Friday, August 7, 2020

03.05.108 – ஆனைக்கா - தேவைக்காகச் சிறியாரை - (வண்ணம்)

03.05.108 – ஆனைக்கா - தேவைக்காகச் சிறியாரை - (வண்ணம்)

2009-02-13

3.5.108) தேவைக்காகச் சிறியாரை - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


தேவைக் காகச் .. சிறியாரைத்

.. தேடிச் சேவித் .. திழியாமல்

பாவைப் பாடிப் .. பரமாநின்

.. பாதப் போதைப் .. பணிவேனே

பாவைக் காகத் .. திடமீவாய்

.. பாசத் தோடப் .. படர்சூழும்

ஆவற் காலத் .. தருள்வோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேவைக்காகச் சிறியாரைத்

.. தேடிச் சேவித்து இழியாமல்,

பாவைப் பாடிப், பரமா, நின்

.. பாதப்-போதைப் பணிவேனே;

பாவைக்கு ஆகத்து இடம் ஈவாய்;

.. பாசத்தோடு அப்-படர் சூழும்

ஆவற்காலத்து அருள்வோனே;

.. ஆனைக்காவில் பெருமானே.


தேவைக்காகச் சிறியாரைத் தேடிச் சேவித்து இழியாமல் - உலக வாழ்வின் தேவைகளுக்காக அற்பரை நாடிப் போய் வணங்கி அவர்கள் இட்ட பணியைச் செய்து இழிவுபடாமல்; (சேவித்தல் - பணிசெய்தல்; வணங்குதல்);

பாவைப் பாடிப், பரமா, நின் பாதப்-போதைப் பணிவேனே - பரமனே, பாமாலைகளைப் பாடி உன் திருவடித் தாமரையைத் தொழுவேன்; (பா - பாட்டு); (போது - மலர்); (திருவாசகம் - திருச்சதகம்-26 - "நாயினேன்றன் கண்ணிணை நின் திருப்பாதப் போதுக் காக்கி");

பாவைக்கு ஆகத்து இடம் ஈவாய் - உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தைத் தந்தவனே; (பாவை - பெண் - உமை); (ஆகம் - உடம்பு); (இடம் - இடப்பக்கம்);

பாசத்தோடு அப்-படர் சூழும் ஆவற்காலத்து அருள்வோனே - அந்த எமதூதர்கள் வந்து பாசம் வீசி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இறுதிநாளில் "அஞ்சேல்" என்று அருள்பவனே; (படர் - எமதூதர்); (ஆவற்காலம் - ஆபத் காலம் - ஆபத்துண்டாங்காலம்; இறுதிநாள்);

ஆனைக்காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமானே;

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment