Saturday, May 23, 2020

03.04.085 - சிவன் - கயிறு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-12-09

03.04.085 - சிவன் - கயிறு - சிலேடை

-------------------------------------------------------

சென்னிசே ரப்புரியும் நாரியையும் செம்பொருள்

உன்னில் உதவும் ஒருபந்தம் - இன்னிலை

ஆக்கும் அரவமார் ஆகமல்லி ருக்குமருள்

ஆர்க்குநல்கும் ஆலன் கயிறு.


சொற்பொருள்:

புரி - கயிறு, முறுக்கிய கயிறு; (ஆகுபெயராகப் புரிமணை, சும்மாடு இவற்றைச் சுட்டியது; புரிமணை - பாண்டம் வைத்தற்கு வைக்கோல், கயிறு இவற்றால் சுற்றியமைத்த பீடம்);

புரிதல் - விரும்புதல்;

நார் - மட்டை முதலியவற்றின் நார்;

நாரி - பெண்;

இயைதல் - பொருந்துதல்; இணங்குதல்; நிரம்புதல்; ஒத்தல்;

இன்னிலை - 1. இன் நிலை; (இன் - இனிய); / 2. இல் நிலை; (இல் - இல்லாத);

நிலை - உறுதி; நிலைமை;

ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்;

ஆகம் - மேனி;

அல் - இரவு; இருள்;

மல் - வலிமை;

மருள் - மயக்கம்;

ஆர்க்கும் - யாருக்கும்;

ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;


கயிறு:

சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் செம்பொருள்;

உன்னில் உதவும், ஒரு பந்தம் - இன் நிலை

ஆக்கும்; அரவம் ஆர் ஆகம் அல் இருக்கும்; மருள்

ஆர்க்கும் நல்கும்; ஆலன் கயிறு.

சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் செம்பொருள் - தலையில் சேர்கிnற அந்தப் "புரி" என்பதும் நாரால் ஆன செந்நிறம் திகழும் பொருள்; (இங்கே புரி - ஆகுபெயராகப் புரிமணை / சும்மாடு இவற்றைச் சுட்டியது);

உன்னில் உதவும், ஒரு பந்தம் இன்-நிலை ஆக்கும் - சிந்தித்துப் பார்த்தால், அது மிகவும் பயனுள்ள பொருள், எந்தக் கட்டையும் (முடிச்சையும்) அவிழாதவண்னம் நல்லபடி ஆக்கும்;

அரவம் ஆர் ஆகம் அல் இருக்கும் - பாம்பு போல் அதன் உருவம் இருளில் இருக்கும்;

மருள் ஆர்க்கும் நல்கும் - அப்படி அஃது எவருக்கும் மயக்கம் உண்டாக்கும்;

கயிறு.


சிவன்:

சென்னி சேரப் புரியும் நாரியையும்; செம்பொருள்;

உன்னில் உதவும், ஒரு பந்தம் - இல் நிலை

ஆக்கும்; அரவம் ஆர் ஆகம் மல் இருக்கும்; அருள்

ஆர்க்கும் நல்கும்; ஆலன் கயிறு.

சென்னி சேரப் புரியும் நாரியையும் - கங்கையையும் தன் முடிமேல் வைக்க விரும்புவான்;

செம்பொருள் - மெய்ப்பொருள்;

உன்னில் உதவும், ஒரு பந்தம் இல்-நிலை ஆக்கும் - தியானிப்போர்க்கு எவ்வித பந்தமும் இல்லாத நிலையைத் தருவான்;

அரவம் ஆர் ஆகம் மல் இருக்கும் - பாம்புகள் பொருந்தி இருக்கும் திருமேனி வலிமை மிக்கிருக்கும்;

அருள் ஆர்க்கும் நல்கும் - வழிபடும் எவருக்கும் அருள் கொடுப்பவன்;

ஆலன் - ஆலநீழலில் வீற்றிருப்பவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment