Thursday, May 28, 2020

03.05.058 – பொது - முடிமிசை நீலமயிர் - (வண்ணம்)

03.05.058 – பொது - முடிமிசை நீலமயிர் - (வண்ணம்)

2009-01-01

3.5.58) முடிமிசை நீலமயிர் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான )

(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


முடிமிசை நீல மயிர்நரை யாகி

..... முதுமையும் ஏறி .. அதனாலே

.. மொழிதடு மாற நமனது தூதர்

..... முடுகியி ழாமு .. னடியேனும்

கடியுல வாத தமிழ்மலி மாலை

..... கவினுறு தாளில் .. இடுவேனோ

.. கனல்மழு சூல(ம்) மறிதலை யோடு

..... கரதலம் ஏறும் .. அருளாளா

துடியிடை மாதை இணைபிரி யாது

..... துணிமதி சூடி .. வருவோனே

.. துளிநிறம் ஏறு மிடறொளி நீறு

..... துதைதிரு மேனி .. உடையானே

வடிவில தான ஒருபொரு ளாகி

..... வடிவுக ளாகும் .. இறையோனே

.. மணிவண னோடு மலரவன் நேட

..... வளரெரி யான .. பெருமானே.


பதம் பிரித்து:

முடிமிசை நீலமயிர் நரையாகி, முதுமையும் ஏறி .. அதனாலே

.. மொழி தடுமாற, நமனது தூதர் முடுகி இழாமுன், .. அடியேனும்

கடி உலவாத தமிழ்மலி மாலை கவினுறு தாளில் .. இடுவேனோ;

.. கனல்-மழு, சூலம், மறி, தலை-ஓடு கரதலம் ஏறும் .. அருளாளா;

துடி-இடை மாதை இணை பிரியாது, துணி-மதி சூடி .. வருவோனே;

.. துளி-நிறம் ஏறு மிடறு, ஒளி நீறு துதை திருமேனி .. உடையானே;

வடிவு இலதான ஒரு பொருள் ஆகி, வடிவுகள் ஆகும் .. இறையோனே;

.. மணிவணனோடு மலரவன் நேட வளர்-எரி ஆன .. பெருமானே.


முடிமிசை நீலமயிர் நரையாகி முதுமையும் ஏறி அதனாலே - தலையின்மேல் மயிர் கருமை நீங்கி நரைத்து, மூப்பும் கூடி அதனால்; (நீலம் - கறுப்பு);

மொழி தடுமாற நமனது தூதர் முடுகிழாமுன் அடியேனும் - என் உரை தடுமாறும்படி யமதூதர்கள் விரைந்து என்னை இழுத்துச்செல்வதன் முன்னமே நானும்; (முடுகுதல் - விரைந்துசெல்லுதல்; நெருங்கிவருதல்); (இழாமுன் - இழுப்பதன் முன்னம்);

கடிலவாத தமிழ்மலி மாலை கவினுறு தாளில் இடுவேனோ - என்றும் வாசனை குன்றாத தமிழ்ச்சொற்கள் நிறைந்த பாமாலையை உன் அழகிய திருவடியில் இட அருள்வாயாக; (கடி - வாசனை); (உலத்தல் - குறைதல்; அழிதல்); (கவின் - அழகு);

கனல்-மழு, சூலம், மறி, தலை-டு கரதலம் ஏறும் அருளாளா - சுடர்கின்ற மழுவையும் சூலத்தையும் மான்கன்றையும் மண்டையோட்டையும் கையில் ஏந்திய அருளாளனே; (மறி - மான்கன்று); (தலையோடு - மண்டையோடு);

துடியிடை மாதை இணைபிரியாது துணிமதி சூடி வருவோனே - உடுக்கை போன்ற இடையை உடைய உமையை ஒரு பாகமாக மகிழ்ந்து பிறைச்சந்திரனை அணிந்து வருபவனே; (துடி - உடுக்கை); ((துணி - துண்டம்);

துளி-நிறம் ஏறு மிடறு, ளி நீறு துதை திருமேனி உடையானே - ஆலகால விடத்தின் கருமை திகழும் கண்டத்தையும் ஒளிவீசும் திருநீறு படிந்த திருமேனியையும் உடையவனே; (துளி - விடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன்");

வடிவு இலதான ஒரு பொருள் ஆகி வடிவுகள் ஆகும் றையோனே - உருவமற்ற ஒப்பற்ற பொருள் ஆகியும் பல வடிவங்களை ஏற்பவனும் ஆன இறைவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.35.3 - "கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவு செய்தான் இடம்"); (சம்பந்தர் தேவாரம் - 1.9.5 - "நானாவித உருவால் நமை ஆள்வான்")

மணிவணனோடு மலரவன் நேட வளர் எரி ன பெருமானே - திருமாலும் பிரமனும் தேட ஓங்கிய சோதி ஆன பெருமானே; (மணிவணன் - மணிவண்ணன் - திருமால்); (மலரவன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment