Saturday, August 8, 2020

03.05.111 – இடைமருதூர் - கருவம் மனத்து எழ நாளும் - (வண்ணம்)

03.05.111 – இடைமருதூர் - கருவம் மனத்து எ நாளும் - (வண்ணம்)

2009-02-23

3.5.111) கருவம் மனத்து எழ நாளும் - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


கருவ(ம்)மனத் .. தெழநாளும்

.. கடுவினையைப் .. புரியாமல்

திருமலியத் .. தமிழாலே

.. திருவடியைப் .. புகழேனோ

உருவிலுமைக் .. கிடமீவாய்

.. ஒளிமதியைப் .. புனைவோனே

இருவினையைக் .. களைவோனே

.. இடைமருதிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

கருவம் மனத்து எழ, நாளும்

.. கடுவினையைப் புரியாமல்,

திரு மலியத் தமிழாலே

.. திருவடியைப் புகழேனோ;

உருவில் உமைக்கு இடம் ஈவாய்;

.. ஒளிமதியைப் புனைவோனே;

இருவினையைக் களைவோனே;

.. இடைமருதில் பெருமானே.


கருவம் மனத்து எழ நாளும் கடுவினையைப் புரியாமல் - மனத்தில் செருக்கு மிக, அதனால் தினமும் கொடிய செயல்களைச் செய்து உழலாமல்; (கருவம் - கர்வம்; செருக்கு); (கடுமை - கொடுமை);

திரு மலியத் தமிழாலே திருவடியைப் புகழேனோ - திரு மிகும்படி தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகளால் உன் திருவடியைப் புகழ்வேனோ? அருள்வாயாக; (திரு - செல்வம்; பாக்கியம்; தெய்வத்தன்மை); (மலிதல் - மிகுதல்); (திருமலியத் தமிழாலே - 1. திரு மலியத் தமிழாலே; 2. திரு மலி அத்-தமிழாலே; "திரு மலி அத்-தமிழ்" = தேவாரம் திருவாசகம் முதலியன);

உருவில் உமைக்கு இடம் ஈவாய் - திருமேனியில் இடப்பாகத்தை உமைக்கு அளித்தவனே; (உரு - மேனி; வடிவு);

ஒளிமதியைப் புனைவோனே - ஒளி திகழும் சந்திரனை அணிந்தவனே; (அப்பர் தேவாரம் - 5.24.1 - "ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை");

இருவினையைக் களைவோனே - பக்தர்களது இருவினையைத் தீர்ப்பவனே; (இருவினை - புண்ணிய பாவங்கள்);

இடைமருதில் பெருமானே - திருவிடைமருதூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment