2010-01-30
S.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை
------------------
பிறையணி பூரணமாய்ப் பேரொளி யோடு
பிறங்கியல்லில் ஆடுகின்ற பெற்றி - நிறையும்
பெருங்காதல் கொண்டோர்கள் பேசவரும் சீரார்
கருங்கண்டன் பௌர்ணமி காண்.
சொற்பொருள்:
அணி - அழகு;
அணிதல் - சூடுதல்;
அணி பூரணமாய் - 1. அழகிய முழுமை ஆகி; / 2. அணிகின்ற பூரணன் ஆகி;
பிறங்குதல் - விளங்குதல்;
அல் - இரவு; இருள்;
ஆடுதல் - 1. சஞ்சரித்தல்; / 2. நாட்டியம் ஆடுதல்;
பெற்றி - தன்மை; பெருமை;
காதல் - 1. அன்பு; / 2. பக்தி;
பேசவரும் - 1. பேச வரும்; / 2. பேச அரும்;
பேசுதல் - 1. சொல்லாடுதல்; / 2. துதித்தல்;
காண் - முன்னிலை அசை;
பௌர்ணமி:
பிறை அணி பூரணமாய்ப் - பிறையாகத் தோன்றி அழகிய முழுமையடைந்து;
பேரொளியோடு பிறங்கி - மிகுந்த ஒளியோடு திகழ்ந்து;
அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - இரவில் இயங்குகின்ற தன்மை நிறைந்தது;
பெருங்காதல் கொண்டோர்கள் பேச வரும் சீர் ஆர் - மிகவும் காதலுடைய ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசுமாறு வருகின்ற பெருமை பொருந்திய;
பௌர்ணமி - முழுநிலவு;
சிவன்:
பிறை அணி பூரணமாய்ப் - பிறையைச் சூடும் பூரணப்பொருள் ஆகி;
பேரொளியோடு பிறங்கி - தேஜோமயனாகத் திகழ்ந்து;
அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்ற பெருமை உடைய;
பெருங்காதல் கொண்டோர்கள் பேச அரும்-சீர் ஆர் - பேரன்புடைய பக்தர்கள் துதிக்க அரிய புகழ் மிக்க;
கருங்கண்டன் - நீலகண்டன்;
வி. சுப்பிரமணியன்
------------- -------------
No comments:
Post a Comment