Friday, July 10, 2020

03.05.092 – கடவூர் - புலனாசைப் புயல்வீச - (வண்ணம்)

03.05.092 – கடவூர் - புலனாசைப் புயல்வீச - (வண்ணம்)

2009-01-23

3.5.92) புலனாசைப் புயல்வீச - கடவூர் - (திருக்கடையூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதானத் .. தனதான )

(இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)


புலனாசைப் .. புயல்வீசப்

.. பொருள்நாடித் .. தவியாமல்

மலர்தூவிக் .. கழல்பாடி

.. வளவாழ்வைப் .. பெறுவேனோ

அலைநீரைப் .. புனைவானே

.. அடியாருக் .. கெளியானே

கலைஞானப் .. பொருளானே

.. கடவூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

புலன் ஆசைப் புயல் வீசப்,

.. பொருள் நாடித் தவியாமல்,

மலர் தூவிக் கழல் பாடி,

.. வளவாழ்வைப் பெறுவேனோ;

அலைநீரைப் புனைவானே;

.. அடியாருக்கு எளியானே;

கலைஞானப் பொருளானே;

.. கடவூரில் பெருமானே.


புலன் ஆசைப் புயல் வீசப் பொருள் நாடித் தவியாமல் - ஐம்புலன்-ஆசை என்ற புயல் வீசப் பணத்தைத் தேடித் தவித்து வருந்தாமல்;

மலர் தூவிக் கழல் பாடி, ளவாழ்வைப் பெறுவேனோ - நான் பூக்களைத் தூவி, உன் திருவடிகளைப் பாடி, வளம் மிக்க நல்ல வாழ்வைப் பெற அருள்வாயாக!

அலைநீரைப் புனைவானே - அலைவீசும் கங்கையைத் திருமுடிமேல் அணிந்தவனே;

அடியாருக்கு எளியானே - பக்தர்களுக்கு எளியவனே;

கலைஞானப் பொருளானே - கலைப்பொருள் ஆகவும் ஞானப் பொருளாகவும் திகழ்பவனே; (அப்பர் தேவாரம் - 5.68.2 – "நள்ளாறனார் காரணக் கலைஞானக் கடவுளே" - கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க. அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலும் ஆம்);

கடவூரில் பெருமானே - திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment