Saturday, March 1, 2025

P.357 - பைஞ்ஞீலி - புயலார் கண்டனை

2016-09-30

P.357 - பைஞ்ஞீலி

---------------------------------

(வஞ்சித்துறை - மா கூவிளம் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.90.1 - "அரனை உள்குவீர்")


1)

புயலார் கண்டனை

வயலார் ஞீலியில்

அயரா தேத்தினால்

துயர்போய் இன்பமே.


புயல் ஆர் கண்டனை - மேகம் போன்ற நீலகண்டம் உடையவனை;

வயல் ஆர் ஞீலியில் - வயல்கள் நிறைந்த திருப்பைஞ்ஞீலியில்; (ஞீலி - திருப்பைஞ்ஞீலி); (அப்பர் தேவாரம் - 5.41.10 - "எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே");

அயராது ஏத்தினால் - மறவாது தொழுதால்; (அயர்தல் - மறத்தல்; தளர்தல்);

துயர் போய் இன்பமே - துன்பங்கள் நீங்கி இன்பம் வந்தடையும்;


2)

மழையார் கண்டனே

அழகார் ஞீலியிற்

குழகா என்றடி

தொழலே இன்பமே.


மழை ஆர் கண்டனே - மேகம் போன்ற நீலகண்டம் உடையவனே;

அழகு ஆர் ஞீலியில் குழகா - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும் இளைஞனே; (குழகன் - இளைஞன்; அழகன்);

என்று அடி தொழலே இன்பமே - என்று திருவடியை வணங்குவதே இன்பம்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.4 - "இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே");


3)

மையார் கண்டனே

செய்யார் ஞீலியில்

ஐயா என்பவர்

எய்யார் என்றுமே.


மை ஆர் கண்டனே - நீலகண்டனே;

செய் ஆர் ஞீலியில் ஐயா என்பவர் - வயல் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் உறையும் தலைவனே என்று வாழ்த்துபவர்கள்; (செய் - வயல்);

எய்யார் என்றுமே - எந்நாளும் வருத்தம் அடையார்; (எய்த்தல் - இளைத்தல்; குறைவுறுதல்);


4)

செவியோர் தோடனே

கவினார் ஞீலியிற்

சிவனே என்பவர்

தவியார் மண்ணிலே.


செவி ஓர் தோடனே - ஒரு காதில் தோடு அணிந்தவனே - அர்த்தநாரீஸ்வரனே; (சம்பந்தர் தேவாரம் - 3.78.4 - "உடல் செய்யர் செவியில் தோடர்");

கவின் ஆர் ஞீலியில் சிவனே என்பவர் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும் சிவனே என்று வாழ்த்துபவர்கள்; (கவின் - அழகு);

தவியார் மண்ணிலே - இவ்வுலகில் துன்புறமாட்டார்கள்;


5)

நீரார் வேணியான்

ஏரார் ஞீலியான்

சீரே செப்பினால்

தீரா இன்பமே.


நீர் ஆர் வேணியான் - கங்கைச்சடையான்; (வேணி - சடை);

ஏர் ஆர் ஞீலியான் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறைபவன்; (ஏர் - அழகு);

சீரே செப்பினால் - புகழையே பாடினால்;

தீரா இன்பமே - வற்றாத இன்பமே;


6)

எழுதா ஓத்தினார்

உழவார் ஞீலியார்

மழுவார் தாளிணை

தொழுவார் தொண்டரே.


எழுதா ஓத்தினார் - எழுதா மறைகளை ஓதியவர்; எழுதா மறைகளின் பொருள் ஆனவர்; (ஓத்து - வேதம்);

உழவு ஆர் ஞீலியார் - வேளாண்மை நிறைந்த திருப்பைஞ்ஞீலியில் உறைபவர்;

மழுவார் - மழுவை ஏந்தியவர்;

தாளிணை தொழுவார் தொண்டரே - அப்பெருமானாரின் இரு-திருவடிகளைத் தொழுபவர்கள் தொண்டர்கள்;


7)

மானை ஏந்திய

கோனை ஞீலியெம்

மானை வாழ்த்தினார்

வானை ஆள்வரே.


மானை ஏந்திய கோனை - கையில் மானை ஏந்திய தலைவனை;

ஞீலி எம்மானை வாழ்த்தினார் - திருப்பைஞ்ஞீலியில் உறையும் எம்பெருமானை வாழ்த்தியவர்கள்;

வானை ஆள்வரே - மறுமையில் வானுலகை ஆள்வார்கள்;


8)

பத்துச் சென்னியான்

கத்த ஊன்றினார்

நித்தர் ஞீலியார்

பத்தர் வாழ்வரே.


பத்துச்-சென்னியான் கத்த ஊன்றினார் - பத்துத்-தலைகள் உடைய இராவணன் அலறும்படி விரலை மலைமேல் ஊன்றியவர்;

நித்தர் ஞீலியார் - அழிவற்றவர், திருப்பைஞ்ஞீலியில் உறைபவர்; (நித்தர் - என்றும் இருக்கும் சிவபெருமானார்);

பத்தர் வாழ்வரே - அப்பெருமானாரின் அடியவர்கள் இன்புற்று வாழ்வார்கள்;


9)

அரிவே தன்தொழும்

எரியே ஞீலியாய்

பெரியாய் என்பவர்

பிரியார் இன்பமே.


அரி வேதன் தொழும் எரியே - திருமாலும் பிரமனும் போற்றும் ஜோதியே;

ஞீலியாய் - திருப்பைஞ்ஞீலியில் உறைபவனே;

பெரியாய் என்பவர் பிரியார் இன்பமே - மகாதேவனே என்று வாழ்த்தும் அன்பர்கள் என்றும் இன்பத்தை நீங்கமாட்டார்கள்; (பெரியாய் - பெரியவனே);


10)

பொய்யர் சொல்விடும்

ஐயன் ஞீலியிற்

செய்யன் தாள்தொழல்

உய்யும் மார்க்கமே.


பொய்யர் சொல் விடும் - பொய்யர்களின் பேச்சை மதியாது நீங்குங்கள்;

ஐயன் ஞீலியிற் செய்யன் - தலைவன், திருப்பைஞ்ஞீலியில் உறையும் செம்மேனியன்; (செய் - சிவப்பு);

தாள் தொழல் உய்யும் மார்க்கமே - அப்பெருமானின் திருவடிகளை வணங்குவதே உய்தி பெறும் வழி ஆகும்;


11)

மணியார் கண்டனை

அணியார் ஞீலியில்

பணியார் மார்பனைப்

பணிவார் நல்லரே.


மணி ஆர் கண்டனை - நீலமணி போன்ற கண்டம் உடையவனை;

அணி ஆர் ஞீலியில் - அழகிய திருப்பைஞ்ஞீலியில் உறையும்;

பணி ஆர் மார்பனைப் - மார்பில் பாம்பை (மாலையாக) அணிந்தவனை; (பணி - நாகம்);

பணிவார் நல்லரே - எப்பெருமானைப் பணிந்து போற்றும் அன்பர்கள் நல்லவர்கள் (புண்ணியச் செல்வர்கள்) ஆவர்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.41.2 - "பைஞ்ஞீலி எம் அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Friday, February 28, 2025

P.356 - வான்மியூர் - ஏகமாகி நின்றவன்

2016-09-24

P.356 - வான்மியூர்

---------------------------------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா - அரையடி)

(சம்பந்தர் தேவாரம் - 3.52.1 - "வீடலால வாயிலாய்")


1)

ஏக மாகி நின்றவன் ஏல(ம்) நாறும் ஓதியாள்

பாக மாய பண்பினான் பாலு(ம்) நெய்யும் ஆடினான்

வாக னங்கள் மல்கிய வான்மி யூரில் மேயவன்

நாக நாண னைத்தொழ நன்மை நம்மை நண்ணுமே.


ஏகம் ஆகி நின்றவன் - ஒருவனாகியவன்;

ஏலம் நாறும் ஓதியாள் பாகம் ஆய பண்பினான் - மயிர்ச்சாந்து மணம் கமழும் கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (ஏலம் - மயிர்ச்சாந்து); (ஓதி - பெண்களின் கூந்தல்);

பாலும் நெய்யும் ஆடினான் - பாலாலும் நெய்யாலும் அபிஷேகம் செய்யப்படுபவன்;

வாகனங்கள் மல்கிய வான்மியூரில் மேயவன் - வாகனங்கள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்றவன்; (மல்குதல் - அதிகமாதல்; நிறைதல்);

நாக நாணனைத் தொழ நன்மை நம்மை நண்ணுமே - பாம்பை அரைநாணாக (& மேருவில்லில் நாணாக) உடைய சிவபெருமானைத் தொழுதால், நம்மை நன்மைகள் வந்தடையும்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "பாம்பரை நாணனை");


2)

மானை ஏந்து கையனை மார்பில் நீறு பூசியைத்

தேனெய் ஆடும் ஈசனைச் சேவ தேறு செல்வனை

வானை எட்டு கட்டடம் மல்கு வான்மி யூர்தனில்

கோனை நாளும் வாழ்த்தினால் குற்ற மற்ற இன்பமே.


நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்;

தேனெய் ஆடும் - தேன் நெய் ஆடும் - தேனாலும் நெய்யாலும் அபிஷேகம் செய்யப்படுகின்ற;

சேவது ஏறு செல்வனை - இடபத்தை ஊர்தியாக உடைய செல்வனை; (சே - இடபம்);

வானை எட்டு கட்டடம் - வானளாவிய கட்டடங்கள்;

கோன் - தலைவன்;


3)

வேலை நஞ்சு கண்டுவான் வேண்டி நிற்க உண்டருள்

நீல கண்டன் எம்பிரான் நெற்றி மேலொர் கண்ணினான்

மாலை வான்நி றத்தினான் வான்மி யூரில் மேயவன்

சூல பாணி தாள்தொழும் தொண்டர் துன்பம் நீங்குமே.


வேலை-நஞ்சு - கடல்-விடம்;

வான் - தேவர்கள்;

மாலை-வான் நிறத்தினான் - அந்திப்பொழுதில் விளங்கும் செவ்வானம் போன்ற நிறமுடையவன்;


4)

வெங்க ளிற்றைப் போரினில் வென்று தோலு ரித்தவன்

பொங்க ராவை மாலையாப் பூணு கின்ற மார்பினான்

வங்கம் ஆர்க டற்கரை வான்மி யூரில் மேயவன்

அங்க ணன்ப தந்தொழும் அன்பர் அல்லல் தீருமே.


வெங்களிற்றை - கொடிய யானையை;

பொங்கு அராவை மாலையாப் பூணுகின்ற மார்பினான் - சீறும் பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவன்;

வங்கம் ஆர் கடற்கரை - அலை மிகுந்த (& படகுகள் நிறைந்த) கடலின் கரையில்; (வங்கம் - அலை; படகு; மரக்கலம்); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவபெருமான்;

பதம் - பாதம்; திருவடி;


5)

மண்டு காத லாலொரு மங்கை பங்கன் ஆயினான்

அண்டர் போற்றும் ஓரிறை அண்டி னார்க்கு நற்றுணை

வண்டி மல்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்

தொண்டர் தங்கள் வாழ்வினில் துன்பம் என்ப தில்லையே.


மண்டு காதலால் ஒரு மங்கைபங்கன் ஆயினான் - மிகுந்த அன்பினால் தன் மேனியில் ஒரு பாதியை உமைக்குத் தந்தவன்; (மண்டுதல் - அதிகமாதல்; மிகுதல்);

அண்டர் போற்றும் ஓர் இறை - தேவர்கள் வணங்கும் ஒப்பற்ற தலைவன்; (அண்டர் - தேவர்); (ஒரு - ஒப்பற்ற);

அண்டினார்க்கு நற்றுணை - தன்னைச் சரண்-அடைந்தவர்களுக்கு நல்ல துணை; (அண்டுதல் - சரண்புகுதல்; ஆசிரயித்தல்);

வண்டி மல்கு வீதி சூழ் வான்மியூரில் மேயவன் - வாகனங்கள் நிறைந்த வீதிகள் சூழ்ந்த திருவான்மியூரில் உறைகின்றவன்;

தொண்டர்-தங்கள் வாழ்வினில் துன்பம் என்பது இல்லையே - அப்பெருமானுக்குத் திருத்தொண்டு செய்பவர்களது வாழ்க்கையில் துன்பமே இல்லை;


6)

ஆட வல்ல நாயகன் அங்கொர் ஓட்டில் உண்பலி

நாட வல்ல நம்பிரான் நக்க ரண்கள் சுட்டவன்

மாடம் ஓங்கு வீதிசூழ் வான்மி யூரில் மேயவன்

ஆட கப்ப தந்தொழும் அன்பர் பீடை நீங்குமே.


ஆட வல்ல நாயகன் - கூத்தப்பெருமான்;

அங்கு ஒர் ஓட்டில் உண்பலி நாட வல்ல நம் பிரான் - ஒரு மண்டையோட்டில் பிச்சை ஏற்கின்ற நம் தலைவன்; (அங்கு - அசை); (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

நக்கு அரண்கள் சுட்டவன் - சிரித்து முப்புரங்களை எரித்தவன்;

மாடம் ஓங்கு வீதி சூழ் வான்மியூரில் மேயவன் - உயர்ந்த மாடங்கள் விளங்கும் திருவான்மியூரில் உறைகின்றவன்;

ஆடகப்-பதம் தொழும் அன்பர் பீடை நீங்குமே - அப்பெருமானின் பொற்பாதத்தை வணங்கும் பக்தர்களது கஷ்டங்கள் நீங்கும்; (ஆடகம் - பொன்);


7)

கோடி நாமம் உள்ளவன் கூற்று தைத்த தாளினான்

ஈடி லாத பெற்றியான் ஈரம் மிக்க வேணியான்

மாடி வீடு மல்கிய வான்மி யூரில் மேயவன்

தோடி லங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே.


கோடி நாமம் உள்ளவன் - எண்ணற்ற திருப்பெயர்கள் உடையவன்;

கூற்று உதைத்த தாளினான் - காலனைக் காலால் உதைத்தவன்;

ஈடு இலாத பெற்றியான் - ஒப்பற்ற பெருமை உடையவன்; (பெற்றி - பெருமை; இயல்பு);

ஈரம் மிக்க வேணியான் - அருள் மிக்கவன், சடையில் கங்கையை உடையவன்; (ஈரம் - நீர்ப்பற்று; அருள்); (வேணி - சடை); (சம்பந்தர் தேவாரம் - 3.53.3 - "ஈரமாய புன்சடை");

மாடி வீடு மல்கிய வான்மியூரில் மேயவன் - மாடிவீடுகள் நிறைந்த திருவான்மியூரில் உறைகின்றவன்;

தோடு இலங்கு காதினான் தொண்டர் அண்டம் ஆள்வரே - ஒரு காதில் தோடு அணிந்தவனான அர்த்தநாரீஸ்வரனுடைய அடியவர்கள் வானம் ஆளும் நன்னிலை பெறுவார்கள்;


8)

ஈசர் வெற்பெ டுத்தவன் ஏழி ரண்டொ டாறுதோள்

நாசம் ஆக ஓர்விரல் நாகம் மீது வைத்தவர்

வாசக் கொன்றை சூடினார் வான்மி யூரில் மேயவர்

தேச னார்ப தந்தனைச் சிந்தை செய்ய நன்மையே.


ஈசர் வெற்பு எடுத்தவன் ஏழிரண்டொடு ஆறு தோள் - ஈசனார் உறையும் கயிலைமலையைப் பெயர்க்கமுயன்ற இராவணனுடைய இருபது புஜங்களும்; (ஏழிரண்டொடு ஆறு = 7x2 + 6 = 20);

நாசம் ஆக ஓர் விரல் நாகம் மீது வைத்தவர் - அழியும்படி அம்மலையின்மேல் ஒரு விரலை ஊன்றியவர்; (நாகம் - மலை);

வாசக்-கொன்றை சூடினார் - நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவர்;

வான்மியூரில் மேயவர் - திருவான்மியூரில் உறைகின்றவர்;

தேசனார் பதந்தனைச் சிந்தை செய்ய நன்மையே - ஒளியுருவினர் ஆன அப்பெருமானாரின் திருவடியைத் தியானித்தால் நன்மை உண்டாகும்; (தேசன் - ஒளி வடிவினன்);


9)

அம்பு யத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே

எம்பி ரானெ மக்கருள் என்ன நின்ற சோதியான்

வம்பு நாறு கொன்றையான் வான்மி யூரில் மேயவன்

அம்பொ னார்ப தந்தொழும் அன்பர் இன்பர் ஆவரே.


அம்புயத்தன் அச்சுதன் அன்று நேடி வாடியே - தாமரைமலர்மேல் உறையும் பிரமனும் திருமாலும் முன்பு அடிமுடியைத் தேடி வாடி; (அம்புயத்தன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

"எம்பிரான் எமக்கு அருள்" என்ன நின்ற சோதியான் - "எம் தலைவனே! எமக்கு அருள்வாயாக" என்று துதிக்கும்படி ஜோதிவடிவில் நின்றவன்;

வம்பு நாறு கொன்றையான் - மணம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன்; (வம்பு - வாசனை); (நாறுதல் - மணம் வீசுதல்);

வான்மியூரில் மேயவன் அம்பொன் ஆர் பதம் தொழும் அன்பர் இன்பர் ஆவரே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுடைய அழகிய பொன் போன்ற திருவடியை வழிபடும் பக்தர்கள் இன்பம் அடைவார்கள்; (அம் - அழகு); (ஆர்தல் - ஒத்தல்);


10)

மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்பு றேன்மினீர்

இண்டை யாக வெண்மதி ஏறு கின்ற சென்னிமேல்

வண்ட மர்ந்த கொன்றையான் வான்மி யூரில் மேயவன்

தொண்ட மர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே.


மிண்டர் பேசு பொய்வலை வீழ்ந்து துன்புறேன்மின் நீர் - கல்நெஞ்சர்கள் பேசுகின்ற பொய்கள் என்ற வலையில் விழுந்து நீங்கள் துன்பம் அடையாதீர்கள்; (மிண்டர் - கல்நெஞ்சம் உடையவர்கள்; அறிவில்லாதவர்கள்);

இண்டையாக வெண்மதி ஏறுகின்ற சென்னிமேல் - இண்டைமாலை போல வெண்பிறை இருக்கும் திருமுடிமேல்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

வண்டு அமர்ந்த கொன்றையான் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலரைச் சூடியவன்; (அமர்தல் - விரும்புதல்);

வான்மியூரில் மேயவன் தொண்டு அமர்ந்த நெஞ்சரைச் சூழும் இன்பம் என்றுமே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுக்குத் தொண்டு செய்ய விரும்பிய மனம் உடையவர்களை என்றும் இன்பமே சூழும்;


11)

காண லற்ற தன்மையைக் காம னுக்க ளித்தவன்

பூண லாஅ ராக்களைப் பூண்க ளாக ஏற்றவன்

வாணி லாவ ணிந்தவன் வான்மி யூரில் மேயவன்

தாணி லாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே.


காணல் அற்ற தன்மையைக் காமனுக்கு அளித்தவன் - மன்மதனை யார் கண்ணுக்கும் புலப்படாதபடி செய்தவன் (= அவனை எரித்துப், பின் உருவமின்றி வாழுமாறு அவனை உயிர்ப்பித்தவன்);

பூண் அலா அராக்களைப் பூண்களாக ஏற்றவன் - யாராலும் ஆபரணமாக அணிய ஆகாத பாம்புகளை அணிந்தவன்; (பூண் - ஆபரணம்); (அலா - அல்லா); (அரா - பாம்பு); (அப்பர் தேவாரம் - 6.11.6 - "பூணலாப் பூணானை");

வாள்-நிலா அணிந்தவன் - ஒளி பொருந்திய சந்திரனை அணிந்தவன்; (வாள் - ஒளி); (வாணிலா = வாள் நிலா);

வான்மியூரில் மேயவன் தாள் நிலாவு நெஞ்சரைச் சாரும் இன்பம் என்றுமே - திருவான்மியூரில் உறைகின்ற பெருமானுடைய திருவடிகளைத் தியானிக்கும் மனம் உடையவர்களை என்றும் இன்பமே அடையும்; (தாணிலாவு - தாள் நிலாவு); (நிலாவுதல் - தியானித்தல்; நிலைத்திருத்தல்); (சார்தல் - சென்றடைதல்; பொருந்தியிருத்தல்);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, February 22, 2025

P.355 - ஆனைக்கா - நீரார் சடையுடையானை

2016-09-21

P.355 - ஆனைக்கா

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் கூவிளம் தேமா" - அரையடி அமைப்பு; * யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு")


1)

நீரார் சடையுடை யானை நெற்றியிற் கண்ணுடை யானைக்

காரார் மிடறுடை யானைக் காரிகை பங்குடை யானைக்

கூரார் மழுவுடை யானைக் கோணல் மதியணிந் தானைச்

சீரார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


நீர் ஆர் சடைடையானை - சடையில் கங்கையை அணிந்தவனை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

நெற்றியில் கண் உடையானைக் - நெற்றிக்கண்ணனை;

கார் ஆர் மிடறு உடையானைக் - நீலகண்டனை;

காரிகை பங்கு உடையானைக் - பெண்ணொரு பங்கனை;

கூர் ஆர் மழு உடையானைக் - கூரிய மழுவை ஏந்தியவனை;

கோணல் மதி அணிந்தானைச் - வளைந்த திங்களைச் சூடியவனை;

சீர் ஆர் திருவானைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - அழகிய, திரு மிகுந்த திருவானைக்காவில் உறையும் செல்வனை, மனமே நீ சிந்திப்பாயாக; (மனன் - மனம்);


2)

சொல்ல அரும்புக ழானைச் சொல்லி வழிபடு வார்க்கு

நல்ல கதியருள் வானை நக்கு மதிலெரித் தானை

அல்லிற் கணம்புடை சூழ ஆடி மகிழ்பெரு மானைச்

செல்வத் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


நக்கு - சிரித்து;

அல் - இரவு;

கணம் - பூதகணங்கள்;


3)

வெங்கா னிடைநடம் ஆடும் விகிர்தனைத் தேவர்கள் எல்லாம்

எங்கோன் எனஅடி போற்றும் இறைவனை ஏந்திழை யாளைப்

பங்கா உடைய பரனைப் பால்மதி தன்னை அணாவும்

தெங்கார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வெங்கான் - சுடுகாடு;

விகிர்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;

ஏந்திழையாள் - உமாதேவி;

பங்கா - பங்காக;

அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்;

பால்மதி தன்னை அணாவும் தெங்கு ஆர் திருவானைக்காவில் - பால் போன்ற வெண்ணிறம் உள்ள சந்திரனை நெருங்கும்படி உயர்ந்த தென்னைமரங்கள் நிறைந்த திருவானைக்காவில்;


4)

வெண்பொடி மேனியி னானை வெள்விடை ஊர்தியி னானைப்

பண்பொலி பாடல்கள் பாடிப் பாத இணைதொழு வார்க்கு

விண்பொலி வாழ்வருள் வானை வெண்ணாவற் கீழிருந் தானைத்

தெண்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வெண்பொடி - திருநீறு;

பண் பொலி பாடல்கள் - இசை பொருந்திய பாடல்கள்;

விண் பொலி வாழ்வு - விண்ணில் விளங்குகின்ற வாழ்வு;

வெண்ணாவற்கீழ் இருந்தானை - திருவானைக்காவில் வெண்ணாவல்-மரத்தின்கீழ் இருந்தவனை; (வெண்ணாவல்-மரம் - திருவானைக்காவில் தலவிருட்சம்);

தெண்-புனல் சூழ் - தெளிந்த நீரால் சூழப்பட்ட;


5)

தரையினிற் சக்கரம் இட்டுச் சலந்தர னைத்தடிந் தானை

அரையினிற் கச்சென நாகம் ஆர்த்த பெருமையி னானை

விரைகமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனைத்

திரைபுனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


தரையினில் சக்கரம் இட்டுச் சலந்தரனைத் தடிந்தானை - தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு சலந்தராசுரனை அழித்தவனை;

அரையினில் கச்சு என நாகம் ஆர்த்த பெருமையினானை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய பெருமை உடையவனை; (ஆர்த்தல் - கட்டுதல்);

விரை கமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனை - மணம் கமழும் பூக்களைத் தூவி யானை வழிபாடு செய்த தலைவனை; (* திருவானைக்காவின் தலவரலாறு);

திரை-புனல் சூழ் ஆனைக்காவில் - அலைமோதும் காவிரி சூழ்ந்த திருவானைக்காவில்; (திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்);


6)

எழும்பொழு தீசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும்

தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை மைம்மிடற் றானை

விழும்புனற் கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள் வானைச்

செழும்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


எழும்பொழுது ஈசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும் தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை - இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே துயிலெழும் பக்தர்களைத் தேவரும் வணங்கும்படி சிவலோகத்தில் வைக்கின்ற தூயவனை; (வான் - தேவர்கள்); (உம்பர் - மேலிடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "பெருமான் கழல் வாழ்க எனா எழுவாள்");

மைம் மிடற்றானை - நீலகண்டனை;

விழும் புனல்-கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள்வானைச் - வானிலிருந்து விரைந்து இழிந்த கங்கைநதியைச் செம்பொன் போன்ற சடையினுள்ளே ஒளித்தவனை; (வேணி - சடை);

செழும் புனல் சூழ் ஆனைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - வளம் மிக்க காவிரியால் சூழப்பட்ட திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக.


7)

கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடு வார்க்கருள் வானைப்

பூணா அரவணிந் தானைப் பொருப்பைச் சிலையா வளைத்து

நாணா அரவினைக் கட்டி நள்ளார் புரமெரித் தானைச்

சேணார் மதிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடுவார்க்கு அருள்வானை - மனத்தில் வஞ்சம் இன்றி வழிபடும் அன்பருக்கு அருள்செய்பவனை; (கோணா - கோணாத; கோணுதல் - வளைதல்; நெறிபிறழ்தல்);

பூணா அரவு அணிந்தானை - பாம்பை ஆபரணமாக அணிந்தவனை; (பூணா - பூணாக; பூண் - அணி; ஆபரணம்);

பொருப்பைச் சிலையா வளைத்து - மலையை வில்லாக வளைத்து; (பொருப்பு - மலை); (சிலையா - சிலையாக; சிலை - வில்);

நாணா அரவினைக் கட்டி - (அந்த வில்லில்) பாம்பை நாணாகக் கட்டி;

நள்ளார் புரம் எரித்தானை - பகைவர்களுடைய முப்புரங்களை எரித்தவனை; (நள்ளார் - பகைவர்);

சேண் ஆர் மதில் ஆனைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - உயர்ந்த மதிலால் சூழப்பட்ட திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக. (சேண் - உயரம்);


8)

இகழும் மொழிகளைச் சொல்லி இருங்கயி லாயம் எடுத்த

தகவில் தசமுகன் கத்தத் தாள்விரல் ஊன்று பிரானைப்

புகழும் அடியவர் தங்கள் பொல்லா வினையறுப் பானைத்

திகழும் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


இரும்-கயிலாயம் எடுத்த - பெரிய கயிலைமலையைத் தூக்கிய;

தகவு இல் தசமுகன் கத்த - நற்குணம் இல்லாத இராவணன் கத்தும்படி;


9)

கோனார் எனவாது செய்த குளிர்மல ரானரி காணா

வானார் கனலுரு வானை மணிதிகழ் மாமிடற் றானை

மானார் கரமுடை யானை மார்பில்வெண் ணூலணிந் தானைத்

தேனார் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


"கோன் ஆர்?" என வாது செய்த குளிர்மலரான் அரி காணா - "தலைவன் யார்" என்று வாதிட்ட பிரமன் திருமால் இவர்களால் அடிமுடி காண இயலாத;

வான் ஆர் கனல் உருவானை - வானோங்கிய ஜோதிவடிவினனை;

மணி திகழ் மா மிடற்றானை - கரிய மணி திகழும் அழகிய கண்டனை;

மான் ஆர் கரம் உடையானை - கையில் மானை ஏந்தியவனை;

மார்பில் வெண்ணூல் அணிந்தானை - மார்பில் பூணூல் அணிந்தவனை;

தேன் ஆர் பொழில் ஆனைக்காவிற் செல்வனைச் சிந்தி மனனே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக. (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

ஒருவழி தன்னை உணரார் உளறிடும் பொய்களை எல்லாம்

பொருளென எண்ணி மயங்கேல் பூதப் படையுடை எம்மான்

அருளெனப் போற்றி வணங்கில் அல்லற் கடல்கடப் பிப்பான்

திருமலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


மயங்கேல் - மயங்காதே;

"பூதப்-படையுடை எம்மான்! அருள்!" எனப் போற்றி வணங்கில் அல்லற்-கடல் கடப்பிப்பான் - "பூதப்படை உடைய எம்மானே! அருள்க!" என்று போற்றி வணங்கினால் துன்பக்கடலைக் கடக்கச்செய்வான்;

திரு மலி தென் ஆனைக்காவிற் செழுநீர்த் திரள் ஆம் சிவனே - திரு மிக்க அழகிய ஆனைக்காவில் உறைகின்ற, செழுநீர்த் திரள் ஆன சிவபெருமான்; (அப்பர் தேவாரம் - 6.63.1 - "தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே");


11)

நீர்மலி செஞ்சடை மீது நீள்மதி பாம்பணிந் தானே

கார்மலி கண்டத்தி னானே கல்லால் நிழலினாய் என்று

பேர்பல சொல்லி வணங்கிற் பெருந்துணை ஆகிப் புரப்பான்

சீர்மலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


நீர் மலி செஞ்சடைமீது நீள்-மதி பாம்பு அணிந்தானே - "கங்கையை அணிந்த சடையின்மேல் பிறையையும் பாம்பையும் சூடியவனே;

கார் மலி கண்டத்தினானே - நீலகண்டனே;

கல்லால் நிழலினாய் என்று பேர்பல சொல்லி வணங்கில் - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருப்பவனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வணங்கினால்;

பெருந்-துணை ஆகிப் புரப்பான் - பெரிய துணை ஆகிக் காப்பவன்;

சீர் மலி தென்-ஆனைக்காவில் செழுநீர்த்-திரள் ஆம் சிவனே - சீர் மிகுந்த அழகிய ஆனைக்காவில் செழுநீர்த்திரள் ஆன சிவபெருமான்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • அறுசீர் விருத்தம் - விளம் கூவிளம் தேமா - அரையடி அமைப்பு;

  • அரையடியினுள் வெண்டளை அமையும். 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை தேவை இல்லை.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீர். ((i.e. எல்லா அடிகளிலும் 3-ஆம், 6-ஆம் சீர்கள் மாச்சீர்);

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு")

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்")


வி. சுப்பிரமணியன்

----------- --------------