Saturday, May 30, 2020

03.05.060 – இடைமருதூர் - மெய்யை வளர்வழி - (வண்ணம்)

03.05.060 – இடைமருதூர் - மெய்யை வளர்வழி - (வண்ணம்)

2009-01-04

3.5.60) மெய்யை வளர்வழி - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தனதன தனதன .. தனதான )


மெய்யை வளர்வழி அதுநினை .. மனமாகி

.. வெய்ய வினைதனை மலையென .. மிகுமாறு

செய்ய விழைகிற சிறுமையை .. உடையேனும்

.. செவ்வி மிகுமடி இணைதொழ .. அருளாயே

பெய்யு(ம்) மழையெனும் வடிவமும் .. உடையானே

.. பிள்ளை மதியொடு நதியணி .. சடையானே

கொய்யு(ம்) மலர்மலி பொழிலிடை .. மருதூரில்

.. கொவ்வை இதழுமை யுடனுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மெய்யை வளர் வழி அது நினை மனமாகி,

.. வெய்ய வினைதனை மலை என மிகுமாறு

செய்ய விழைகிற சிறுமையை உடையேனும்

.. செவ்வி மிகும் அடி-இணை தொழ அருளாயே;

பெய்யும் மழை எனும் வடிவமும் உடையானே;

.. பிள்ளை மதியொடு நதி அணி சடையானே;

கொய்யும் மலர் மலி பொழில் இடைமருதூரில்

.. கொவ்வை-இதழ் உமையுடன் உறை பெருமானே.


மெய்யை வளர் வழி அது நினை மனமாகி - உடலைப் பேணுவதையே எப்பொழுதும் எண்ணும் மனத்தினன் ஆகி; (மெய் - உடல்);

வெய்ய வினைனை மலை என மிகுமாறு செய்ய விழைகிற சிறுமையை உடையேனும் - கொடிய வினையை மலைபோல் மிகும்படி செய்ய விரும்புகின்ற சிறுமையை உடைய நானும்; (வெய்ய - சுடுகின்ற; கொடிய);

செவ்வி மிகும் அடி-இணை தொழ அருளாயே - அழகும் வாசனையும் மிகும் உன் இரு திருவடிகளைத் தொழுவதற்கு அருள்வாயாக; (செவ்வி - அழகு; வாசனை);

பெய்யும் மழை எனும் வடிவமும் உடையானே - பெய்கின்ற மழை என்ற வடிவத்தையும் உடையவனே; (அப்பர் தேவாரம் - 6.50.6: "மழையா யெங்கும் பெய்வானை");

பிள்ளை மதியொடு நதிணி சடையானே - பிறைச்சந்திரனையும் கங்கையையும் சடையில் அணிந்தவனே; (பிள்ளை மதி - இளம்பிறைச்சந்திரன்);

கொய்யும் மலர் மலி பொழில் இடைமருதூரில் கொவ்வை இதழ் உமையுடன் உறை பெருமானே - பறிக்கும் பூக்கள் மிகுந்த சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் கொவ்வைக்கனி போல் சிவந்த வாயையுடைய உமையுடன் உறைகின்ற பெருமானே. (கொவ்வை - கொவ்வைக்கனி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment