2010-01-23
M.048 - மருளார் - தருவாய் - மடக்கு
--------------
மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்
மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்
தருவாய் அருளெனினும் சங்கரன் ஓர்வான்
தருவாய் அளிப்பான் தமர்க்கு.
பதம் பிரித்து:
மருள் ஆர் மனத்தர் வழி அறியார்; பின் ஏன்
மருளார்? அடியார்க்கும் உண்டோ - மருள்? ஆர்
"தருவாய் அருள்" எனினும், சங்கரன் ஓர்வான்
தருவாய் அளிப்பான் தமர்க்கு.
சொற்பொருள்:
மருள் - 1. மயக்கம்; 2. அச்சம்;
மருளுதல் - 1. மயங்குதல்; 2. அஞ்சுதல்;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்
ஆர் - யார்;
தரு - கற்பகமரம்;
மருளார் - 1. மயக்கம் மிகுந்த; 2. அஞ்சமாட்டார்; 3. அச்சம்; யார்;
ஓர் - ஒப்பற்ற;
ஓர்தல் - எண்ணுதல்;
ஓர்வான் - 1. திருவுளம் செய்வான்; 2. ஒப்பற்ற வானுலக;
தரு - மரம்;
வான்தரு - கற்பகமரம்;
தருவாய் - 1. கொடுப்பாய் / கொடுப்பவனே; 2. கற்பகமரமாகி;
தமர் - தொண்டர்;
மருள் ஆர் மனத்தர் வழி அறியார் - அறியாமை மிகுந்த மனம் உடையவர்கள் தக்க நெறியை அறியமாட்டார்கள்;
பின் ஏன் மருளார்? - பிறகு அவர்கள் ஏன் அஞ்சமாட்டார்கள்? (= அதனால்தான் அவர்கள் அஞ்சுகின்றார்கள்);
அடியார்க்கும் உண்டோ மருள்? - பக்தர்களுக்கும் அச்சம் உண்டோ? (இல்லை என்பது குறிப்பு);
ஆர் "தருவாய் அருள்" எனினும் சங்கரன் ஓர்வான் தருவாய் அளிப்பான் தமர்க்கு - "அருள்புரிவாயாக / அருள்செய்பவனே" என்று யார் தொழுதாலும் சங்கரன் திருவுளம் செய்வான்; (அப்படித் திருவுளம் செய்து) ஒப்பற்ற கற்பகமரத்தைப் போலத் தொண்டர்களுக்கு வரம் தருவான்; ("ஓர்வான்" என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாக இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளலாம். "சங்கரன் ஓர்வான்" & " ஓர் வான்தருவாய் அளிப்பான்");
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment