Saturday, May 30, 2020

03.05.059 – பொது - இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில் - (வண்ணம்)

03.05.059 – பொது - இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில் - (வண்ணம்)

2009-01-02

3.5.59 - இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தத் தனதன தந்தத் தனதன

தந்தத் தனதன தந்தத் தனதன

தனத்த தனதன தனத்த தனதன

தனத்த தனதன தனத்த தனதன .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(விந்துப் புளகித இன்புற் றுருகிட - திருப்புகழ் திருவண்ணாமலை)


இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில்

..... முந்தைப் புரிவினை துன்பத் தொடர்தர

.. இளைத்து மிகுபிணி வருத்த இழிவினை

..... இழைத்து நிதமிக அலுத்து வழிதனை .. அறியாமல்

நொந்தித் துயரற வந்தித் திடுமொரு

..... சிந்தைத் திறனிலி அம்பொற் கழலிணை

.. நுவற்சி தனைநினை மனத்தை அடைகிற

..... வரத்தை அருளிடி னுனக்கு வருகுறை .. உளதோசொல்

பந்தத் திருமண மொன்றைத் தடைசெய

..... அன்றச் சுவடியை முன்பிட் டதுவொரு

.. படிச்சு வடியென வழக்கி லுரைசெய்து

..... தனக்க டிமையென முடித்து மிகவருள் .. புரிவோனே

அந்திப் பிறையொடு கொன்றைச் சரமணி

..... செம்பொற் சடைவிடை வென்றிக் கொடிமிசை

.. அலைக்கு நதிமுடி மலைக்கு மகளுட

..... லருத்த மெரிவிழி இருக்கு மழகிய .. பெருமானே.


பதம் பிரித்து:

இந்தப் புவிதனில் வந்து, இப்பிறவியில்

..... முந்தைப் புரி வினை துன்பத் தொடர் தர

.. இளைத்து, மிகு பிணி வருத்த, இழிவினை

..... இழைத்து நிதம் மிக அலுத்து, வழிதனை .. அறியாமல்

நொந்து, இத்துயர் அற வந்தித்திடும் ஒரு

..... சிந்தைத் திறன் இலி, அம் பொற்கழல் இணை

.. நுவற்சிதனை நினை மனத்தை அடைகிற

..... வரத்தை அருளிடின் நுனக்கு வரு குறை .. உளதோ சொல்!

பந்தத் திருமணம் ஒன்றைத் தடைசெய

..... அன்று அச் சுவடியை முன்பு இட்டு, அது ஒரு

.. படிச் சுவடி என வழக்கில் உரைசெய்து,

..... தனக்கு அடிமை என முடித்து, மிக அருள் .. புரிவோனே!

அந்திப் பிறையொடு கொன்றைச் சரம் அணி

..... செம் பொற்சடை, விடை வென்றிக் கொடிமிசை,

.. அலைக்கும் நதி முடி, மலைக்கு மகள் உடல்

..... அருத்தம், எரி விழி, இருக்கும் அழகிய .. பெருமானே.


* (3-ஆம் அடி சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு அருள்புரிந்ததைச் சுட்டியது).


இந்தப் புவிதனில் வந்து - இந்த உலகில் பிறந்து;

இப்பிறவியில் முந்தைப் புரி வினை துன்பத் தொடர் தர இளைத்து, மிகு பிணி வருத்த - முன்பு செய்த வினைகள் இப்பிறவியில் இடையறாத துன்பத்தைத் தர, அதனால் தளர்ந்து, மிகுந்த பிணியும் வருத்த;

இழி வினை இழைத்து நிதம் - மேலும் இழிவான வினைகளே எப்பொழுதும் செய்து;

மிக அலுத்து, வழிதனை அறியாமல் நொந்து - மிகவும் சலிப்படைந்து, நல்ல வழியை அறியாமல் மனம் நொந்து;

இத்துயர் அற வந்தித்திடும் ஒரு சிந்தைத் திறன் இலி - இந்தத் துயரைப் போக்க உன்னை வணங்குகின்ற எண்ணம் இல்லாத அடியேனும்; (வந்தித்தல் - வணங்குதல்; வாழ்த்துதல்); (சிந்தை - மனம்); (திறன் - வலிமை); (இலி - இல்லாதவனான நானும்; உம்மைத்தொகை; உம் - இழிவுசிறப்பும்மை); ("திடமிலிசற் குணமிலி" - திருப்புகழ் - பழநி);

அம் பொற்கழல் இணை நுவற்சிதனை நினை மனத்தை அடைகிற வரத்தை அருளிடின் நுனக்கு வரு குறை உளதோ சொல் - உன்னுடைய அழகிய பொன்னடியைப் புகழ்வதை நினைக்கின்ற மனத்தைப் பெறுகிற வரத்தை (எனக்கு) அருளினால் உனக்கு அதனால் ஏதாவது குறைவு ஆகுமோ? (அம் - அழகிய); (நுவற்சி - சொல்லுதல்); (வருகுறை - வரும் குறை); (அருளிடினுனக்கு - அருளிடின் நுனக்கு/உனக்கு; நுனக்கு = உனக்கு); (சுந்தரர் தேவாரம் - 7.65.3 - "மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்கு"); (சுந்தரர் தேவாரம் - 7.70.6: "ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே");

பந்தத் திருமணம் ன்றைத் தடைசெய அன்று - பிணைப்புகளை உருவாக்கும் திருமணம் ஒன்றைத் தடுப்பதற்காக, முன்பு அந்தத் திருமண நாளில் (பந்தலினுள் புகுந்து);

அச் சுவடியை முன்பு இட்டு - அந்த (அடிமைப்) பத்திரத்தைப் பலர்முன் காட்டி;

முன்பு இட்து ஒரு படிச் சுவடி என வழக்கில் உரைசெய்து - (அதனைச் சுந்தரர் பிடுங்கி அழித்தபின், வழக்குத் தொடுத்து, அவ்வழக்கில்) முன்பு மணப்பந்தலில் காட்டியது ஒரு பிரதி ஓலை என்று சொல்லி (வேறு ஒரு மூல ஓலையைக் காட்டி விளையாடி); ("முன்பு இட்டு" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (படிச் சுவடி - பிரதி ஓலை);

னக்கு அடிமை என முடித்து, மிக அருள் புரிவோனே - (சுந்தரரைத்) தனக்கு அடிமை என நிரூபித்து, மிகவும் அருள்செய்பவனே;

அந்திப் பிறையொடு கொன்றைச் சரம் அணி செம் பொற்சடை - மாலையில் தோன்றும் பிறைச்சந்திரனையும் கொன்றை மாலையையும் அணிந்த செம்பொற்சடையும்;

விடை வென்றிக் கொடிமிசை - இடபம் பொறிக்கப்பெற்றிருக்கும் வெற்றிக்கொடியும்; (வென்றி - வெற்றி);

அலைக்கும் நதி முடி - அலைக்கின்ற கங்கையைத் தரித்த சென்னியும்;

மலைக்கு மகள் உடல் அருத்தம் - பார்வதி உடலில் பாதி எனவும்; (அருத்தம் - ardham - பாதி);

எரி விழி இருக்கும் அழகிய பெருமானே - எரிக்கும் நெற்றிக்கண்ணும் உடைய அழகிய சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1. "விந்துப் புளகித இன்புற் றுருகிட" - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நமக்குக் கிட்டியவற்றுள் சந்த அமைப்பிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட பாடல் இதுவாகும்.

https://www.kaumaram.com/thiru/nnt0444_u.html


-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment