Saturday, August 8, 2020

03.04.086 - சிவன் - காவலர் (watchman) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-03-03

3.4.86 - சிவன் - காவலர் (watchman) - சிலேடை

-------------------------------------------------------

அரவமிக அல்லில் நடமாடி வீடு

புரத்துக்கோ லோச்சுவார் தீயார் - வரமருள்வார்

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் காவலர்

கற்றைச் சடையீசர் காண்.


சொற்பொருள்:

அரவம் - 1. பாம்பு; / 2. ஓசை;

அல் - இரவு;

நடமாடி - 1. கூத்தாடுபவன்; / 2. சஞ்சரித்து; அங்குமிங்கும் நடந்து;

வீடு - 1. வீடுபேறு; முக்தி; / 2. இல்லம்;

புரத்தல் - 1. அனுக்கிரகித்தல்; / 2. காத்தல்;

கோல் ஓச்சுதல் - 1. ஆட்சி புரிதல்; / 2. குச்சியை உயர்த்துதல்;

தீயார் - 1. நெருப்பை ஏந்தியவர்; / 2. கெட்டவர்கள்;

வரமருள்வர் - 1. வரம் அருள்வார்; / 2. வர மருள்வார்;

மருள்தல் - வெருவுதல்; அஞ்சுதல்;

நற்றுணை - நல்+துணை;

நானிலம் - உலகம்;

காண் - முன்னிலை அசை;


காவலர்:

அரவம் மிக அல்லில் நடமாடி - மிகவும் ஓசை எழுப்பியபடி இரவில் அங்குமிங்கும் நடந்து;

வீடு புரத்துக் கோல் ஓச்சுவார் - வீடுகளைக் காத்து, (விளக்குக் கம்பங்களில் தட்டி ஓசையெழுப்புவதற்காகவும், விலங்குகளையும் துஷ்டர்களையும் காணும்பொழுதும்) கையிலிருக்கும் குச்சியை உயர்த்துவார்;

தீயார் வர மருள்வார் - (காவலர்கள் இருப்பதால்) கெட்டவர்கள் வர அஞ்சுவார்கள்;

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் - உலகில் நல்லவர்களுக்கு நல்ல துணை;

காவலர் - பாதுகாப்போர் (watchmen);


சிவன்:

அரவம் மிக அல்லில் நடம் ஆடி - பல பாம்புகளை அணிந்து, இருளில் திருநடம் செய்பவர்;

வீடு புரத்துக் கோலோச்சுவார் - முக்தியை அருளிப், பக்தர்களை ஆள்பவர்;

தீயார் - (கையில்) தீயை ஏந்தியவர்;

வரம் அருள்வார் - வரங்கள் கொடுப்பார்;

நற்றுணை நல்லார்க்கு நானிலத்தில் - உலகில் அடியவர்களுக்கு நல்ல துணை ஆவார்;

கற்றைச்சடை ஈசர் - கற்றையாகத் திகழும் சடையை உடைய சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment