Friday, July 10, 2020

03.05.091 – கடவூர் - கொடுமாயப் பிணிமாய - (வண்ணம்)

03.05.091 – கடவூர் - கொடுமாயப் பிணிமாய - (வண்ணம்)

2009-01-23

3.5.91) கொடுமாயப் பிணிமாய - கடவூர் - (திருக்கடவூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதானத் .. தனதான )

(இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)


கொடுமாயப் .. பிணிமாயக்

.. குளிரார்நற் .. றமிழ்தாளில்

இடுநேயத் .. தொடுநாளும்

.. இனிதாகத் .. தொழுவேனோ

எடுபாசத் .. தொடுநாடும்

.. எமன்மாளச் .. செறுகாலா

கடுநாகச் .. சடையானே

.. கடவூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

கொடு மாயப் பிணி மாயக்

.. குளிர் ஆர் நற்றமிழ் தாளில்

இடு நேயத்தொடு நாளும்

.. இனிதாகத் தொழுவேனோ;

எடு-பாசத்தொடு நாடும்

.. எமன் மாளச் செறு காலா;

கடு-நாகச் சடையானே;

.. கடவூரிற் பெருமானே.


கொடுமாயப் பிணி மாயக் - கொடிய மாயையாகிய பிணி அழியும்படி; (மாயம் - மாயை; அஞ்ஞானம்);

குளிர் ஆர் நற்றமிழ் தாளில் இடு நேயத்தொடு - குளிர்ந்த நல்ல தமிழ்ப்பாமாலைகளைத் திருவடியில் இடும் அன்போடு; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (நற்றமிழ் - தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகள்);

நாளும் இனிதாகத் தொழுவேனோ - தினமும் இனிது தொழுமாறு அருள்வாயாக;

எடு பாசத்தொடு நாடும் எமன் மாளச் செறு காலா - (மார்க்கண்டேயரது உயிரை எடுக்கக் கையில்) எடுத்த பாசத்தோடு அடைந்த காலனே இறக்கும்படி உதைத்து அழித்த காலகாலனே; (செறுதல் - அழித்தல்);

கடுநாகச் சடையானே - கொடிய பாம்பைச் சடையில் அணிந்தவனே; (கடுமை - கொடுமை; மூர்க்கம்; சினம்); (சுந்தரர் தேவாரம் - 7.2.2 – "மூக்கப்பாம்பைக் கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்");

கடவூரில் பெருமானே - திருக்கடவூரில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment