்தல்; / 2. பிரதட்சிணம் செய்தல்;

ஊர்தல் - ஏறுதல் ஏறிச்செலுத்துதல்;
ஆனூர் அரன் - (சம்பந்தர் தேவாரம் - 1.73.1 - "கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே.");


காற்று:

ள் நின்று யிர்களை ஓம்புவதால் - எல்லா உயிர்களின் உள்ளே இருந்து உயிர்வாழச் செய்யும்.

மெய்-ணர்வாய்க் கண்ணினால் காணற்கு அருமையினால் - (வீசும்பொழுது) நம் உடலால் உணரக்கூடியது. (ஆனால்) கண்ணால் காண முடியாத தன்மை உடையது.

பண்ணிய வானூர்தி ஏறுதலால் - (மனிதர்) செய்த விமானம் காற்றில் ஏறிச் செல்லும்.

வையம் சூழ் மாண்பினால் - இவ்வுலகத்தைக் காற்றுச் சூழ்ந்திருக்கும்.

காற்று அறி - காற்று.


சிவன்:

ள் நின்று யிர்களை ஓம்புவதால் - எல்லா உயிர்களின் உள்ளே இருந்து பேணுபவன்;

மெய்-ணர்வாய்க் கண்ணினால் காணற்கு அருமையினால் - மெய்ஞ்ஞானம் ஆனவன். கண்ணால் எளிதிற் காண முடியாதவன்.

பண்ணிய வான் ஊர்தி ஏறுதலால் - (முப்புரம் எரித்தபொழுது) தேவர்கள் சமைத்த தேரில் ஏறியவன்;

வையம் சூழ் மாண்பினால் - உலகமக்கள் வலம்செய்து வழிபடுவர்;

ஆன் ஊர் அரன் அறி - இடபத்தை வாகனமாக உடைய சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment