Wednesday, May 27, 2020

03.05.057 – பொது - கொடியனவான வினை - (வண்ணம்)

03.05.057 – பொது - கொடியனவான வினை - (வண்ணம்)

2009-01-01

3.5.57) கொடியனவான வினை - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான )

(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


கொடியன வான வினைகெடு மாறு

..... குளிர்திரை சூழு(ம்) .. நிலமீது

.. குழுவொடு கூடி அடிமலர் மீது

..... கொழுமலர் தூவும் .. அவர்போல்நான்

பொடியணி மேனி தனிலொரு கூறு

..... புரிகுழ லாளை .. உடையானே

.. புகலென வான உனைமற வாது

..... புகழ்தமிழ் கூற .. அருளாயே

அடியிணை நாடி இசையொடு பாடி

..... அருமல ரோடு .. பலநாளும்

.. அளியொடு பூசை புரிகிற பாலன்

...... அவனுயிர் நாடி .. வருகாலன்

மடிவுறு மாறு நொடியினி லோடி

..... மலரடி மார்பில் .. உறவீசி

.. மறைமுனி வாழ அருளிய ஈச

..... மழவிடை ஏறு .. பெருமானே.


பதம் பிரித்து:

கொடியனவான வினை கெடுமாறு,

..... குளிர்-திரை சூழும் .. நிலம்-மீது

.. குழுவொடு கூடி, அடிமலர் மீது

..... கொழுமலர் தூவும் .. அவர்போல் நான்,

பொடி அணி மேனிதனில் ஒரு கூறு

..... புரி-குழலாளை .. உடையானே,

.. புகல் என ஆன உனை மறவாது

..... புகழ்-தமிழ் கூற .. அருளாயே;

அடியிணை நாடி இசையொடு பாடி

..... அரு-மலரோடு .. பல நாளும்

.. அளியொடு பூசை புரிகிற பாலன்

...... அவன் உயிர் நாடி .. வரு காலன்

மடிவு-உறுமாறு நொடியினில் ஓடி

..... மலரடி மார்பில் .. உற வீசி,

.. மறை-முனி வாழ அருளிய ஈச;

..... மழ-விடை ஏறு .. பெருமானே.


கொடியனவான வினை கெடுமாறு குளிர் திரை சூழும் நிலம் மீது குழுவொடு கூடி அடிமலர் மீது கொழுமலர் தூவும் அவர்போல் நான் - கொடிய வினையெல்லாம் அழியும்படி, குளிர்ந்த கடலால் சூழப்பெற்ற உலகில் அடியார் குழாத்தோடு சேர்ந்து உன் திருவடித்தாமரையில் சிறந்த பூக்களைத் தூவும் பக்தர்களைப் போல நானும்; (திரை - அலை; கடல்); (கொழு மலர் - செழிப்பான மலர்கள்);

பொடிணி மேனிதனில் ஒரு கூறு புரி குழலாளை உடையானே - திருநீற்றைப் பூசிய திருமேனியில் ஒரு பாகமாகச் சுருண்ட கூந்தலையுடைய உமையை உடையவனே; (பொடி - திருநீறு); (கூறு - பாகம்); (புரிதல் - சுருள்தல்; முறுக்குக்கொள்தல்); (குழள் - கூந்தல்);

புகல் என உனை மறவாது புகழ்-தமிழ் கூற அருளாயே - புகலிடமாக உள்ள உன்னை மறத்தல் இன்றி நினைந்து தமிழ்ப்பாமாலைகளை ஓதி வழிபட அருள்வாயாக; (புகல் - சரண்);

அடியிணை நாடி இசையொடு பாடி அரு-மலரோடு பல நாளும் அளியொடு பூசை புரிகிற பாலன் அன் உயிர் நாடி வரு காலன் - இரு திருவடிகளை விரும்பிப் பல நாளும் இசை பாடி நல்ல பூக்களைத் தூவி அன்போடு பூசை செய்த சிறுவர் மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல வந்தடைந்த காலனே; (நாடுதல் - விரும்புதல்; அணுகுதல்/கிட்டுதல்; நினைத்தல்); (அளி - அன்பு); (பாலன் - சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்);

மடிவு உறுமாறு நொடியினில் ஓடி மலரடி மார்பில் உற வீசி - இறக்கும்படி க்ஷணப் பொழுதில் அங்கே தோன்றி மலர் போன்ற திருவடியைக் காலன் மார்பில் படும்படி வீசி உதைத்து;

மறை-முனி வாழ அருளிய ஈச - மறைமுனிவரான மார்க்கண்டேயர் உயிர்வாழ அருளிய ஈசனே;

மழ விடை ஏறு பெருமானே - இளைய இடபத்தை வாகனமாக உடைய பெருமானே; (மழ - இளைய);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment