Monday, April 18, 2022

M.052 - அகலா - மகத்தொளியாய் - மடக்கு

2010-02-27

M.052 - அகலா - மகத்தொளியாய் - மடக்கு

--------------

அகலா மதியேனும் அல்லலற என்றும்

அகலா அளியெனு(ம்)நெய் ஆரும் - அகலா

மகத்தொளியாய் நிற்பாய் அயன்மால் அறியா

மகத்தொளியாய் தாராய் வரம்.


பதம் பிரித்து:

அகலா மதியேனும் அல்லல் அற, என்றும்

அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம்

அகத்து ஒளியாய் நிற்பாய், அயன் மால் அறியா

மகத்து ஒளியாய், தாராய் வரம்.


சொற்பொருள்:

அகல்தல் - 1. விருத்தியடைதல்; விரிதல்; 2. நீங்குதல்;

அளி - அன்பு;

அகல் - விளக்குத் தகழி;

மகத்து - பெரியது; பெருமையானது;

ஒளி - 1. வெளிச்சம்; 2. மறைத்தல் (ஒளித்தல்);

ஒளியாய் - 1. ஒளித்துக்கொள்ளாதவனே; ஒளி ஆகி; 2. ஒளி உடையவனே;


அகலா மதியேனும் அல்லல் அற - சிறுமதி உடைய அடியேனும் துன்பம் எல்லாம் தீரும்படி;

அகலா அளி எனும் நெய் ஆரும் அகல் ஆம் கத்து ஒளியாய் நிற்பாய் - நீங்காத அன்பு என்ற நெய் நிறைந்த அகல் ஆன நெஞ்சில் உன்னை மறைத்துக்கொள்ளாமல் ஒளி ஆகி நிற்பவனே; (= பக்தர்களது உள்ளம் என்ற அகலில் திகழ்கின்ற ஜோதியே); (* அப்பர் தேவாரம் - 4.75.4 - "உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் அட்டி");

அயன் மால் அறியா மகத்து-ஒளியாய் - பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத பெருஞ்சோதியே;

தாராய் வரம் - வரம் தருவாயாக;


பிற்குறிப்பு: * அப்பர் தேவாரம் - 4.75.4 -

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.051 - நம்பிவந்து - பாடில் - மடக்கு

2010-02-26

M.051 - நம்பிவந்து - பாடில் - மடக்கு

--------------

நம்பிவந்து சேர்வார் நடுக்கம்தீர்ப் பார்ஆரூர்

நம்பிவந்து தாள்தொழக்கண் நல்கினார் - நம்பிவந்து

பாடில் வரும்நெஞ்சே பார்வதி கோன்அருளால்

பாடில் வளவாழ்வே பார்.


சொற்பொருள்:

நம்பி - ஆணில் சிறந்தவன்; கடவுள்;

நம்புதல் - 1. விரும்புதல்; 2. நம்பிக்கை வைத்தல் (To believe, have faith in);

நம்பி - 1. நம்பிக்கையோடு; 2. நம்பி ஆரூரர்; 3. விரும்பி;

பாடு - 1. பாடுதல்; 2. வருத்தம்;

பாடில் - 1. பாடினால்; 2. துன்பம் இல்லாத (பாடு இல்);

பார்த்தல் - அறிதல்;


நம்பி வந்துசேர்வார் நடுக்கம் தீர்ப்பார் - நம்பிக்கைவைத்து வந்தடைந்தவர்களது பயத்தைப் போக்கிக் காத்து அருள்பவர்;

ஆரூர்நம்பி வந்து தாள் தொழக் கண் நல்கினார் - சுந்தரர் வந்து திருவடியைப் போற்றவும் அவருக்குக் கண்பார்வையை அளித்தவர்; (சுந்தரர் தம் கண்களில் பார்வையை இழந்து, பின்னர் மீண்டும் பெற்றதைப் பெரியபுராணத்தில் காண்க); (திருவாலியமுதனார் - திருவிசைப்பா - 9.24.10 - "ஆரூர் நம்பி யவர்கள் இசை பாட");

நம்பி வந்து பாடில் வரும், நெஞ்சே, பார்வதிகோன் அருளால் பாடு-இல் வளவாழ்வே பார் - மனமே! நீ விரும்பிவந்து அப்பெருமானாரது புகழைப் பாடினால், உமாபதி அருளால் துன்பம் இல்லாத சிறந்த வாழ்வே வரும். அறிவாயாக!


வி. சுப்பிரமணியன்

------------- -------------

T.122 - பராய்த்துறை - தெள்ளற்கு வாழ்த்து

2010-02-25

T.122 - பராய்த்துறை - தெள்ளற்கு வாழ்த்து

-----------------

(வண்ணவிருத்தம்;

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த .. தனதான)

(கள்ளக்கு வாற்பை - திருப்புகழ் - வள்ளிமலை)


தெள்ளற்கு வாழ்த்து நல்லர்க்கு வாய்த்த

.. .. செல்வத்தை ஆக்கி .. அழியாத

.. செய்குற்ற(ம்) மாய்க்கு(ம்) மல்லுற்ற தீர்த்த

.. .. செல்லற்கொ ரேற்றை .. மகிழ்வோனே

கள்ளுற்ற பூக்கள் உள்ளுற்ற காக்கள்

.. .. நள்ளிற்ப ராய்த்து .. றையினானே.

.. கல்லப்பர் நீர்க்கண் உய்விக்க, வேர்த்த

.. .. கையர்க்கு வீழ்ச்சி .. தருவோனே

பள்ளத்தை நோக்கு முள்ளத்தி னோட்டம்

.. .. வெள்ளத்தை ஏய்க்கு .. மதனாலே

.. கள்ளத்தை ஆற்றி எள்ளற்கு ளேற்கு(ம்)

.. .. முள்ளற்ற வாழ்க்கை .. அருளாயே

தள்ளற்க காக்க வெள்ளத்த நீற்ற

.. .. வள்ளிப்பி ராட்டி .. துணைதாதாய்

.. சைலத்தி னாட்டி மெய்யொட்ட ஏற்ற

.. .. சைவத்த மூத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

தெள்ளற்கு வாழ்த்து நல்லர்க்கு வாய்த்த

.. .. செல்வத்தை ஆக்கி, அழியாத

.. செய்-குற்ற(ம்) மாய்க்கு(ம்) மல் உற்ற தீர்த்த;

.. .. செல்லற்கு ஒர் ஏற்றை மகிழ்வோனே;

கள் உற்ற பூக்கள் உள் உற்ற காக்கள்

.. .. நள்ளிற் பராய்த்துறையினானே;

.. கல் அப்பர் நீர்க்கண் உய்விக்க, வேர்த்த

.. .. கையர்க்கு வீழ்ச்சி தருவோனே;

பள்ளத்தை நோக்கும் உள்ளத்தின் ஓட்டம்

.. .. வெள்ளத்தை ஏய்க்கும்; மதனாலே (/அதனாலே)

.. கள்ளத்தை ஆற்றி எள்ளற்கு உளேற்கும்

.. .. முள் அற்ற வாழ்க்கை அருளாயே;

தள்ளற்க; காக்க; வெள்ளத்த; நீற்ற;

.. .. வள்ளிப்பிராட்டி துணை தாதாய்;

.. சைலத்தினாட்டி மெய் ஒட்ட ஏற்ற

.. .. சைவத்த; மூத்த பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;

தெள்ளற்கு வாழ்த்து நல்லர்க்கு வாய்த்த செல்வத்தை ஆக்கி, அழியாத செய்-குற்றம் மாய்க்கும் மல்ற்ற தீர்த்த - தெளிந்த ஞானம் பெறவேண்டி வழிபடும் நல்லவர்களுக்குச் சிறந்த செல்வத்தை வழங்கி, நீக்குவதற்கு அரிய வினையையெல்லாம் அழிக்கும் வலிமை உடைய தூயனே; (தெள்ளல் - தெள்ளுதல் - தெளிதல்); (வாய்த்தல் - நன்கமைதல்; சிறத்தல்); (மல் - வலிமை); (தீர்த்தன் - தூயன்);

செல்லற்கு ஒர் ஏற்றை மகிழ்வோனே - வாகனமாக ஒப்பற்ற எருதை விரும்பியவனே; (செல்லற்கு - செல்வதற்கு); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

கள்ற்ற பூக்கள் உள்ற்ற காக்கள் நள்ளிற் பராய்த்துறையினானே - தேன் நிறைந்த பூக்கள் உள்ளே இருக்கின்ற சோலைகள் நடுவில் இருக்கும் திருப்பராய்த்துறையில் உறைகின்றவனே; (கள் - தேன்); (கா - சோலை); (நள் - நடு); (* "பராய்த்து..றையினானே" -- "தீப மங்கள ஜோதீ நமோ நம" என்ற திருப்புகழில் வரும் "மாகயி..லையிலேகி" என்ற இடத்தைப் போல, இங்கே "றையினானே" என்பதில் "றை"யைக் குறில்போலக் கருதவேண்டும்);

கல்ப்பர் நீர்க்கண் உய்விக்க, வேர்த்த கையர்க்கு வீழ்ச்சி தருவோனே - (கடலில் ஆழ்த்துவதற்காகச் சமணர்கள் பிணித்த) கல்லே திருநாவுக்கரசரைக் கடலில் உய்யச்செய்ய, அஞ்சிய சமணர்களுக்கு வீழ்ச்சியைத் தந்தவனே; (கல் - கல்லே; ஏகாரம் தொக்கது); (நீர் - கடல்); (வேர்த்தல் - அஞ்சுதல்); (கையர் - கீழோர்; இங்கே சமணர்கள்);

பள்ளத்தை நோக்கும் உள்ளத்தின் ஓட்டம் வெள்ளத்தை ஏய்க்கும் - தாழ்வையே கருதும் என் உள்ளத்தின் ஓட்டம் வெள்ளத்தைப் போன்றது; (பள்ளம் - தாழ்வு); (நோக்குதல் - கருதுதல்; விரும்புதல்); (ஏய்த்தல் - ஒத்தல்);

மதனாலே (/அதனாலே) கள்ளத்தை ஆற்றி எள்ளற்கு ளேற்கும் முள்ற்ற வாழ்க்கை அருளாயே - (அப்படி இருப்பதால்) செருக்கால் குற்றமே செய்து, பிறரால் இகழும்படி உள்ள எனக்கும், முள் இல்லாத நன்னெறியில் செல்லும் இனிய வாழ்வை அளிப்பாயாக; (மதன் - செருக்கு; ஆணவம்; அறியாமை); (கள்ளம் - வஞ்சனை; குற்றம்); (எள்ளல் - இகழ்ச்சி); (உளேற்கு - உளேன்+கு - உள்ளேனுக்கு);

தள்ளற்க - கைவிட்டுவிடாதே; (தள்ளுதல் - கைவிடுதல்);

காக்க - காத்தருள்வாயாக;

வெள்ளத்த - கங்காதரனே; (வெள்ளம் - நீர்ப்பெருக்கு; நீர்);

நீற்ற - திருநீற்றைப் பூசியவன்;

வள்ளிப்பிராட்டி துணை தாதாய் - வள்ளிகணவனான முருகனுக்குத் தந்தையே; (துணை - கணவன்); (பெரியபுராணம் - 12.29.55 - "பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவுநாள்");

சைலத்தினாட்டி மெய் ஒட்ட ஏற்ற சைவத்த - மலைமகளைத் திருமேனியில் சேர்ந்து இருக்குமாறு ஒரு பக்கத்தில் ஏற்ற, சிவாகமங்களில் சொல்லப்பெறுபவனே; (சைலம் - மலை); (ஆட்டி - பெண்); (சைவத்தன் - சிவகாமங்களில் சொல்லப்பெறுபவன்); (சைவம் - ஆகமம்; சிவாகமம்); (சுந்தரர் தேவாரம் - 7.82.7 - "சைவத்தசெவ் வுருவன்" - சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவன்);

மூத்த பெருமானே - யாவரினும் மூத்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

M.050 - நம்மால் - அடைகண்டம் - மடக்கு

2010-02-10

M.050 - நம்மால் - அடைகண்டம் - மடக்கு

--------------

நம்மால் அறிவை நனிமறைக்க ஆவதெலாம்

நம்மால் எனவெண்ணல் நன்காமோ - நம்மால்

அடைகண்டம் காட்டுகின்ற அண்ணல் அடியை

அடைகண்டம் கிட்டா அறி.


பதம் பிரித்து:

நம் மால் அறிவை நனி மறைக்க, "ஆவது எலாம்

நம்மால்" என எண்ணல் நன்கு ஆமோ? - நம், ஆல்

அடை கண்டம் காட்டுகின்ற அண்ணல் அடியை

அடை; கண்டம் கிட்டா அறி.


சொற்பொருள்:

மால் - 1. அறியாமை; மயக்கம்;

ஆல் - 1. மூன்றாம் வேற்றுமை உருபு; 2. ஆலகாலம்;

அடை - 1. அடைத்தல்; (ஒளித்துவைத்தல்); 2. அடைதல் (சரண்புகுதல்);

கண்டம் - 1. கழுத்து; 2. ஆபத்து;

கிட்டுதல் - அணுகுதல்; சமீபமாதல்;


நம் மால் அறிவை நனி மறைக்க, "ஆவது எலாம் நம்மால்" என எண்ணல் நன்கு ஆமோ? - மதியை நம் அறியாமை மிகவும் மறைத்துவிட, "எல்லாம் நம்மால்தான் நடக்கின்றன" என்று எண்ணுவது நன்மை பயக்குமா?

நம், ஆல் அடை கண்டம் காட்டுகின்ற அண்ணல் அடியை அடை - விஷத்தைக் கண்டத்தில் அடைத்துவைத்துள்ள நம் நீலகண்டன் திருவடியைச் சரண்புகு;

கண்டம் கிட்டா அறி - எவ்வித ஆபத்தும் நெருங்கமாட்டா;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Thursday, March 17, 2022

S.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

2010-01-30

S.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

------------------

பிறையணி பூரணமாய்ப் பேரொளி யோடு

பிறங்கியல்லில் ஆடுகின்ற பெற்றி - நிறையும்

பெருங்காதல் கொண்டோர்கள் பேசவரும் சீரார்

கருங்கண்டன் பௌர்ணமி காண்.


சொற்பொருள்:

அணி - அழகு;

அணிதல் - சூடுதல்;

அணி பூரணமாய் - 1. அழகிய முழுமை ஆகி; / 2. அணிகின்ற பூரணன் ஆகி;

பிறங்குதல் - விளங்குதல்;

அல் - இரவு; இருள்;

ஆடுதல் - 1. சஞ்சரித்தல்; / 2. நாட்டியம் ஆடுதல்;

பெற்றி - தன்மை; பெருமை;

காதல் - 1. அன்பு; / 2. பக்தி;

பேசவரும் - 1. பேச வரும்; / 2. பேச அரும்;

பேசுதல் - 1. சொல்லாடுதல்; / 2. துதித்தல்;

காண் - முன்னிலை அசை;


பௌர்ணமி:

பிறைணி பூரணமாய்ப் - பிறையாகத் தோன்றி அழகிய முழுமையடைந்து;

பேரொளியோடு பிறங்கி - மிகுந்த ஒளியோடு திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - இரவில் இயங்குகின்ற தன்மை நிறைந்தது;

பெருங்காதல் கொண்டோர்கள் பேச வரும் சீர் ஆர் - மிகவும் காதலுடைய ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசுமாறு வருகின்ற பெருமை பொருந்திய;

பௌர்ணமி - முழுநிலவு;


சிவன்:

பிறை அணி பூரணமாய்ப் - பிறையைச் சூடும் பூரணப்பொருள் ஆகி;

பேரொளியோடு பிறங்கி - தேஜோமயனாகத் திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்ற பெருமை உடைய;

பெருங்காதல் கொண்டோர்கள் பேச அரும்-சீர் ஆர் - பேரன்புடைய பக்தர்கள் துதிக்க அரிய புகழ் மிக்க;

கருங்கண்டன் - நீலகண்டன்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

S.113 - சிவன் - மரம் - சிலேடை

2010-01-30

S.113 - சிவன் - மரம் - சிலேடை

------------------

இலைமலர் மேல்திகழு மெய்ப்பை அகற்றி

நலம்தரும் தாள்நிழல் நாளு - மலைபவர்க்

கென்றுமில்லா மாண்பிருக்கும் ஏகபா தங்காட்டும்

மன்றினடம் ஆடி மரம்.


சொற்பொருள்:

மெய்ப்பை - உடலாகிய கூடு;

எய்ப்பு - 1. இளைப்பு (Weariness); / 2. வறுமைக் காலம் (Time of adversity);

திகழுமெய்ப்பை - 1. திகழும்; எய்ப்பை / 2. திகழும்; மெய்ப்பை

நிழல் - 1. சாயை (Shade, shadow); / 2. ஒளி; புகலிடம்; தானம்;

அலைபவர் - திரிபவர்;

மலைபவர் - மயங்குபவர்; மாறுபடுபவர்;

இல்லாமாண்பு - 1. இல் ஆம் மாண்பு / 2. இல்லா மாண்பு;

பாதம் - 1. மரத்தின் அடியிடம்; அடித்தண்டு; / 2. திருவடி;

ஏகபாதர் - ஒற்றைத் தாளர் ஆகிய சிவமூர்த்தம்; (A manifestation of Šiva with one foot);

(அப்பர் தேவாரம் - 6.35.2 - "ஏழுலகுமாய் நின்ற ஏகபாதர்");


மரம்:

இலை மலர் மேல் திகழும் - இலைகளும் பூக்களும் மேலே இருக்கும்;

எய்ப்பை அகற்றி நலம் தரும் தாள் நிழல் - (வெயிலில்) அதன்கீழ் இருக்கும் நிழல் (மக்கள்) களைப்பைப் போக்கி நலம் அளிக்கும்;

நாளும் அலைபவர்க்கு என்றும் இல் ஆம் மாண்பு இருக்கும் - எப்போதும் ஊர் ஊராகத் திரிபவர்க்கு மரத்தடியே வீடும் ஆகும்; (பஜகோவிந்தம் - 18 - "சுர மந்திர தரு மூல நிவாஸ:");

ஏகபாதம் காட்டும் - ஒரே ஒரு அடிப்பாகம் காட்டும்;

மரம் - ஒரு மரம்;


சிவன்:

இலை மலர் மேல் திகழும் - திருமுடிமேல் (வில்வம், வன்னி, முதலிய) இலைகளும் (கொன்றை, ஊமத்தை, எருக்கு முதலிய) மலர்களும் இருக்கும்;

மெய்ப்-பை அகற்றி நலம் தரும் தாள்நிழல் - அவன் திருவடி பக்தர்கள் உடலாகிய பையை இனியும் அடையாதபடி வினையைத் தீர்த்து நலம் அளிக்கும். (மெய் - உடல்); (தாள் நிழல் - திருவடி);

நாளும் மலைபவர்க்கு என்றும் இல்லா மாண்பு இருக்கும் - என்றும் மயங்கி முரண்படுபவர்களுக்கு இல்லாதவன். (அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருளில்லாதவன்);

ஏகபாதம் காட்டும் - ஏகபாதமூர்த்தி;

மன்றில் நடம் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுகிற நடராஜன்; (மன்றினடம் ஆடி - மன்றில் நடம் ஆடி - அம்பலக் கூத்தன்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Tuesday, March 15, 2022

S.112 - சிவன் - திருமால் - சிலேடை

2010-01-28

S.112 - சிவன் - திருமால் - சிலேடை

------------------

வானரர் வாழ்த்தும் அரவணைநீர் மையரவர்

கானலர் சூடுவர்அஞ் சக்கரர் - மானடிப்பார்

காத்தருள்வார் வெற்புவில் கையேந்தி நாகமதி

சேர்த்தவர்நா ராயணர் செப்பு.


சொற்பொருள்:

வானரர் - 1. வான் நரர்; / 2. வானரர்;

வான் - தேவர் (இடவாகுபெயர்);

அணைதல் - 1. பொருந்துதல்; / 2. படுத்தல் (To lie down);

அணை - மெத்தை; படுக்கை;

அரவணை நீர்மையரவர் - 1. அரவு அணை (வினைத்தொகை) நீர் மையர்; அவர் / 2. அரவு அணை (படுக்கை) நீர்மையர்; அவர்;

நீர் - கடல்;

மை - 1. கருநிறம்; 2. விஷம்;

நீர்மை - தன்மை; சிறந்த குணம்;

நீர்மையர் - 1. கடல் விடத்தர்; (நீர் - கடல்; மை - விஷம்); / 2. தன்மையர்; கடல் நடுவில் இருப்பவர்; (மையம் - நடு); (நாராயணன் - நீரை இடமாக உடையவன் - திருமால்);

கான் - வாசனை;

அலர் - பூ;

நலர் - நல்லர் (நல்லவர்கள்) - இடைக்குறை;

கானலர் - 1. கான் அலர் சூடுவர் (கான் + அலர்) / 2. கால், [ல்]லர் சூடுவர் (கால் + நலர்);

அம் - அழகு;

அக்கரம் - எழுத்து;

அஞ்சக்கரர் - 1. அஞ்சு அக்கரர் / 2. அம் சக்கரர்;

மான் - 1. பெருமான்; பெரியோன் (Great person or being); / 2. மான் என்ற விலங்கு;

மால் - திருமால்; கருமை; பெருமை;

நடித்தல் - 1. கூத்தாடுதல்; / 2. பாசாங்கு செய்தல்;

மானடிப்பார் - 1. மான் நடிப்பார் (பெருமான்; நாட்டியம் ஆடுவார்); /2. மான் அடிப்பார் (இராமனாய் மான்-வேடத்தில் வந்த மாரீசனைத் தாக்குவார்); 3. மால் நடிப்பார் (கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);

வெற்பு - மலை;

வெற்புவில் - 1. மேருமலை ஆகிய வில்; 2. வெற்பும் வில்லும் - உம்மைத்தொகை.


திருமால்:

வானரர் வாழ்த்தும், அரவணை நீர்மையர் - (இராமனாக வந்தபோது) வானரர்கள் போற்றுகின்ற, (கடல் நடுவே) நாகப்-படுக்கை உடையவர்;

அவர் கால் நலர் சூடுவர் - அவர் திருவடியை நல்லவர்கள் (தங்கள் உச்சியில்) சூடுவார்கள்;

அம் சக்கரர் - அழகிய சக்கராயுதம் உடையவர்;

மான் அடிப்பார் (--அல்லது-- மால் நடிப்பார்) - இராமாவதாரத்தில் மானாக வந்த மாரீசனை அம்பால் எய்தவர்; (--அல்லது-- கிருஷ்ணாவதாரத்தில் மிகப் பாசாங்கு செய்தவர்);

காத்தருள்வார் வெற்பு, வில் கை ஏந்தி - கிருஷ்ணனாய் மலையைக் குடையாக உயர்த்திப் பிடித்தும், இராமனாய் வில்லைக் கையில் ஏந்தியும் காத்தவர்;

நாராயணர் செப்பு - திருமால் என்று சொல்;


சிவன்:

வான் நரர் வாழ்த்தும், அரவு அணை, நீர்மையர் (& நீர்-மையர்) - வானவர்களும் மனிதர்களும் வணங்குகின்ற, பாம்புகள் பொருந்தும் திருமேனியர்; கடல்விஷத்தை உண்டு அணிந்தவர்; (நீர்மையர் - இச்சொல் இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு வந்தது);

அவர் கான்-அலர் சூடுவர் - அவர் வாசமலர்களை அணிவார்;

அஞ்சு-அக்கரர் - திருவைந்தெழுத்தானவர்; நமச்சிவாய என்ற திருநாமம் உடையவர்;

மான், நடிப்பார் - பெருமான், திருநடம் செய்வார்;

காத்தருள்வார் வெற்புவில் கை ஏந்தி - (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையாகிய வில்லைக் கையில் ஏந்திக் காத்தருளியவர்;

நாகம் மதி சேர்த்தவர் செப்பு - பாம்பையும் சந்திரனையும் (திருமுடிமேல்) ஒன்றாகச் சேர்த்தவரான சிவபெருமான் என்று சொல்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------