Friday, August 7, 2020

03.05.107 – ஆனைக்கா - ஈனப் பாவப் பணிமேவி - (வண்ணம்)

03.05.107 – ஆனைக்கா - ஈனப் பாவப் பணிமேவி - (வண்ணம்)

2009-02-13

3.5.107) ஈனப் பாவப் பணிமேவி - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


ஈனப் பாவப் .. பணிமேவி

.. ஈறுற் றீமத் .. தெரியாமுன்

நானற் றாளைப் .. புகழ்மாலை

.. நாவிற் சூடிப் .. பிழையேனோ

வானத் தேமுப் .. புரநூற

.. வாய்விட் டேநக் .. கவனேயோர்

ஆனைத் தோலைப் .. புனைவானே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஈனப் பாவப் பணி மேவி,

.. ஈறு உற்று ஈமத்து எரியாமுன்,

நான் நற்றாளைப் புகழ்மாலை

.. நாவிற் சூடிப் பிழையேனோ;

வானத்தே முப்புரம் நூற

.. வாய்விட்டே நக்கவனே; ஓர்

ஆனைத் தோலைப் புனைவானே;

.. ஆனைக்காவில் பெருமானே.


ஈனப் பாவப் பணி மேவி - இழிந்த பாவச் செயல்களையே விரும்பிச் செய்து; (ஈனம் - இழிவு); (மேவுதல் - விரும்புதல்);

ஈறு உற்று ஈமத்து எரியாமுன் - (காலம் ஓடி) இறந்து, சுடுகாட்டில் எரிக்கப்படுவதன்முன்; (ஈறு - மரணம்; முடிவு); (ஈமம் - சுடுகாடு; சிதை);

நான் நற்றாளைப் புகழ்மாலை நாவில் சூடிப் பிழையேனோ - உன் நல்ல திருவடியைப் புகழும் பாமாலைகளை நான் என் நாவில் தரித்து உய்ய அருள்வாயாக; (சூடுதல் - தரித்தல்; அணிதல்); (பிழைத்தல் - உய்தல்);

வானத்தே முப்புரம் நூற வாய்விட்டே நக்கவனே - வானில் முப்புரங்களும் அழியும்படி வாய்விட்டுச் சிரித்தவனே; (நூறுதல் - அழித்தல்); (வாய்விடுதல் - உரக்கச் சத்தமிடுதல்); (நகுதல் - சிரித்தல்);

ஓர் ஆனைத் தோலைப் புனைவானே - ஒரு பெரிய யானையின் தோலைப் போர்த்தவனே; (புனைதல் - அணிதல்);

ஆனைக்காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமானே;

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

2 comments: