Saturday, May 30, 2020

03.05.062 – பொது - மேதினியில் இடர்பல - (வண்ணம்)

03.05.062 – பொது - மேதினியில் இடர்பல - (வண்ணம்)

2009-01-08

3.5.62) மேதினியில் இடர்பல - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானதன தனதனனத் .. தனதான )


மேதினியில் இடர்பலவுற் .. றுழலாமல்

.. மேலைவினை அறுநிலையைப் .. பெறுமாறே

நீதியென அடியவரைப் .. பிரியாத

.. நேயனென அரிபிரமற் .. கரிதான

சோதியென அணிமதியைச் .. சடைமீது

.. சூடியென அரியமறைப் .. பொருளான

ஆதியென அமலனெனத் .. துதிபாடி

.. ஆதிரைய னடியிணையைப் .. பணிவேனே.


பதம் பிரித்து:

மேதினியில் இடர் பல உற்று உழலாமல்

.. மேலைவினை அறுநிலையைப் பெறுமாறே

நீதி என, அடியவரைப் பிரியாத

.. நேயன் என, அரி பிரமற்கு அரிது ஆன

சோதி என, அணி மதியைச் சடைமீது

.. சூடி என, அரிய மறைப்பொருள் ஆன

ஆதி என, அமலன் எனத் துதி பாடி,

.. ஆதிரையன் அடி இணையைப் பணிவேனே.


மேதினியில் இடர் பல உற்று உழலாமல் - பூமியில் பல துன்பங்கள் அடைந்து வருந்தாமல்; (மேதினி - பூமி);

மேலைவினை அறுநிலையைப் பெறுமாறே - என் பழவினைகள் தீரும்படி; (அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்);

நீதி என - நீதி வடிவினன் என்றும்;

அடியவரைப் பிரியாத நேயன் என - பக்தர்களை என்றும் நீங்காத அன்பன் என்றும்; (நேயன் - அன்புடையவன்);

அரி பிரமற்கு அரிது ஆன சோதி என - திருமால் பிரமன் இவர்களால் காண ஒண்ணாத ஒளிவடிவினன் என்றும்;

அணி மதியைச் சடைமீது சூடி என - அழகிய சந்திரனைச் சடையின்மேல் சூடியவன் என்றும்;

அரிய மறைப்பொருள் ஆன ஆதி என - அரிய வேதங்களின் பொருள் ஆன ஆதி என்றும்;

அமலன் எனத் துதி பாடி - தூயன் என்றும் பலவாறு அவனது புகழைப் பாடி; (அமலன் - மலமற்றவன்);

ஆதிரையன் அடி இணையைப் பணிவேனே - திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவனான சிவபெருமானது இரு திருவடிகளைப் பணிவேன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment