Saturday, August 8, 2020

03.05.112 – கயிலாயம் - பெரிய வினைத்தொடர் - (வண்ணம்)

03.05.112 – கயிலாயம் - பெரிய வினைத்தொடர் - (வண்ணம்)

2009-02-23

3.5.112) பெரிய வினைத்தொடர் - (கயிலாயம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


பெரியவினைத் .. தொடர்போகப்

.. பிணைமலரிட் .. டிருபோதும்

பரிவுமிகுத் .. துனதாளைப்

.. பணியவெனக் .. கருளாயே

அரிபிரமற் .. கரியானே

.. அடியவருக் .. கெளியானே

கரியமிடற் .. றமுதேஎம்

.. கயிலைமலைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பெரிய வினைத்தொடர் போகப்,

.. பிணை-மலர் இட்டு இரு போதும்

பரிவு மிகுத்து உன தாளைப்

.. பணிய எனக்கு அருளாயே;

அரி பிரமற்கு அரியானே;

.. அடியவருக்கு எளியானே;

கரிய மிடற்று அமுதே; எம்

.. கயிலைமலைப் பெருமானே.


பெரிய வினைத்தொடர் போகப் - கொடிய வினையெல்லாம் நீங்குமாறு;

பிணை-மலர் இட்டு இரு போதும் பரிவு மிகுத்து உன தாளைப் பணிய எனக்கு அருளாயே - தொடுத்த மலர்களை இட்டு இருவேளையும் அன்போடு உன் திருவடியை நான் வழிபடுமாறு எனக்கு அருள்வாயாக; ("மலர்" = சொல்மலர் என்று கொண்டு, பிணைமலர் = பாமாலை என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (பிணைத்தல் - தொடுத்தல்); (இரு போதும் - (காலை மாலை / இரவு பகல்) இரு வேளையும்); (பரிவு - அன்பு; பக்தி); (உன தாள் - உனது திருவடி); (- ஆறாம் வேற்றுமை உருபு);

அரி பிரமற்கு அரியானே - திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாதவனே;

அடியவருக்கு எளியானே - பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனே;

கரிய மிடற்று அமுதே - நீலகண்டனே! அமுதம் போல்பவனே; (மிடறு - கண்டம்);

எம் கயிலைமலைப் பெருமானே - எம் கயிலைநாதனே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment