Tuesday, May 26, 2020

03.05.056 – பொது - கற்பதைப் புறக்கணித்து - (வண்ணம்)

03.05.056 – பொது - கற்பதைப் புறக்கணித்து - (வண்ணம்)

2008-12-31

3.5.56 - கற்பதைப் புறக்கணித்து - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தனத் தனத்தனத் .. தனதான )


கற்பதைப் புறக்கணித் .. தறியாமை

.. கப்பிடப் பவத்தினைத் .. தருபாவம்

வெற்பெனப் பெருக்குமிச் .. சிறியேனும்

.. மித்தையற் றுனைத்தொழற் .. கருளாயே

நற்பதத் தினைக்கருத் .. தினில்நாளும்

.. நச்சிவைத் தவர்க்கினித் .. திடுநாதா

சொற்பதத் தினுக்ககப் .. படலாகாய்

.. சுத்தபொற் சடைப்பிறைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கற்பதைப் புறக்கணித்து அறியாமை

.. கப்பிடப் பவத்தினைத் தரு பாவம்

வெற்பு எனப் பெருக்கும் இச் சிறியேனும்

.. மித்தை அற்று உனைத் தொழற்கு அருளாயே;

நற்பதத்தினைக் கருத்தினில் நாளும்

.. நச்சி வைத்தவர்க்கு இனித்திடும் நாதா;

சொற்பதத்தினுக்கு அகப்படல் ஆகாய்;

.. சுத்த; பொற்சடைப்பிறைப் பெருமானே.


கற்பதைப் புறக்கணித்து அறியாமை ப்பிடப் - அறியவேண்டியவற்றை அறிய நினையாததால், அறியாமை சூழ்ந்து என்னை மூட; (கப்புதல் - மூடுதல்);

பவத்தினைத் தரு பாவம் வெற்பு எனப் பெருக்கும் இச் சிறியேனும் - அதனால், பிறவிகளைத் தருகின்ற வினைகளை மலைபோலப் பெருக்குகின்ற சிறுமையுடைய அடியேனும்; (பவம் - பிறப்பு);

மித்தைற்றுனைத் தொழற்கு அருளாயே - என் அறியாமை நீங்கி உன்னை வழிபடுமாறு அருள்வாயாக; (மித்தை - மித்யை - பொய்);

நற்பதத்தினைக் கருத்தினில் நாளும் நச்சி வைத்தவர்க்கு இனித்திடும் நாதா - நல்ல திருவடியை மனத்தில் என்றும் விரும்பித் தரித்த பக்தர்களுக்கு இனிக்கின்ற நாதனே; (நச்சுதல் - விரும்புதல்);

சொற்பதத்தினுக்கு அகப்படல் ஆகாய் - சொற்பதம் கடந்தவனே; (சொற்பதம் - சொல்லாற் குறிக்கப்படும் நிலை); (அகப்படுதல் - உள்ளாதல்);

சுத்த - சுத்தனே - தூயவனே;

பொற்சடைப்பிறைப் பெருமானே - பொற்சடையில் பிறையைச் சூடிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment