Wednesday, November 30, 2022

T.179 - ஆனைக்கா - மோகத்தோடு மிக்க

2014-02-02

T.179 - ஆனைக்கா - மோகத்தோடு மிக்க

--------------

(வண்ணவிருத்தம்;

தானத் தான தத்த

தானத் தான தத்த

தானத் தான தத்த .. தனதான)

(காதைக் காதி மெத்த - திருப்புகழ் - சிதம்பரம்)


மோகத் தோடு மிக்க காசைத் தேட வைக்கு(ம்)

.. .. மூடத் தோடு சுற்றி .. அடைவாதை

.. மூடப் பேத லித்து நோயுற் றாவி விட்டு

.. .. மூளத் தீயெ ரித்த .. பொடியா(ம்)முன்

பாகைத் தேனை ஒத்த பாவைப் பூநி கர்த்த

.. .. பாதத் தேவி ருப்பொ .. டிடுஞானம்

.. பாலித் தாற லைக்க ஓடிச் சூழ லுற்ற

.. .. பாவத் தீவி லக்கி .. அருளாயே

நாகத் தோடு மத்தம் வாசக் கூவி ளத்தை

.. .. நாடிச் சூடும் ஒற்றை .. விடையேறீ

.. நால்வர்க் கோர றத்தை மோனத் தால்வி ரித்த

.. .. ஞானத் தாய்நு தற்க .. ணுடையானே

ஆகத் தேயி டத்தை நாரிக் கீயும் அத்த

.. .. ஆமைத் தாலி யுற்ற .. திருமார்பா

.. ஆலத் தால்மி டற்றில் நீலத் தாய்செ ழித்த

.. .. ஆனைக் காநி லைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மோகத்தோடு, மிக்க காசைத் தேட வைக்கு(ம்)

.. .. மூடத்தோடு, சுற்றி அடை வாதை

.. மூடப், பேதலித்து, நோயுற்று, ஆவி விட்டு,

.. .. மூள் அத்-தீ எரித்த பொடி ஆ(ம்) முன்,

பாகைத் தேனை ஒத்த பாவைப் பூ நிகர்த்த

.. .. பாதத்தே விருப்பொடு இடு ஞானம்

.. பாலித்து, ஆறலைக்க ஓடிச் சூழலுற்ற

.. .. பாவத்-தீ விலக்கி அருளாயே;

நாகத்தோடு, மத்தம், வாசக் கூவிளத்தை

.. .. நாடிச் சூடும் ஒற்றை விடையேறீ;

.. நால்வர்க்கு ஓர்-அறத்தை மோனத்தால் விரித்த

.. .. ஞானத்தாய்; நுதற்கண் உடையானே;

ஆகத்தே இடத்தை நாரிக்கு ஈயும் அத்த;

.. .. ஆமைத்-தாலி உற்ற திருமார்பா;

.. ஆலத்தால் மிடற்றில் நீலத்தாய்; செழித்த

.. .. ஆனைக்கா நிலைத்த பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மோகத்தோடு, மிக்க காசைத் தேட வைக்கும் மூடத்தோடு, சுற்றி அடை வாதை மூப், பேதலித்து - மோகத்தால், மிகுந்த பொருளைத் தேடச்செய்யும் அறியாமையால், உலகில் அலைந்து திரிந்து, அடைந்த பல துன்பங்கள் என்னைச் சுற்றி மூட, மனம் கலங்கி; (மூடம் - அறிவின்மை); (சுற்றி - உலகில் திரிந்து; என்னைச் சுற்றி); (வாதை - துன்பம்); (பேதலித்தல் - மனம் குழம்புதல்);

நோயுற்று, வி விட்டு, மூள் அத்-தீரித்த பொடி ஆம் முன் - நோய்கள் அடைந்து, உயிர் நீங்கி, மூண்டெழும் அந்த ஈமத்தீயில் சாம்பலாகும் முன்னமே; (அத்தீ - அந்தத் தீ - சுடுகாட்டுத் தீ; - பண்டறிசுட்டு);

பாகைத் தேனை த்பாவைப் பூ நிகர்த்த ாதத்தே விருப்பொடு இடு ஞானம் பாலித்து - பாகையும் தேனையும் ஒத்து இனிக்கின்ற பாமாலைகளைத் தாமரைமலர் போன்ற திருவடியில் அன்போடு இட்டு வழிபடும் அறிவை எனக்குத் தந்து; (பா - பாட்டு); (பாலித்தல் - கொடுத்தல்);

றலைக்க ஓடிச் சூழலுற்ற பாவத்-தீ விக்கி அருளாயே - என்னைக் கெடுக்க விரைந்துவந்து சூழ்கின்ற தீவினையாகிய நெருப்பை நீக்கி அருள்வாயாக; (ஆறலைத்தல் - வழிப்பறி செய்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.7.5 - "அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு ஆறலைப்பான் பொருட்டால்")

நாகத்தோடு, மத்தம், வாசக்-கூவிளத்தை நாடிச் சூடும் ஒற்றை விடையேறீ - பாம்பு, ஊமத்தமலர், மணம் கமழும் வில்வம் இவற்றையெல்லாம் விரும்பி அணிந்த ஒப்பற்ற இடபவாகனனே; (மத்தம் - ஊமத்தமலர்); (கூவிளம் - வில்வம்); (ஒற்றை - ஒப்பற்ற); (சம்பந்தர் தேவாரம் - 2.38.3 - "நாறு கூவிள(ம்) நாகிள வெண்மதியத்தோ டாறு சூடும் அமரர் பிரான்");

நால்வர்க்கு ஓர் அறத்தை மோனத்தால் விரித்த ஞானத்தாய் - சனகாதி முனிவர்களுக்குக் ஒப்பற்ற அறத்தை (வேதப்பொருளை) மௌனமாகவே உபதேசித்த ஞானவடிவினனே; (மோனம் - மௌனம்); (விரித்தல் - உபதேசித்தல்);

நுதற்கண் உடையானே - நெற்றிக்கண்ணனே;

ஆகத்தேத்தை நாரிக்கு ஈயும் அத்த - திருமேனியில் இடப்பக்கத்தை உமைக்கு வழங்கிய எம் தந்தையே; (ஆகம் - உடல்); (அத்தன் - தந்தை);

ஆமைத்-தாலி ற்ற திருமார்பா - ஆமையோட்டை மார்பில் அணிந்தவனே; (தாலி - கழுத்தில் அணியும் ஆபரணம்); (சுந்தரர் தேவாரம் - 7.53.5 - " மருப்பும் ஆமைத் தாலியார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இளநாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு");

ஆலத்தால் மிடற்றில் நீலத்தாய் - ஆலகாலத்தால் கண்டத்தில் கருமையை உடையவனே; (மிடறு - கண்டம்);

செழித்த ஆனைக்கா நிலைத்த பெருமானே - செழிப்புடைய திருவானைக்காவில் நீங்காமல் உறைகின்ற பெருமானே; (செழித்தல் - தழைத்தல்; சிறந்து விளங்குதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment