2010-01-10
M.046 - ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு
--------------
ஆனஞ்சு வேங்கை அதள்அணிவான்; தேவர்க்கா
ஆனஞ்சு கண்டத் தடைத்தருள்வான்; - ஆனஞ்சு
கொண்டாடு முக்கணனைக் கோனென்று நெஞ்சேநீ
கொண்டாடு; தீரும் குறை.
பதம் பிரித்து:
ஆன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான்; தேவர்க்கா
ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான்; ஆன்-அஞ்சு
கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ
கொண்டாடு; தீரும் குறை.
சொற்பொருள்:
ஆனஞ்சு - 1. ஆன் அஞ்சு (பசுக்கள் அஞ்சுகின்ற); 2. ஆல் நஞ்சு (ஆலகாலமாகிய விஷம்); 3. ஆன் அஞ்சு (பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்கள் - பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், கோசலம், கோமயம்);
கொண்டாடு - 1. கொண்டு ஆடுகின்ற (கொண்டு அபிஷேகம் செய்யப்பெறும்); 2. புகழ்தல்; பாராட்டுதல்;
ஆன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான் - பசுக்கள் அஞ்சுகின்ற புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; (வேங்கை - புலி); (அதள் - தோல்);
தேவர்க்கா ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான் - தேவர்களுக்காக (= தேவர்கள் உய்யும் பொருட்டு); ஆலகாலமாகிய விஷத்தை கண்டத்தில் அடைத்து அருளியவன்; (தேவர்க்கா - தேவர்க்காக; கடைக்குறை விகாரம்);
ஆன்-அஞ்சு கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ கொண்டாடு - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் மகிழ்ந்த முக்கண்ணனைத் தலைவன் என்று மனமே நீ போற்று; (கோன் - தலைவன்); (சுந்தரர் தேவாரம் - 7.17.4 - "அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினில்")
தீரும் குறை - (அப்படிச் செய்தால்) உன் குறைகள் தீரும்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment