Saturday, August 8, 2020

03.05.113 – கயிலாயம் - பொருளை நினைத்து - (வண்ணம்)

03.05.113 – கயிலாயம் - பொருளை நினைத்து - (வண்ணம்)

2009-02-23

3.5.113) பொருளை நினைத்து - (கயிலாயம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனனத் .. தனதான )

(இரவுபகற் பலகாலும் - திருப்புகழ் - திருவருணை)


பொருளைநினைத் .. ததனாலே

.. பொருமுமனத் .. தினனாகிப்

பெருமிடியுற் .. றுழலாமல்

.. பிறையவுனைத் .. தொழுவேனோ

கருதலர்முப் .. புரம்வேவக்

.. கணைதனையுய்த் .. தருள்வீரா

அருமறைமெய்ப் .. பொருளானாய்

.. அணிகயிலைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

பொருளை நினைத்து அதனாலே

.. பொருமு மனத்தினன் ஆகிப்,

பெரு-மிடி உற்று உழலாமல்,

.. பிறைய, உனைத் தொழுவேனோ;

கருதலர் முப்புரம் வேவக்

.. கணைதனை உய்த்து-அருள் வீரா;

அருமறை மெய்ப்பொருள் ஆனாய்;

.. அணி கயிலைப் பெருமானே.


பொருளை நினைத்து அதனாலே பொருமு மனத்தினன் ஆகிப் - நிலையில்லாத பொருளையே சதா எண்ணி அதனால் மனத்தில் பொறாமையும் துன்பமும் சேர; (பொருமுதல் - துன்புறுதல்; பொறாமைப்படுதல்);

பெரு மிடிற்றுழலாமல் - மிகுந்த வறுமையும் துன்பமும் அடைந்து வருந்தாமல்; (மிடி - துன்பம்; வறுமை);

பிறைய, னைத் தொழுவேனோ - பிறையை அணிந்தவனே, நான் உன்னைத் தொழுவேனோ? அருள்வாயாக; (பிறைய - பிறையனே - பிறைச்சந்திரனை அணிந்தவனே - என்ற விளி); (சம்பந்தர் தேவாரம் - 1.134.10 - "சடையன் பிறையன்");

கருதலர் முப்புரம் வேவக் கணைதனைய்த்து அருள் வீரா - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை ஏவி அருளிய வீரனே; (கருதலர் - பகைவர்); (உய்த்தல் - ஆயுதம் பிரயோகித்தல்);

அருமறை மெய்ப்பொருள் ஆனாய் - அரிய வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருள் ஆனவனே;

அணி கயிலைப் பெருமானே - அழகிய கயிலையில் உறைகின்ற பெருமானே; (அணி - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 2.11.2 - "அந்தணர் சேரும் அணிகாழி எம்மானை");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

2 comments: