2013-08-28
S.140 - சிவன் - கண்ணன் - சிலேடை
-------------
திருவாய் விரியத் தெரியும்பல் அண்டத்
துருவாய் ஒளித்திருப்பான் ஓடி - வருவான்
களிக்கக் கரியவன்னஞ் சார்பவன் கங்கை
தெளிக்குமுடி யான்கண்ணன் செப்பு.
சொற்பொருள்:
திரு - தெய்வத்தன்மை; செல்வம்;
விரிதல் - பரத்தல் (To expand; to spread out); மலர்தல் (To open, unfold);
சார்பு - துணை; புகலிடம்;
வன்னம் - வர்ணம்;
சார்தல் - பொருந்துதல்;
சார்பு - புகலிடம்;
வான் - தேவர்கள்;
ஆர்தல் - உண்ணுதல்;
பவன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; (God, as self-existent);
கரியவன்னஞ் சார்பவன் - 1a. கரியவன் நம் சார்பு அவன் (னகர ஒற்று விரித்தல் விகாரம்); 1b. கரிய வன்னம் சார்பவன்; / 2. கரிய வன்-நஞ்சு ஆர் பவன்;
முடி - உச்சி;
கண்ணன்:
திரு-வாய் விரியத் தெரியும் பல்-அண்டத்து
உரு; வாய் ஒளித்திருப்பான்; ஓடி வருவான்
களிக்கக்; கரியவன்; நம் சார்பு அவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.
("மண்ணை உண்டாயா?" என்று அசோதை கேட்டபோது) அவனுடைய திருவாய் விரியவும் பல அண்டங்களும் தெரியும்; (அவற்றைத் தன்) வாயுள் ஒளித்திருப்பான்; பெற்றோரும் மற்றோரும் களிப்பு அடையும்படி அவர்களிடம் ஓடி வருவான்; ("ஒளித்திருப்பான்" என்பதை இடைநிலைத்தீவகமாக, "ஓடி வருவான் களிக்க" என்பதோடும் மீண்டும் இயைத்துக், "தன்னை மறைத்துக்கொண்டு, கண்ணாமூய்ச்சி" விளையாடுவான் என்றும் பொருள்கொள்ளலாம்); கரிய நிறம் உடையவன்; நம் புகலிடம் அவன்; ("கரியவன்னஞ் சார்பவன்" என்பதைக் "கரிய வன்னம் சார்பவன்" என்றும் கொள்ளலாம் - கரிய வண்ணம் பொருந்துபவன்); கண்ணன்.
சிவன்:
திருவாய், விரியத் தெரியும் பல்-அண்டத்து
உருவாய், ஒளித்து இருப்பான்; ஓடி வரு- வான்
களிக்கக், கரிய வன்-நஞ்சு ஆர் பவன்; கங்கை
தெளிக்கும் முடியான், கண்ணன் செப்பு.
திரு ஆகி, விரிந்து தெரிகின்ற எல்லா அண்டங்களின் உரு ஆகி, (அப்படி இருந்தாலும்) அறிய இயலாதபடி தன்னை ஒளித்து இருப்பவன்; (அஞ்சி) ஓடிவந்த தேவர்கள் மகிழும்படி, கரிய கொடிய விஷத்தை உண்ட, பவன் என்ற திருநாமம் உடையவன்; கங்கைநீர் தெளிக்கின்ற உச்சியை உடையவன்; சிவபெருமான்.
(ஒளித்திருப்பான் - தன்னை மறைத்துக்கொள்வான்); (பெரியபுராணம் - கண்ணப்பர் புராணம் - 12.10.158 - "நாளைநீ ஒளித்திருந்தால் எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்");
வி. சுப்பிரமணியன்
----------- -----------
No comments:
Post a Comment