Tuesday, July 21, 2020

03.05.102 – ஒற்றியூர் - கற்றுத் தெளியாமல் - (வண்ணம்)

03.05.102 – ஒற்றியூர் - கற்றுத் தெளியாமல் - (வண்ணம்)

2009-01-30

3.5.102) கற்றுத் தெளியாமல் - (ற்றியூர் - திருவொற்றியூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் .. தனதான )

(அற்றைக் கிரைதேடி - திருப்புகழ் - காஞ்சீபுரம்)


கற்றுத் .. தெளியாமற்

.. கட்டப் .. படுவேனும்

பற்றற் .. றவனேதாள்

.. பற்றிப் .. பிழையேனோ

கற்றைச் .. சடையானே

.. கத்திக் .. கரைமீதே

எற்றித் .. திரைசேரும்

.. ஒற்றிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கற்றுத் தெளியாமல்

.. கட்டப்படுவேனும்,

பற்று அற்றவனே, தாள்

.. பற்றிப் பிழையேனோ;

கற்றைச் சடையானே;

.. கத்திக் கரை மீதே

எற்றித் திரை சேரும்

.. ஒற்றிப் பெருமானே.


கற்றுத் தெளியாமல் கட்டப்படுவேனும் - கற்க வேண்டியவற்றைக் கற்றுத் தெளிந்த அறிவு பெறாமல், பந்தபாசங்களால் கட்டுண்டு கஷ்டப்படும் அடியேனும்; (கட்டப்படுதல் - 1. பிணிக்கப்படுதல்; 2. கஷ்டப்படுதல்);

பற்று அற்றவனே, தாள் பற்றிப் பிழையேனோ - எப்பற்றும் இல்லாதவனே, உன் திருவடியைப் பற்றி உய்யுமாறு அருள்வாயாக; (பற்றற்றவன் - பற்றற்றான் - எந்தப் பந்தமும் இல்லாதவன் - கடவுள்); (பற்றுதல் - பிடித்தல்); (பிழைத்தல் - உய்தல்; தப்புதல்);

கற்றைச் சடையானே - கற்றைச் சடையை உடையவனே;

கத்திக் கரை மீதே எற்றித் திரை சேரும் ஒற்றிப் பெருமானே - ஒலித்துக் கரையின்மேல் மோதி அலைகள் அடையும் திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை; கடல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment