2010-01-30
S.113 - சிவன் - மரம் - சிலேடை
------------------
இலைமலர் மேல்திகழு மெய்ப்பை அகற்றி
நலம்தரும் தாள்நிழல் நாளு - மலைபவர்க்
கென்றுமில்லா மாண்பிருக்கும் ஏகபா தங்காட்டும்
மன்றினடம் ஆடி மரம்.
சொற்பொருள்:
மெய்ப்பை - உடலாகிய கூடு;
எய்ப்பு - 1. இளைப்பு (Weariness); / 2. வறுமைக் காலம் (Time of adversity);
திகழுமெய்ப்பை - 1. திகழும்; எய்ப்பை / 2. திகழும்; மெய்ப்பை
நிழல் - 1. சாயை (Shade, shadow); / 2. ஒளி; புகலிடம்; தானம்;
அலைபவர் - திரிபவர்;
மலைபவர் - மயங்குபவர்; மாறுபடுபவர்;
இல்லாமாண்பு - 1. இல் ஆம் மாண்பு / 2. இல்லா மாண்பு;
பாதம் - 1. மரத்தின் அடியிடம்; அடித்தண்டு; / 2. திருவடி;
ஏகபாதர் - ஒற்றைத் தாளர் ஆகிய சிவமூர்த்தம்; (A manifestation of Šiva with one foot);
(அப்பர் தேவாரம் - 6.35.2 - "ஏழுலகுமாய் நின்ற ஏகபாதர்");
மரம்:
இலை மலர் மேல் திகழும் - இலைகளும் பூக்களும் மேலே இருக்கும்;
எய்ப்பை அகற்றி நலம் தரும் தாள் நிழல் - (வெயிலில்) அதன்கீழ் இருக்கும் நிழல் (மக்கள்) களைப்பைப் போக்கி நலம் அளிக்கும்;
நாளும் அலைபவர்க்கு என்றும் இல் ஆம் மாண்பு இருக்கும் - எப்போதும் ஊர் ஊராகத் திரிபவர்க்கு மரத்தடியே வீடும் ஆகும்; (பஜகோவிந்தம் - 18 - "சுர மந்திர தரு மூல நிவாஸ:");
ஏகபாதம் காட்டும் - ஒரே ஒரு அடிப்பாகம் காட்டும்;
மரம் - ஒரு மரம்;
சிவன்:
இலை மலர் மேல் திகழும் - திருமுடிமேல் (வில்வம், வன்னி, முதலிய) இலைகளும் (கொன்றை, ஊமத்தை, எருக்கு முதலிய) மலர்களும் இருக்கும்;
மெய்ப்-பை அகற்றி நலம் தரும் தாள்நிழல் - அவன் திருவடி பக்தர்கள் உடலாகிய பையை இனியும் அடையாதபடி வினையைத் தீர்த்து நலம் அளிக்கும். (மெய் - உடல்); (தாள் நிழல் - திருவடி);
நாளும் மலைபவர்க்கு என்றும் இல்லா மாண்பு இருக்கும் - என்றும் மயங்கி முரண்படுபவர்களுக்கு இல்லாதவன். (அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருளில்லாதவன்);
ஏகபாதம் காட்டும் - ஏகபாதமூர்த்தி;
மன்றில் நடம் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுகிற நடராஜன்; (மன்றினடம் ஆடி - மன்றில் நடம் ஆடி - அம்பலக் கூத்தன்);
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment