Friday, August 7, 2020

03.05.110 – இடைமருதூர் - சரிவழியைக் கருதாமல் - (வண்ணம்)

03.05.110 – இடைமருதூர் - சரிவழியைக் கருதாமல் - (வண்ணம்)

2009-02-23

3.5.110) சரிவழியைக் கருதாமல் - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


சரிவழியைக் .. கருதாமல்

.. தவறுகளைத் .. தவிராமல்

திரியுமனத் .. தமியேனும்

.. தெளிவுதனைப் .. பெறுவேனோ

தெரிவைதனக் .. கிடமீவாய்

.. சிலைவளைவித் .. தரண்வேவ

எரிகணையைத் .. தொடுவோனே

.. இடைமருதிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

சரி வழியைக் கருதாமல்,

.. தவறுகளைத் தவிராமல்,

திரியும் மனத் தமியேனும்

.. தெளிவுதனைப் பெறுவேனோ;

தெரிவைதனக்கு இடம் ஈவாய்;

.. சிலை வளைவித்து அரண் வேவ

எரி கணையைத் தொடுவோனே;

.. இடைமருதில் பெருமானே.


சரி வழியைக் கருதாமல் - நல்ல வழியிற் செல்ல எண்ணாமல்;

தவறுகளைத் தவிராமல் - குற்றங்களை நீங்காமல்;

திரியும் மனத் தமியேனும் - அலைகின்ற மனத்தையுடைய கதியற்ற நானும்; (திரிதல் - அலைதல்; வேறுபடுதல்; கெடுதல்; மயங்குதல்); (தமியேன் - கதியற்ற நான்);

தெளிவுதனைப் பெறுவேனோ - தெளிவைப் பெறுவேனோ? அருள்வாயாக;

தெரிவைதனக்கு இடம் ஈவாய் - உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தை அளித்தவனே; (தெரிவை - பெண் - உமை); (இடம் - இடப்பக்கம்);

சிலை வளைவித்து அரண் வேவ எரி கணையைத் தொடுவோனே - வில்லை வளைத்து முப்புரங்களும் வெந்து அழியும்படி சுடுகின்ற அம்பை எய்தவனே; (சிலை - வில்; மலை); (வளைவித்தல் - வளைத்தல்);

இடைமருதில் பெருமானே - திருவிடைமருதூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment