Friday, July 24, 2020

03.05.106 – ஆனைக்கா - நாளைத் தேவைக்கு என - (வண்ணம்)

03.05.106 – ஆனைக்கா - நாளைத் தேவைக்கு என - (வண்ணம்)

2009-02-13

3.5.106) நாளைத் தேவைக்கு எ - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


நாளைத் தேவைக் .. கெனமாடே

.. நாடித் தீனர்க் .. களியாது

நாளைப் பாழுக் .. கிறையாமல்

.. நாவிற் பேரைத் .. தரியேனோ

தாளைப் பேணித் .. தொழுவார்பால்

.. தாயிற் சாலப் .. பரிவாகி

ஆளப் பாரைத் .. தருவோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

நாளைத் தேவைக்கு என மாடே

.. நாடித், தீனர்க்கு அளியாது,

நாளைப் பாழுக்கு இறையாமல்

.. நாவில் பேரைத் தரியேனோ;

தாளைப் பேணித் தொழுவார்பால்

.. தாயிற் சாலப் பரிவாகி

ஆளப் பாரைத் தருவோனே;

.. ஆனைக்காவில் பெருமானே.


நாளைத் தேவைக்கு எ மாடே நாடித் - பிற்காலத்திற்கு வேண்டும் என்று எப்பொழுதும் பொருள் திரட்டுவதிலேயே ஈடுபட்டு; (நாளை - அடுத்த தினம்); (மாடு - செல்வம்); (நாடுதல் - விரும்புதல்);

தீனர்க்கு அளியாது - வறியவர்களுக்கு ஒன்றும் கொடாமல்; (தீனர் - வறியவர்; யாசிப்பவர்);

நாளைப் பாழுக்கு இறையாமல் - ஆயுளை வீணாக்காமல்; (நாள் - வாழ்நாள்); (பாழுக்கிறைத்தல் - [பாழ் நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்] வீணாகக் காரியஞ்செய்தல்);

நாவில் பேரைத் தரியேனோ - என் நாவில் உன் திருப்பெயரைத் தரித்து வாழ அருள்வாயாக;

தாளைப் பேணித் தொழுவார்பால் தாயிற் சாலப் பரிவாகி ஆளப் பாரைத் தருவோனே - உன் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்கள்மேல் தாயினும் மிகுந்த அன்புடையவன் ஆகி, அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவனே; (பேணுதல் - போற்றுதல்); (சால - மிகவும்); (பரிவு - அன்பு); (பார் - உலகம்);

ஆனைக்காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment