Friday, August 7, 2020

03.05.109 – ஆனைக்கா - கூலிக்கே நித்தலும் ஆடி - (வண்ணம்)

03.05.109 – ஆனைக்கா - கூலிக்கே நித்தலும் ஆடி - (வண்ணம்)

2009-02-13

3.5.109) கூலிக்கே நித்தலும் ஆடி - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


கூலிக் கேநித் .. தலுமாடிக்

.. கூனிச் சீவித் .. தழியாமல்

பாலிப் பாயைத் .. தமிழாலே

.. பாடிப் பாடிப் .. பணிவேனே

போலிப் பூசைக் .. கரியானே

.. போதத் தாருக் .. கெளியானே

ஆலித் தோடிப் .. புனல்சூழும்

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

கூலிக்கே நித்தலும் ஆடிக்

.. கூனிச் சீவித்து அழியாமல்,

பாலிப்பாயைத் தமிழாலே

.. பாடிப் பாடிப் பணிவேனே;

போலிப் பூசைக்கு அரியானே;

.. போதத்தாருக்கு எளியானே;

ஆலித்து ஓடிப் புனல் சூழும்

.. ஆனைக்காவில் பெருமானே.


கூலிக்கே நித்தலும் ஆடிக், கூனிச் சீவித்து அழியாமல் - பணத்திற்காகவே எப்பொழுதும் செயல்பட்டுத், தகுதியற்றவர்களுக்குக் குனிந்து அடிபணிந்து வாழ்ந்து அழியாமல்; (கூனுதல் - வளைதல்; முதுகுவளைதல்); (சீவித்தல் - உயிர்வாழ்தல்; ஜீவனம் பண்ணுதல்);

பாலிப்பாயைத் தமிழாலே பாடிப் பாடிப் பணிவேனே - காக்கின்ற உன்னைத் தமிழால் பலவாறு பாடித் தொழுவேன்; (பாலித்தல் - காத்தல்); (சுந்தரர் தேவாரம் - 7.34.1 – "தம்மையே புகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்");

போலிப் பூசைக்கு அரியானே - (உண்மையான பக்தி இல்லாத) போலிப் பூசை செய்பவர்களால் அடையப்படாதவனே; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.90.9 - "பொக்க(ம்) மிக்கவர் பூவு(ம்) நீருங் கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே);

போதத்தாருக்கு எளியானே - ஞானிகளால் எளிதில் அடையப்படுபவனே; (போதம் - ஞானம்; அறிவு);

ஆலித்து ஓடிப் புனல் சூழும் ஆனைக்காவில் பெருமானே - சப்தமிட்டு ஓடிக் காவிரி சூழ்கின்ற திருவானைக்காவில் எழுந்தருளிய பெருமானே; (ஆலித்தல் - ஒலித்தல்); (புனல் - நீர் - இங்கே, காவிரி);

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment