Friday, July 24, 2020

03.05.105 – ஆனைக்கா - ஓடிப் பாரிற் பலநாளும் - (வண்ணம்)

03.05.105 – ஆனைக்கா - ஓடிப் பாரிற் பலநாளும் - (வண்ணம்)

2009-02-13

3.5.105) ஓடிப் பாரிற் பலநாளும் - ஆனைக்கா - (திருவானைக்கா)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா )


ஓடிப் பாரிற் .. பலநாளும்

.. ஊனைப் பேணிப் .. பிணிமூடி

வாடிப் பாயிற் .. கிடவாமுன்

.. வாசத் தாளைத் .. தொழுவேனோ

பாடிச் சேவித் .. தடைவாரைப்

.. பாலித் தாரத் .. தருவோனே

ஆடக் கானைப் .. புரிவோனே

.. ஆனைக் காவிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஓடிப் பாரில் பல நாளும்,

.. ஊனைப் பேணிப், பிணி மூடி,

வாடிப் பாயிற் கிடவாமுன்

.. வாசத் தாளைத் தொழுவேனோ;

பாடிச் சேவித்து அடைவாரைப்

.. பாலித்து ஆரத் தருவோனே;

ஆடக் கானைப் புரிவோனே;

.. ஆனைக் காவில் பெருமானே.


ஓடிப் பாரில் பல நாளும் ஊனைப் பேணிப் - உலகில் நெடுநாள்கள் (அங்கும் இங்கும்) அலைந்து திரிந்து, உடலை ஓம்புதலிலேயே காலத்தைச் செலவழித்து; (ஊன் - உடம்பு);

பிணி மூடி, வாடிப், பாயிற் கிடவாமுன் வாசத் தாளைத் தொழுவேனோ - நோய்கள் சூழ்ந்துகொள்ள, அதனால் வருந்திப், படுத்த படுக்கையாகக் கிடப்பதன்முன்னமே, மணம் கமழும் உன் திருவடியை வணங்கும் பாக்கியம் பெறுவேனோ? அருள்வாயாக; (வாசம் - மணம்);

பாடிச் சேவித்து அடைவாரைப் பாலித்து ஆரத் தருவோனே - உன்னைப் பாடி வணங்கிச் சரண்புகுந்த பக்தர்களைக் காத்து அருளையும் வரங்களையும் நிறையக் கொடுப்பவனே; (அடைதல் - சரண்புகுதல்); (பாலித்தல் - காத்தல்); (ஆர்தல் - நிறைதல்; மிகுதல்);

ஆடக் கானைப் புரிவோனே - திருநடம் செய்வதற்குச் சுடுகாட்டை விரும்புகின்றவனே; (கான் - சுடுகாடு); (புரிதல் - விரும்புதல்);

ஆனைக் காவில் பெருமானே - திருவானைக்காவில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------



No comments:

Post a Comment