2013-07-10
N.025 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2013
--------------
(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
சாற்றிய அச்சப் பத்தில் .. சழக்கரைச் சாடி எந்தை
நீற்றினைப் புனைந்து வம்மின் .. நீர்களெல் லாமென் றோதிப்
பேற்றினை அடையும் மார்க்கம் .. பெரிதுவந் தெமக்கிங் கீந்தார்
மாற்றிலாச் செம்பொன் எங்கள் .. வாதவூர் அடிகள் தாமே.
சாற்றிய அச்சப்பத்தில் சழக்கரைச் சாடி, "எந்தை நீற்றினைப் புனைந்து வம்மின் நீர்களெல்லாம்" என்று ஓதிப் - சொன்ன அச்சப்பத்தில் தீயோர்களைக் கடிந்து, "எம் தந்தையான ஈசனது திருநீற்றை நீங்கள் பூசுங்கள்" என்று மொழிந்து; (சாற்றுதல் - பலரும் அறியச் சொல்லுதல்); (சழக்கர் - தீயோர்); (சாடுதல் - கடிதல்; கண்டித்தல்);
பேற்றினை அடையும் மார்க்கம் பெரிது உவந்து எமக்கு இங்கு ஈந்தார் - நற்கதி அடையும் வழியை எமக்கு மிகவும் விரும்பி உபதேசித்தவர்;
மாற்று-இலாச் செம்பொன் எங்கள் வாதவூர்-அடிகள்தாமே - தூய செம்பொன் போன்றவர் எம் மாணிக்கவாசகர்; (மாற்றிலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய; மிக உயர்ந்த);
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment